ரஜினியின் சாணக்கிய அரசியல் வித்தியாசமானது! புளூ சட்டை மாறனின் பதிவு - மீண்டும் தொடங்கிய மோதல்
சென்னை: ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதை உன்னிப்பாகக் கவனித்து, அதைக் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன். ரஜினியின் ஒவ்வொரு அசைவையும், பேச்சையும் நக்கலடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் அவர் தனிப் பாதை வைத்துள்ளார். இந்நிலையில், ரஜினியின் சமீபத்திய பேட்டி குறித்து மாறன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு, ரஜினி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

ரஜினியின் அரசியல் பேச்சுக்கள்
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து, பின்னர் பின்வாங்கிய பிறகு, பொது இடங்களில் அரசியல் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து வந்தார். செய்தியாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளைக் கேட்டால், "நோ கமெண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், சினிமா விழாக்கள் மற்றும் அரசியல் அல்லாத மேடைகளில் மட்டும், தனது அரசியல் கருத்துக்களைப் பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திமுக விழாவில் கலந்துகொண்டபோது, "இந்த அமைச்சர்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறாரோ... பல ஓல்ட் ஸ்டூடென்ட்ஸ் கிளாஸ் ரூமை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்" என்று பேசி, துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களின் கோபத்திற்கு ஆளானார்.
சமீபத்தில் இளையராஜாவுக்குத் தமிழக அரசு எடுத்த பாராட்டு விழாவில்கூட, "2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே இருக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் புதிதாக வந்த கட்சிகள் என யாராக இருந்தாலும், 'வாங்க ஒரு கை பார்க்கலாம்' என நம்பிக்கையோடு ஸ்டாலின் இருக்கிறார்" எனப் பேசி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
ரஜினியின் கமெண்ட்ஸ்
இன்று, ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காகக் கேரளா செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினியிடம், நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். "நடிகர்களுக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?" என்று கேட்க, ரஜினி வழக்கம்போல, "நோ கமெண்ட்ஸ்" என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
புளூ சட்டை மாறனின் நக்கல் பதிவு
ரஜினியின் இந்தப் பேட்டியை, புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மீண்டும் ரஜினியை நக்கலடித்துள்ளார். அதில், "மற்றவர்கள் நடத்தும் அரசியல் சம்பந்தம் இல்லாத மேடைகளில்தான் அரசியல் பேசுவார்.. விமான நிலையத்தில் மைக் நீட்டினால் 'நோ கமெண்ட்ஸ்'... தட் இஸ் தலீவரின் சாணக்கிய தந்திரம்" எனப் பதிவிட்டு கிண்டல் செய்திருக்கிறார்.
புளூ சட்டை மாறன், ரஜினியை மட்டுமல்லாமல், மற்ற பிரபலங்களையும், படங்களையும் கடுமையாக விமர்சிப்பதில் பெயர் பெற்றவர். ஜெயிலர் படம் வெளியானபோது, ரஜினியை ஜெயிலர் படத்தின் போஸ்டர் வடிவில் வடிவமைத்து, "இந்த ஆளு மட்டும் இன்னும் பேசிக்கிட்டு இருக்காரு" என்று கிண்டல் செய்து ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தார். அதுபோல, பல படங்களில் பயன்படுத்தப்படும் க்ளிஷே காட்சிகளையும், பிரபலங்களின் செயல்களையும் அவர் தொடர்ந்து நக்கலடித்து வருகிறார்.
ரஜினியின் ரசிகர்கள் மாறனை எவ்வளவு திட்டினாலும், அவர் தனது விமர்சனப் பாணியிலிருந்து சற்றும் மாறவில்லை. ரஜினி பொதுவெளியில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், இனி புளூ சட்டை மாறனின் நக்கலுக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications