வன்முறை தான் எல்லாவற்றுக்கும் தீர்வா? லோகேஷ், அமீர் பற்றி ராஜகுமாரன் ஆதங்கம்! பஞ்சாயத்து வந்தாச்சு
சென்னை: ஒருகாலத்தில் குடும்ப ரசிகர்களின் மனதை கவர்ந்த 'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' போன்ற படங்களை கொடுத்த இயக்குநர் ராஜகுமாரன், சமீப காலமாக தனது வெளிப்படையான பேச்சுகளால் அதிக கவனம் பெறுகிறார். அந்த வரிசையில், ஜெயா டிவிக்கு அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி, தமிழ் சினிமா உலகில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த பேட்டியில், இன்றைய தலைமுறை இயக்குநர்கள் முதல், தன் சமகால இயக்குனர்கள் வரை பலரையும் குறித்து தனது பார்வையை பகிர்ந்துள்ளார் ராஜகுமாரன்.

ராஜகுமாரன் பார்வை
லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய அவர்,"அவர் படங்களை முழுமையாக நான் தொடர்ந்து பார்த்ததில்லை. ஆனாலும், வன்முறையே பிரதானமாக இருக்கும் சினிமாவாக அவரது படங்கள் பேசப்படுகின்றன. ஒரு நல்ல காரணத்திற்காக வன்முறை காட்டப்படுகிறதானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லா விஷயத்திற்கும் அதையே தீர்வாக காட்டுவது சரியா என்பதே என் கேள்வி" என்றார்.
அதே நேரத்தில், "லோகேஷ் திறமைசாலி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இன்றைய மார்க்கெட்டுக்கு ஏற்றபடி அவர் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அந்த சூழ்நிலை இல்லையென்றால், வேறு விதமான கிளாசிக் படங்களையும் அவர் அழகாக செய்ய முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாமன்னன்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படைப்புகள் பற்றியும் அவர் பேசினார். பா.ரஞ்சித்தின் ஆரம்ப கால படம் ஒன்றை மட்டுமே பார்த்ததாக கூறிய ராஜகுமாரன், மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தை மனதார பாராட்டினார்.
"ஒரு இயக்குநரின் கைரேகை படம் பார்க்கும்போதே தெரியும். மாமன்னன் படத்தில் தேவையற்ற சமரசம் எதுவும் இல்லை. வடிவேலுவின் நடிப்பும், மாரியின் காட்சியமைப்பும் அந்த படத்தை வலுவாக மாற்றியிருக்கிறது" என்றார்.
மேலும், "ஜாதியை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது. அந்த சமூக யதார்த்தத்தை அவர்கள் தங்கள் மொழியில் சொல்கிறார்கள்" எனவும் தெரிவித்தார்.
அமீர் குறித்து விமர்சனம்
அமீர் குறித்து பேசும்போது ராஜகுமாரன் சற்றே கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். "ஒரு படத்தை யதார்த்தம் என்ற பெயரில் காட்டிவிடுவது போதாது. அதையே ஒரு நல்ல படைப்பாக மாற்ற வேண்டியது இயக்குநரின் பொறுப்பு. இல்லையெனில் அது யதார்த்தம் அல்ல, வெறும் அசுத்தத்தை காட்டுவது மாதிரி தான்" என விமர்சித்தார்.
சசிகுமாரின் படங்களை எடுத்துக்காட்டாக கூறிய அவர், "சசிகுமாரின் படங்களை குடும்பத்தோடு பார்க்க முடியும். ஆனால் அதே அளவுக்கு எல்லா இயக்குநர்களின் படங்களையும் சொல்ல முடியாது" என்றார்.
கவலை இல்லை
தன்னை பற்றி அமீர் கூறிய விமர்சனங்களுக்கு பதிலளித்த ராஜகுமாரன், "ஒரு மனிதனை பற்றி யார் என்ன சொன்னாலும், அவரை அடையாளம் காட்டுவது அவரது படைப்பே. அதனால் தனிப்பட்ட விமர்சனங்கள் எனக்கு பெரிய விஷயமில்லை" என கூறினார்.
விஜய் குறித்து பேசிய ராஜகுமாரன்
ராஜகுமாரன் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை பற்றி பேசுவது முதல் முறை அல்ல, இதற்கு முன்பும் நடிகர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. நட்சத்திர அரசியல், ரசிகர் கலாச்சாரம் மற்றும் சினிமாவின் திசை குறித்து அவர் பேசிய கருத்துகள் அப்போது வைரலானது. தற்போது லோகேஷ், அமீர் குறித்து அவர் பேசியிருப்பது, அந்த சர்ச்சை பட்டியலில் இன்னொரு அத்தியாயமாக சேர்ந்துள்ளது.
மீண்டும் இணையத்தில் மோதல்
இந்த பேட்டி வெளியாகியதிலிருந்து சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது. "மூத்த இயக்குநரின் அனுபவக் குரல்" என சிலர் ஆதரிக்க, "தேவையற்ற ஒப்பீடுகள்" என மற்றவர்கள் விமர்சித்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ராஜகுமாரன் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை, மேலே சொன்ன இயக்குனர்கள் சமுதாயத்தை சீரழிக்கிறார்கள் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் கூறி வருகின்றனர் இதனால், ராஜகுமாரன் பெயர் மீண்டும் இணையத்தில் சூடான விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications