இளையராஜாவின் ஆசை! டார்லிங் டார்லிங் பாடலால் ஸ்பீக்கர் கிழிந்த தருணம்! ப்ரியாவை ஃப்ரீயா தந்த யேசுதாஸ்
சென்னை: ப்ரியா படத்தில் வரும் டார்லிங் டார்லிங் பாடலால் ஸ்பீக்கரே கிழிந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா? அது போல் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் எப்படிப்பட்ட பாடல்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'டார்லிங் டார்லிங் டார்லிங்' பாடலை ஹெட்போன் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். அடடா.... ராஜாவுக்கு தான் அறிமுகமாகும் 'அன்னக்கிளி' படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ரெக்கார்டிங் செய்ய ஆசை இருந்தது.

அப்போதெல்லாம் பாடல்கள் 'மோனோ' ரெக்கார்டிங்கில் தான் பதிவு செய்யப்படும். மோனோ ரெக்கார்டிங் மூன்று Track கொண்டது. ஒன்றில் குரல். இரண்டில் வாத்தியங்கள். மூன்றில் தாளம். இப்படி பதிவு செய்யப்படும். இவை மூன்றும் மிக்ஸாகி நமக்கு அட்டகாசமான பாடலாக கேட்கும். மோனோவிலேயே ஸ்டீரியோ டைப் இசையை எம்.எஸ்.வி அவர்கள் கேட்க வைப்பார்.
'பால் வண்ணம் பருவம் கண்டேன்' பாடலை கேளுங்கள். அது மோனோ தான். ஆனால் சிறிய அளவில் ஸ்டீரியோ போல் இருக்கும்.
அன்னக்கிளியின் தயாரிப்பாளர் பஞ்சு ஒப்புக்கொள்ள மாட்டார் என ராஜா அந்த ஆப்ஷனை சொல்லவேயில்லை. மேலும் மும்பைக்கு செல்ல வேண்டும் என்பதும் காரணம்.
இந்த ஆசை அப்படியே இருக்க நல்வாய்ப்பாக வந்தது 'ப்ரியா'. அதுவும் பஞ்சுவின் சகோதரர்கள் தயாரித்தது தான். ஆனால் படம் சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் என படப்பிடிப்புக்கு போவதால் தன் ஆசையை தெரிவிக்க சம்மதம் கிடைத்தது. ராஜா அப்போது சொல்லக் காரணம் ஜேசுதாஸ் அவர்கள் 'தரங்கிணி ரெக்கார்டிங் தியேட்டர்' தொடங்க இந்த ஸ்டீரியோ கருவிகளை வாங்கி வைத்திருந்தார். அதில் 8 டிராக்குகள். பல சேனல்கள். அருணாச்சலம் ஸ்டுடியோவில் தியேட்டர் அமைத்துக் கொண்டிருந்தார் யேசுதாஸ்.
அது வரை பொறுமை இல்லாததால் பரணி ஸ்டுடியோவுக்கு எல்லா சாதனங்களையும் கொண்டு வந்து 'ப்ரியா' படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்தார் ராஜா. இதற்காக யேசுதாஸ் ஒற்றைப் பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை. இதில் வேறொரு விஷயம் என்னவென்றால் ஒரு என்ஜினியர் உற்சாகத்தில் சவுண்டை ஏற்ற ஸ்பீக்கர் கிழிந்து விட்டதாம். வேறு ஸ்பீக்கரை ஒன்றுமே சொல்லாமல் மாற்றிக் கொடுத்திருக்கிறார் தாஸேட்டன். ப்ரியாவின் ரெக்கார்டுகள் ஜெர்மனியில் ப்ரஸ் செய்யப்பட்டன. அப்போது இந்தியாவில் பிரஸ்ஸிங் வசதி கூட கிடையாது.
ப்ரியா பாடல்களை இப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். ராஜாவின் கன்னி முயற்சியானாலும் ப்ரியாவுக்கு பிறகு வந்த ஸ்டீரியோ ஒலிப்பதிவு பாடல்கள் ப்ரியா பாடல்களை அடிக்க முடியவில்லை. 'டார்லிங் டார்லிங் டார்லிங்' பாடல் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. அதன் நீளமான இன்டர்லூட் இசை அற்புதமான உற்சாகமாக இருந்தது. சுசீலாவின் கணீர் குரல் சும்மா பிய்ச்சு உதறியது. சலீல் சௌத்ரியே பாடலை ரசித்துவிட்டு பாராட்டி இருக்கிறார்.
அக்கரை சீமை அழகினிலே, ஹே பாடல் ஒன்று, என்னுயிர் நீ தானே போன்ற பாடல்களெல்லாம் நிகழ்ந்து விட்ட அற்புதங்கள். ஆச்சர்யம் ஸ்டீரியோ இசை அது வரை யாரும் செய்யாத போது இந்த டியூன்கள் தாம் ஏற்றவை என தேர்ந்தெடுத்தது தான். அவரின் மேதைமை பளிச்சிட்டது அப்போதே.
அப்படி முதல் ஸ்டீரியோ இசை ராஜாவுடையது நமக்கு. அதன் தாக்கத்தை அடிக்க வேறு பாடலை ராஜாவால் கூட இன்றுவரை தரமுடியவில்லை என்பதே நிஜம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications