திருநங்கைகளின் காதல், வலி.. உணர வைத்த திவ்யபாரதி.. பிளாக்ஷீப் ஓடிடி தளத்தில் ஒரு நெகிழ்ச்சி படம்
சென்னை: திரைப்படத்துறையில் பெண் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர். அதில் கக்கூஸ், ஒருத்தரும் வரல போன்ற ஆவண படங்களின் மூலம் பிரபலமான திவ்யபாரதி "ஜில்லு" என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பிளாக்ஷீப் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. திருநங்கைகளின் வெளியே தெரியாத கண்ணீர், காதல், ஏமாற்றம், வலியை பார்க்கும் ரசிகர்களுக்கும் உணர வைத்திருக்கிறார்கள்.
கடை தெருக்களில் கைத்தட்டி காசு கேட்கும் திருநங்கைகளை பார்க்கும்போது இவர்கள் வித விதமாக மேக்கப் போட்டுக் கொண்டு சொகுசாக வாழ்வதற்கு இப்படி தெருவில் பிச்சை எடுக்கிறார்கள். இவர்கள் கை, கால் நன்றாக தானே இருக்கிறது் வேலைக்கு போக வேண்டியது தானே என்று பலர் அலுத்துக் கொள்ளலாம், ஆனால் அந்தப் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு காரணம் என்ன என்பதை இந்த ஜில்லு திரைப்படம் மூலமாக, ஷாலுமா, ஜில்லு, தன்யா, சுதா, ரேவதி, லக்ஷயா என பலர் தங்களுடைய வலியை பார்ப்பவர்களையும் ஃபீல் பண்ண வைக்கிறார்கள்.

திருநங்கைகள் தங்களுடைய உடலில் மாற்றம் ஏற்பட்டதும் பலர் தங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் வீட்டை விட்டு வெளியே வந்து உடலில் வலி நிறைந்த ஆபரேஷன் செய்து மார்பகங்களை பெரிதாக்குவதற்கு அதிகமாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். உடலளவில் ஆணாகவும் மனதிற்குள் பெண்ணின் உணர்வுகளால் இவர்கள் பல்வேறு வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.
அத்தனையையும் தாங்கிக் கொள்ளும் இவர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொள்வது விரக்தியின் உச்சம் அந்த ஏமாற்றம் எப்படி இருக்கும் என்று இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
ராயன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? கல்கியும் வருது! டபுள் கொண்டாட்டம்!
அதிலும் இந்தப் படத்தில் உன்னை உயிராய் காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஆணை நம்பி ஜமீலா தன்னை சார்ந்த திருநங்கைகளின் அறிவுரைகளையும் கேட்காமல் ஒவ்வொரு நாளும் தான் கடைகளில் பிச்சை எடுக்கும் பணத்தை கூட அந்த நபருக்கு கொடுத்துவிட்டு, பிறகு அவர் எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள் உன்னோடு சேர்ந்து நான் பிள்ளை பெத்துக்கவா முடியும்? உன்னோடு நான் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று என்னை கேவலமா பேசுறாங்க என்று கழட்டி விட்டு போனதும் அந்தப் பெண் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரோடு இருந்தவர்கள் கதறி அழுவதை பார்க்கும்போது இந்த மாதிரி அன்புக்காக ஏங்குகிறவர்களை அன்பை சொல்லி யாரும் ஏமாற்றாதீர்கள் என்று கல் மனதையும் கரைய வைக்கும் அளவிற்கு காட்சிகள் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் இயக்குனரான திவ்யபாரதி திருநங்கைகளை பேட்டி எடுத்து ஒரு படம் பண்ணுவது போன்று காட்சிகளில் வந்திருந்தார்.
ஆனால் அவரால் திருநங்கைகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று தெளிவாக காட்டவில்லை. திருநங்கைகளும் சாதாரண பெண்கள் போல தான் என்று திருநங்கைகளோடு திவ்யபாரதி பழகுகிறாரே தவிர அந்த திருநங்கைகளின் வாழ்க்கையில் அவரால் எந்த பெரிய மாற்றமும் வரவில்லை.
அதுபோல ரோட்டோரத்தில் நின்று கொண்டு விபச்சாரத்திற்கு கூப்பிடும் திருநங்கைகள் அதை யாரும் விரும்பி செய்யவில்லை எங்களுடைய வயிற்று பிழைப்புக்காக நாங்கள் செய்கிறோம், சிலர் எங்களை விபச்சாரத்துக்கு அழைத்து சென்று அங்கு கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். ஒரு நாள் இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் இது தான் என்னுடைய கனவு என்று ஜில்லு கண்கலங்க வைத்திருக்கிறார்.
விபச்சாரத்திற்கு சென்றும், கரகம் ஆடியும் கடை தெருவாக சென்று கைதட்டி பிச்சை எடுத்து சம்பாதித்த பணத்தை 17 வயதில் திருநங்கையாக மாற வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடி வந்த இளம் திருநங்கையிடம் கொடுத்து நீ நன்றாக படித்துவிட்டு உனக்கு பிடித்த மாதிரி மாறிக்கலாம் என்று அனுப்பி வைப்பது கைதட்ட வைத்தது.
அதுபோல இந்த படத்தில் ஜில்லுவை போலீஸ் அதிகாரி விபச்சாரத்திற்கு கூப்பிடுவது அவரிடம் ரூ.300 பணம் கேட்டார் என்பதற்காக ஜில்லுவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்து உதைத்தது, ஜில்லுவிற்காக நியாயம் கேட்க வந்த திருநங்கை குருவையும் அந்த போலீஸ் அதிகாரி அடித்து மிரட்டும் போது உடனே அவர் எல்லாருக்கும் போன் போடு ரோட்டிலே உட்காருவோம் இவர் என்ன செஞ்சுடுவாருன்னு பார்த்துக்கலாம் என்று பேசியபடியே தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் இதே போல நிலைமையில் இருந்தது என்று அவர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.
கார்த்திபன், திவ்யா பாரதி ஒளிப்பதிவில் யுதிஸ் ஓட்டத்தில் சன்ஹால் மீடியா நிறுவன டோனி ஐ ஆலிவர் தயாரித்திருக்கும் இந்த ஜில்லு திரைப்படம் பிளாக் ஷீப் வேல்யூ ஓடிடு தளத்தில் வெளியாகியிருக்கிறது. அனைவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் நம்முடைய குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டால் அவர்கள் சமுதாயத்தில் சக மனிதர்களாக நடத்தப்படுவார்கள் என்று இந்த படம் சுட்டிக்காட்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications