Cheran : கள்ளக்காதல்னு ஒன்னு இல்ல! சமூகம் மீது செலுத்தும் ஆதிக்கம்! காதல் பற்றி இயக்குநர் சேரன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமடைந்த சேரன் சமீபத்தில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது "காதலில் ஏது நல்ல காதல், கள்ளக்காதல். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் தான் கள்ளக்காதல்” என்று கருத்து தெரிவிக்க, இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் சசிகுமார் எழுதிய கண்ணக்குழியில் விழுந்த கண்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் இயக்குனர் சேரன், கோபி நயினார், சிம்பு தேவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருந்தனர். அப்போது கவிதை நூலினை பாடலாசிரியர் அறிவுமதி வெளியிட திரைப்பட இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர்.

சேரன் பேச்சு
அதைத்தொடர்ந்து சேரன் பேசும்போது ஒரு பெண்ணை தான் காதலிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் ஒரு உயிர் மேல் வைக்கும் அன்பு தான் காதல். பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது. காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்று ஏதுமில்லை. சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் தான் கள்ளக்காதல்.
நமக்கு இது கிடைக்கலையே.. நம்மால் இதுபோல காதலிக்க முடியலையே! என்று பொறாமை படுபவர்கள் தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள், அதனால் அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்று பேசி இருக்கிறார். இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
சேரனை பற்றி பார்த்தால் அவர் கேஎஸ் ரவிக்குமார், சந்தான பாரதி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து தனக்கு சினிமாவில் ஒரு இடத்தை நிலை நிறுத்திக் கொண்டார். அதிலும் இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா படம் அந்த நேரத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டது. பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்த அந்த படம் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக இயக்கிய பொற்காலம் படமும் ஹிட்டானது.
அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் வெற்றி கொடுத்துக் கொண்டிருந்தது. அதிலும் பாண்டவர் பூமி, வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள் இவருக்கென ஒரு பெயர் வாங்கி கொடுத்தது. அந்த நேரத்தில் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து போன்ற படங்களின் மூலம் இவர் கதாநாயகனாகவும் அறிமுகமானார். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பில்டப் இல்லாத மாதிரியான காட்சிகள் இவருக்கு தத்ரூபமாக அமைந்தது. இதனாலேயே இவர் இப்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் கேப் விழுந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி இவருக்கு சின்னத்திரையிலும் பிரபலம் கொடுக்க இப்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய ஆட்டோகிராப் படத்தை ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த படம் கூட நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இவர் இப்போது புத்தக வெளியீட்டு விழாவில் காதலுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன பாஸ்?












Click it and Unblock the Notifications