பார்த்திபனுக்கு குபீர்னு வந்த ஆசை.. கோடம்பாக்கமே கவனிக்குது.. அதை விடுங்க, விஜய்க்கு ஒரே பாராட்டு
சென்னை: "எனக்கு அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது.. அதனால் நானும் ஒருநாள் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்திருப்பது, அரசியல் களத்தையும் தாண்டி, தமிழ் சினிமாவின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
புதுச்சேரியில் கொரோனா காலத்தில் படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது. படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, பாக்யராஜ் உள்ளிட்ட திரைதுறையினர் அப்போது வலுவான கோரிக்கையை விடுத்திருந்தனர்..

கட்டணம் கோரிக்கை: இதனையடுத்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணம் ரூ. 28 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமாகவும், தொலைகாட்சி சீரியலுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டது. இதற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்றத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சந்தித்து பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால், தான் நிச்சயம் இயக்கித்தர தயார் என்றும், ரங்கசாமியிடம் பார்த்திபன் கூறினார்.. இதையடுத்து, பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசும்போது திரைத்துறை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
டிவி சீரியல்கள்: பார்த்திபன் சொல்லும்போது, "புதுவையில் சுற்றுலா வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்திருப்பது பாராட்டுக்குரியது. படப்பிடிப்புக் கட்டணம் ரூ.28,000 ல் இருந்து ரூ.15,000 என்றும், சீரியலுக்கு ரூ.18,000 இருந்து ரூ.10,000 என்றும் குறைத்துள்ளனர். தமிழக அரசும் இதேபோல கட்டணக் குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
நல்ல படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடையச் செய்வது சரியல்ல. சினிமாவில் பெண்களுக்கு முன்பைவிட அதிக பாதுகாப்பு உள்ளது. தமிழ், மலையாள நடிகைகளுக்கு இந்த பாதுகாப்பு பெருகியிருக்கிறது. தமிழ் சினிமா கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலையை தருகிறது..
தூய்மையானவர்: ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை தவிர வேறு எதுவும் தெரியாது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக பழகியுள்ளேன்... மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால்தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் விவாகரத்து விஷயத்தில் நாம் தலையிட்டிருக்கக்கூடாது. குடும்பம் என்று இருந்தால் சென்சிடிவ் இருக்கும். அதை பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது. அவசரப்பட்டு கருத்து கூறிவிட்டோமோ என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் மேடைப் பேச்சு மூலமாகவே அரசியலில் வென்று வருகின்றனர். அதேபோல, விஜய் பேச்சும் வரவேற்கத்தக்கது. விஜய், சீமான் ஆகியோரது பேச்சுகள் வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவை. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல.
விஜய் அரசியல்: மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். அந்தவகையில், நடிகர் விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள்தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால் அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது.
எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உண்டு.. ஆர்வம் உண்டு.. எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசையிருக்கிறது. ஒரு நாள் கட்சி தொடங்குவேன்.. ஆனால், நான் யாரையும் சார்ந்திருக்க மாட்டேன்.. புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் இருந்தாலும், அது இப்போதைக்கு இல்லை..!!!












Click it and Unblock the Notifications