அடப்பாவிகளா! சலூனில் மாஸ்க் போட்டா ஆளே மாறி விடுவாங்களா? இது புது புரணியா இருக்கே.. சீரியல் கொடுமை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் முகத்திற்கு மாஸ்க் போட்டால் ஒரு நபர் அப்படியே இன்னொரு நபர் போல மாறிவிடலாம் என்று இன்றைய எபிசோடில் நடந்த அதிர வைத்த செயல் தான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக சீரியல் என்றாலே லாஜிக் பார்க்க கூடாது. அது அந்த வார டிஆர்பிக்கு தகுந்த மாதிரி தான் கதை போய்க் கொண்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சீரியலை சீரியஸாக பார்க்காவிட்டாலும் கொஞ்சம் ஆவது பார்க்கும் ரசிகர்களை முட்டாள் ஆக்காமல் எடுக்கலாம் என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கும்.

பொதுவாக இப்போது ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் கதாநாயகி கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவராகவும், கதாநாயகன் பணக்கார வீட்டு பையனாகவும் இருக்கிறார். இருவருக்கும் விருப்பமே இல்லாமல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திருமணம் நடக்கும். ஆனால் திருமணம் ஆன பிறகு கதாநாயகன் வீட்டிலேயே அவருடைய முறை பொண்ணோ அல்லது காதலியோ ஒருவர் சுற்றிக் கொண்டிருப்பார்.
அவர் கதாநாயகியையும் கதாநாயகனையும் சேர விடாமல் பிளான் போட்டு பிரச்சனை செய்து கொண்டே இருப்பார். அதிலிருந்து கதாநாயகிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கிறது. அந்த வரிசையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலும் ஒளிபரப்பானது.
செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடிகை அக்ஷிதா நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த சீரியலில் கதாநாயகியாக அமைதியின் சொரூபமாக நடித்துக் கொண்டிருக்கிறார். கதைப்படி ஏற்கனவே செல்லம்மாவிற்கு கல்யாணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் அவருடைய கணவர் குடிகாரன் என்பதால் செல்லம்மா கதாநாயகனின் வீட்டிற்கு வேலைக்கு வந்து இருக்கிறார்.
கதாநாயகன் கேரக்டரில் நடிகர் அர்னவ் நடித்து வருகிறார். அர்னவ் நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து இருந்த நிலையில் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. பிறகு திவ்யா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்னவ் ஜெயிலுக்கும் போயிட்டு வந்திருக்கிறார்.
இவர்களுடைய குடும்ப சண்டை ஒட்டுமொத்த இணையத்தையும் கதறவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஆதாரங்களை வெளியிடுகிறோம் என்று ஆடியோ ரெக்கார்டுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அதிலும் திவ்யா மற்றும் அர்னவ் இருவரின் சண்டைக்கு காரணம் கூட அக்ஷிதா என்று திவ்யா அந்த நேரத்தில் கூறியிருந்தார்.
அது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது சீரியல் கதைக்கே வருவோம். இந்த சீரியலில் செல்லமாவும் சித்தார்த்தும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்குகின்றனர். பிறகு ஒரு கட்டத்தில் செல்லம்மா சித்தார்த்தின் மாமன் மகள் என்பது தெரிய வருகிறது. சித்தார்த்தை ஒருதலையாக மேகா காதலித்து வருகிறார். மேகாவிற்கும் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
மேகாவை தத்தெடுத்து வளர்ப்பவர்களின் உண்மையான மகளே செல்லம்மா தான். இந்த உண்மை தெரிந்த பிறகு செல்லம்மாவை அவருடைய குடும்பத்தினர் கொண்டாட தொடங்கி விட்டனர். இப்போது செல்லம்மா மற்றும் சித்து திருமணத்தையும் குடும்பத்தினர் நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் மேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அதற்கு காரணம் சித்து தான் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு உண்மையான காரணம் மேகாவின் கணவர்தான் என்பது தெரிய வந்திருக்கிறது. இப்படி இடியாப்பசிக்கலாக சிக்கிக் கொண்டிருக்கும் இவர்களுடைய பிரச்சனையில் இப்போது மேகா புது ஒரு யுக்தியை கையாண்டு இருக்கிறார். அதாவது சித்து மற்றும் செல்லம்மா திருமணத்தை நிறுத்துவதற்காக மேகா செல்லம்மாவின் முதல் கணவர் மாணிக்கத்தை சித்துவாக மாற்றுகிறார்.
அது எப்படி என்றால் ஒரு சலூனில் ஒரு நபர் முகத்துக்கு ஒரு கிரீமை போட்டு இதை கொஞ்ச நேரம் போட்டுக்கோங்க. இதை போட்டா முகத்தில் அரிப்பு ஏற்படும். அரிப்பு ஏற்பட்ட உடனே இந்த மாஸ்கை மாட்டிவிட வேண்டும். ஆனால் இந்த மாஸ்க் 3 மணி நேரத்திற்கு தான் வேலை செய்யும். அதற்கு பிறகு நீங்கள் மீண்டும் முகத்தை கழுவி விட்டு அந்த கிரீமை போட்டு பிறகு இந்த மாஸ்கை மாட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதன்படி முகத்தில் மாஸ்க்கை மாட்டியதும் மாணிக்கம் சித்துவாக மாறிவிடுகிறார். இந்த காட்சி தான் இப்போது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு கிண்டல் செய்யப்படுகிறது. சீரியல் என்றாலும் கொஞ்சமாவது நம்புற மாதிரி காட்சிகள் எடுக்க கூடாதா என்பது பலருடைய கேள்வி. முகத்திற்கு மாஸ்க் போட்டால் எப்படி உடல் எல்லாம் மாறும்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா?
சீரியல் என்றால் எப்படி எடுத்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று இவர்கள் முடிவு செய்து விட்டார்களா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே இதே போல சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ரோட்டில் வைத்து முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்தார்கள். அது அந்த நேரத்தில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது.
ஆனாலும் அதை தெரிந்தும் இப்போது செல்லம்மா சீரியலிலும் இவர்கள் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் சினிமாவில் முகத்தில் மரு வைத்தால் மாறு வேஷம் என்று சொல்வது போல இப்போது சீரியலில் முகத்தில் மாஸ்க் போட்டால் இன்னொரு நபராக மாறிவிடலாம் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications