Karthik: கார்த்திக் பற்றிய பேட்டியால் வந்த மிரட்டல்! டாப் நடிகர்களும் இப்படி சொல்லுறாங்க! பாரதி கண்ணன் உருக்கம்
சென்னை: இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், நவரச நாயகன் கார்த்திக் பற்றிப் பகிர்ந்த பல சுவாரசியமான விஷயங்கள் சோசியல் மீடியாவில் சூறாவளியைக் கிளப்பின! ஆனால், இந்தக் கலகலப்பானப் பேட்டி அவருக்குக் கடைசியில் வருத்தமான மிரட்டலையே பரிசாகக் கொடுத்திருக்கிறது!

பாரதி கண்ணன் பயோகிராபி
பாரதி கண்ணன், தமிழ் சினிமாவில் திருநெல்வேலி, கண்ணாத்தாள், பண்ணாரி அம்மன், வயசு பசங்க உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். தற்போது சினிமாவிலும் சீரியலிலும் நடிகராகவும் நடித்துக் கலக்கி வருகிறார். இவரது பேட்டியில் கார்த்திக்கின் மாடுலேஷனிலேயே பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
10 லட்சம் அட்வான்ஸ் கதை
பாரதி கண்ணன் தனது பேட்டியில், நடிகர் கார்த்திக்கை சந்தித்துத் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்திருந்தார். ஒரு முறை கார்த்திக்கைச் சந்தித்து, 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸோடு கதை சொல்லப் போனபோது, "பணத்தை நான் கையில் தொடுவது இல்லை, அப்பா போட்டோவில் வைத்துவிடுங்கள்" என்று கார்த்திக் சொன்னாராம். பின்னர், தனதுக் கழுத்தில் போட்டிருந்தச் செயினை தொட்டுப் பார்த்துவிட்டு, இந்தப் படம் நன்றாக வரும் என்றும் ஆரூடம் சொன்னாராம்.
அடுத்த சந்திப்பு ஊட்டியில் நடக்க, அப்போதுக் கார்த்திக் போன் செய்து, "இன்னொரு 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா?" எனக் கேட்க, பாரதி கண்ணனும் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்குச் சென்றார். அங்கே கார்த்திக் தங்கியிருந்த இடத்தில், டேபிளில் ஐந்து கிளாஸ்கள் இருந்தன. அவர் அத்தனை கோப்பைகளிலும் ஒரே நேரத்தில் ஊற்றிக் குடித்தாராம். பிறகு, கதையை மாற்றச் சொன்னாராம். தயாரிப்பாளரோ கார்த்திக்கை வைத்துப் படம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட, கடைசிவரை அந்தப் 10 லட்சம் ரூபாயை வாங்கவே முடியவில்லை என்று அங்கு நடந்த சம்பவத்தை ஒரு கதையாகவே பாரதி கண்ணன் பேசி இருந்தார் .
ரசிகர்களின் வருத்தம்
பாரதி கண்ணன் இப்படி பேசியதை அடுத்து, வேறு சிலரும் கார்த்திக் திரைத்துறையில் செய்த சேட்டைகள் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். இதனால், கடந்த சில வாரங்களாகக் கார்த்திக்கும், பாரதி கண்ணனும்தான் சோசியல் மீடியாவில் தலைப்புச் செய்திகளாக இருந்தனர். இந்தச் சூழலில், இந்தப் பேட்டி குறித்துப் பேசிய பாரதி கண்ணன், தனக்கு வருத்தமான மிரட்டல் வந்ததாகத் தெரிவித்தார்.
"கார்த்திக் மிகச்சிறந்த திறமைசாலி. அவர் அசாத்தியமான நடிகர். நியாயமான அழகன். அந்தப் பேட்டியில் நகைச்சுவைக்காகச் சொன்ன விஷயங்கள் வேறு மாதிரி ஆகிவிட்டன. அந்தப் பேட்டியைப் பார்த்துவிட்டுத் திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கார்த்திக்கின் ரசிகர்கள் எனக்கு போன் செய்து, 'என்ன அண்ணே இப்படிப் பேசிட்டிங்களே. இன்னமும் நாங்கள் அவரைத் தெய்வமாகக் மதிக்கிறோம். நெஞ்சில் பச்சையெல்லாம் குத்தியிருக்கிறோம். இனி இப்படிப் பேசாதீர்கள் அண்ணேன்' எனச் சாஃப்ட்டாக மிரட்டினார்கள்" என்று கூறினார்.
சினிமா நண்பர்கள்
மேலும், நடிகர் பிரபு மற்றும் ராதாரவி ஆகியோரும் போன் செய்து, "நீங்களும் நடிக்கிறீர்கள். அவரும் நடித்து சாதனைப் படைத்தவர். இப்படிப் பேசியிருக்க வேண்டாம். இனிமேல் இப்படிப் பேச வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டதாகவும் பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வலியெல்லாம் இப்போதுக் கடந்தகாலக் கஷ்டமாக மறந்தேபோய்விட்டதாகப் பாரதி கண்ணன் கூறியிருப்பது, இந்தச் சர்ச்சைக்கான முற்றுப்புள்ளியாக அமைகிறது.












Click it and Unblock the Notifications