நான் பேசியது தவறுதான்! என்னை மன்னித்துவிடுங்கள்! லிஸ்ட் போட்டு சாரி கேட்ட இயக்குநர் மிஷ்கின்
சென்னை: பாட்டில் ராதா எனும் பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் வரையறையின்றி பேசியதற்காக பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தற்போது அந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சோமசுந்தரம் கதாநாயகனாக நடித்து வெளியாகும் படம் பாட்டில் ராதா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். அவர் வரம்பு மீறி பேசியிருந்ததால் பலர் அவருக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று நடந்த பேட் கேர்ள் பட விழாவில் அவர் மன்னிப்பு கேட்டார். அவர் பேசுகையில், முதலாவதாக நான் மன்னிப்பு கேட்க நினைப்பது பாடலாசிரியர் தாமரையிடம்.. அவர் என்னை விமர்சித்திருக்கிறார். அவர் அப்போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.
அதில் வெற்றி என்னை அப்படி பேச வைத்திருக்கிறது என இருந்தது. 18 ஆண்டுகளாக நான் போராடிக் கொண்டே இருக்கிறேன் சகோதரி தாமரை அவர்களே! தினமும் 10 நிமிடம் உன் மரணத்தை பற்றி தியானி என பௌத்தம் சொல்வது போல் நான் தினமும் தியானித்துக் கொண்டிருக்கிறேன்.
வெற்றி என் தலை மீது இருந்திருந்தால் நான் பெரிய பெரிய ஆட்களோடு படம் செய்திருக்க வேண்டும். இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த லெனின் பாரதியிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர் என்னை தத்துவ ரீதியில் விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருள்தாஸ் என்ற நடிகரும் என்னை விமர்சித்திருந்தார். எனக்கு அவரையும் பிடிக்கும். அவரது முகத்தில் அத்தனை கருணை இருக்கும். அவரது முகத்தை பார்க்கும் போது பழைய தமிழ் உள்ளே இருப்பது போல் இருக்கும். அவருடன் நான் நீண்ட நாட்களாக வேலை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன்.
கடந்த 3 நாட்களாக அவர் என்னை திட்டி திட்டி மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரிடமும் என்னுடைய மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வைத்து படம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தாணுவிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அது போல் யாரோ ஒருவர் என் மீது செருப்பு எறிய வேண்டும் என கூறியிருந்தார்.
தயவு செய்து இரண்டு செருப்பாக எறியுங்கள். அதிலும் 8ஆம் நம்பராக பார்த்து எறியுங்கள். ஆழ்மனதில் இருந்து பேசிய போது ஒரு சில வார்த்தைகள் மேலே சென்றுவிட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டு அன்றைய தினம் பேசவில்லை.
விஷாலுக்கும் எனக்கும் பிரச்சினை வந்த போது கூட அவர் என்னை அவ்வளவு மோசமாக விமர்சித்த போது கூட பிறரிடம் என்னை பற்றி தவறாக பேசிய போது கூட, நான் அவரை பற்றி பேசிய போது மேடையில் ஒரே ஒரு வார்த்தையை தவிர நான் தவறாக பயன்படுத்தவில்லை.
அன்று என் மனதில் ஆழத்திலிருந்து நான் அதை பேசியிருந்தேன். அது உங்களை புண்பட செய்திருக்கிறது. திருக்குறளில் காமத்துப் பால் இல்லையா? பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையில் அல் புல் என்ற வார்த்தைகள் இடம் பெற்று இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற தலைப்பில் படம் வந்தது. அது பற்றி யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் கடந்த 3 நாட்களாக டிவியில் என்னை பற்றிதான் செய்திகள் இடம்பெற்றன. என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் வெற்றி மாறனிடம் கேளுங்கள் என பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications