பிறந்த நாளில் இசையமைப்பாளர் இமான் செய்த செயல்.. இது பலருக்கும் முன்மாதிரி.. குவியும் வாழ்த்து
சென்னை: இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடும் போது உடல் உறுப்பு தானம் செய்து பலருக்கும் முன்மாதிரியாக மாறி இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் டி இமான் பலஹிட்டு பாடல்களுக்கு இசை அமைத்து பலருடைய சோகங்களை மறக்க செய்திருக்கிறார். அதே நேரத்தில் இப்போது சமூக சேவகராகவும் பணிகள் செய்து கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இமான் அந்த நிகழ்ச்சியில் கஷ்டப்படுகிற குழந்தைகளுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.
இன்று இமானின் பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இமான் செய்த செயல் இணையத்தில் பலராலும் பாராட்டப்படுகிறது. அதாவது தன்னுடைய பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இமான் உடல் தானம் செய்து இருக்கிறார். அதை இன்று தன்னுடைய பிறந்த நாளில் அறிவித்திருக்கிறார்.

அது பற்றி இமான் பேசுகையில், நாம இறந்த பிறகு இந்த உடல் பயனுள்ளதாக இருக்க வேண்டும். நம்முடைய இறப்பிற்கு பிறகும் பலருடைய வாழ்க்கையில் நம்மால் முடிந்த அளவிற்கு ஏதாவது செய்யணும் என்று விரும்பினேன். இப்படி ஒரு எண்ணம் என்னுடைய மனதில் பல நாட்களாக இருந்தது. அதற்கான சரியான சமயம் இப்போதுதான் அமைந்திருக்கிறது.
நான் இரண்டு நாட்களுக்கு முன்பே உடல் தானம் செய்து விட்டேன். அதை என்னுடைய பிறந்தநாள் அன்று அறிவித்திட வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய கண்கள், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்புகளையும் தானம் செய்திருக்கிறேன். அதற்கான அடையாள அட்டையை வாங்கி என்னுடைய குடும்பத்தினரிடமும் அந்த நம்பரை கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் இது பற்றி சொன்னதும் சந்தோஷப்பட்டார்கள். என்னை பார்த்து என்னுடைய மனைவியும் இப்போது உடல் தானம் செய்து இருக்கிறார். அதுபோல எங்களுடைய உறவினர்களும் உடல் தானம் செய்வதற்கு முன் வருகிறார்கள். அதே நேரத்தில் உடல் தானம் செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் வயதான காலத்தில் அந்த யோசனை வரும்போது பலரால் உடல் தானம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. திடீரென்று ஒரு விபத்து ஏற்பட்டால் கூட இருக்கிறவங்க பதட்டமான சிகிச்சைக்கான சூழ்நிலையில் தான் இருப்பாங்க. அந்த நேரத்தில் நமக்கு உடல் தானம் செய்யணும்னு தோணாது.
சில பேருக்கு காரியம் எல்லாம் முடிந்த பிறகு இப்படி இறுதி சடங்கு பண்ணுவதற்குப் பிறகு அதில் உடல் தானம் செய்திருக்கலாமே என்று நினைப்பதும் உண்டு. ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை. அதனால் நான் ஆரோக்கியமாக இருக்கும் போது என் உடல் உறுப்புகளை தானம் செய்து இருக்கிறேன்.

நாம் இறந்து ஆறு மணி நேரத்திற்குள்ள மருத்துவமனைக்கு தகவல் சொன்னால் போதும். ஆனால் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் தகவல் சொல்லுவது நல்லது. அப்படி சொல்லும் போது மருத்துவர்கள் வந்து கண்கள், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் செயல் இழக்காமல் இருக்கும் போது எடுத்துக் கொள்ள முடியும் என்று பலருக்கும் முன் மாதிரியாக இமான் உடல் தானம் செய்து நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications