வெள்ளி டம்ளரில் பால் குடிக்க மறுத்த எம்ஜிஆர்.. கொய்யாப்பழ கூடையில்! வியப்பூட்டிய மக்கள் திலகம் எளிமை
சென்னை: தொடர்ந்து 10 வருடங்கள் மக்களின் முதல்வராக பணியாற்றி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்.. ஏழை எளியவர்களின் துயர் துடைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றில் மறக்க முடியாதது பள்ளியில் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தது தான். அந்தவகையில் மக்கள் திலகத்தின் எளிமை அனைவராலும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது.
"ஏழ்மை வறுமையில் எளிமையாக இருப்பது மட்டும் தியாகம் இல்லை.. வசதியாக இருந்தபோதும் எளிமையாக இருப்பதுதான் தியாகம்", என்பது எம்ஜிஆரின் பொன்மொழியாகும்.. இதனை தன்னுடைய வாழ்விலும் கடைப்பிடித்து காட்டியவர் எம்ஜிஆர்.. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.
உதாரணத்துக்கு எப்போதுமே சாப்பிடும்போது, தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவார். வீட்டில் மட்டுமல்ல, வெளியில் எங்கு சென்றாலும், தரையில் உட்கார்ந்தே சாப்பிட்டுவிடுவார்.. அவர்மீது கொண்ட அன்பின் மிகுதியால் சிலர், வெளிநாட்டு ரகக்கார்களை பரிசளிக்க வந்தனர்.. ஆனால், தன்னுடைய அம்பாசிடர் காரில்தான் கடைசிவரை பயணித்தார்.

கொய்யாப்பழ கூடை
இப்படித்தான் ஒருமுறை, யாருக்கும் தகவல் தராமல் கொல்கத்தாவுக்கு எம்ஜிஆர் சென்றிருக்கிறார்.. 2 நாள் தங்கியிருந்துள்ளார்.. ஆனால், அங்கு வாழும் தமிழர்கள், எம்ஜிஆரை கண்டு, திரண்டு வந்துள்ளார்கள்.. எம்ஜிஆர் கொல்கத்தாவில் எப்படி? ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள்.. அவர்கள் அனைவருக்குமே வாரி வழங்கியிருக்கிறார்.
அப்போது ஒரு மூதாட்டி சாலையில் கொய்யாப்பழம் விற்கவும், அவரிடம் பழம் எவ்வளவு என்று கேட்டுள்ளார். எம்ஜிஆரை பார்த்து திக்குமுக்காடி போன அந்த பாட்டி, "உங்களுக்கு போய் காசுக்கு பழம் தருவதா? மொத்த கூடையையும் எடுத்துக்குங்க ஐயா" என்று சொன்னார். ஆனாலும் 50 ரூபாய் மதிப்புள்ள கொய்யாப்பழ கூடைக்கு 200 ரூபாயை கொடுத்து, பழத்தை கூடையுடன் வாங்கியிருக்கிறார். பிறகு, அந்த கொய்யாப்பழங்களை அங்குள்ள தமிழர்களுக்கே சாப்பிட தந்துள்ளார். அதன்பிறகு மரியாதை நிமித்தமாக, கொல்கத்தாவில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசுவை சந்தித்துவிட்டு வந்தாராம் எம்ஜிஆர்.
அசரடித்த எளிமை
எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் படம் அலங்கார் தியேட்டரில் 100 நாள் ஓடியது.. அந்த தியேட்டர் ஓனர் பி.வி.நடராஜனின் மகன் லயன் ராம்குமார் பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்..
அதில் எம்ஜிஆரின் எளிமை பற்றியும் சில தகவல்களை கூறியிருந்தார்.. " ரிக்ஷாக்காரன் படத்தின் வெற்றி விழாவிற்கு வருமாறு எம்ஜிஆரை அழைத்தோம். அவரும் 22.9.1971 அன்று எங்களது தியேட்டருக்கு வந்தார். அப்போது அவர், சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்தார். திமுக அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜாராமும் அவருடன் வந்திருந்தார்.
வெள்ளி டம்ளர்
படம் தொடங்குவதற்கு முன் திரை முன்பாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் எம்ஜிஆர் தோன்றி ரசிகர்களிடம் பேசினார்.. நிகழ்ச்சி முடிந்ததும் எங்களது வீட்டுக்கு வந்தார். நாங்கள் சாப்பிடும்படி வற்புறுத்தினோம். காபி, டீ சாப்பிட மாட்டார் என்பதால், ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள் என்றார். உடனே நாங்களும் வெள்ளி டம்ளரில் அவருக்கு அன்புடன் பால் தந்தோம்.
ஆனால் அதை குடிக்க மறுத்த எம்ஜிஆர், "எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தால் போதுமே என்றார். அதன்படியே எவர்சில்வர் டம்ளரில் கொடுத்த பாலை வாங்கிக் குடித்தார். அவரது எளிமையை கண்டு நாங்கள் அனைவருமே திகைத்து விட்டோம்" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications