நடிகர் சுமன் விவகாரத்தில் போலீஸாருடன் கருணாநிதியே வாக்குவாதம் செய்தாராமே? சுவாரஸ்ய சம்பவம்!
சென்னை: நடிகர் சுமன் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. அது மட்டுமா சுமன் நடிகரான கதையும் ஜஸ்ட் லைட் தட்டுனு இருக்கே!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க நிறைய பேர் கிட்ட ட்ரை பண்ணி கடைசியில் சுமன் கிட்ட வந்தாங்க. அவரும் ரஜினி-சங்கர்-ஏவிஎம் என்றதுமே ஓகே சொல்லிட்டார். சொல்லிட்டு ரஜினிக்கே போன் பண்ணி 'அண்ணா.. இப்படி கேட்டாங்க. நான் ஓகே சொல்லிட்டேன்'னு சந்தோஷமா சொல்கிறார்.

அதுக்கப்புறம் சங்கர் அவரை அழைத்து கெட்டப் பற்றிலாம் பேசி அந்த ஆதிசேஷன் ரோல் உருவாகிறார். எவ்ளோ பண்ணினாலும் சுமன் முகத்தில் வில்லத்தனம் தெரியவில்லை. காரணம் அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல். சுமன் தன்னோட வீட்ல சும்மா வாசலில் உட்கார்ந்திருந்தபோது, கார் நின்று போனதால் தண்ணீர் கேட்டு ஒருத்தர் வருகிறார். அவர் ஒரு ப்ரடொக்ஷன் மேனேஜர். அவர் தான் முதலில் சினிமாவில் நடிக்க அழைத்து நீச்சல் குளம் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் சுமன்.
இயக்குனர் நம்ம டி.ஆர்.ராமண்ணா. சுமன் அம்மா சென்னை எத்திராஜ் காலேஜ் பிரின்சிபல். துளு பேசும் குடும்பம் அவங்களோடது. ரஜினி கேட்டதுமே "சுமன்... இந்த படத்துக்கப்புறம் நீ பெரிய ரவுண்ட் வருவே. வில்லன்னு நினைக்காதே"ன்னு சொல்லி ரஜினியை விட பெரிதாக அந்த ஆதிசேஷன் கேரக்டரை வடிவமைக்கிறார்.
"ஆதிசேஷன்னா பொட்டு வச்சிக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருப்பான்னு நினச்சியா?. ஆதிடா..காசிமேடு ஆதி"ன்னு அவருக்கு சுஜாதா எழுதின வசனம் செம டாப். சுமன்-ரஜினி முதலில் இணைந்தது தீவார் படத்தின் தமிழ்ப்பதிப்பான 'தீ' படத்தில் தான். ரஜினியின் தம்பியாக நடித்த சுமன் அன்னைக்கு அந்தப் படத்துக்கப்புறம் பெரிய ரவுண்ட் வந்தார்.
இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பில் வந்தப்படம் தீ. இலங்கையில் ஷுட்டிங்கின் போது ரஜினி-சுமன் ஊர் சுற்றி நல்ல நண்பர்களாக ஆனது கூட சிவாஜிக்குள்ள சுமன் வரக் காரணம். சுமன் கராத்தே Black belt வீரர். அந்த உயரத்துக்கு அவர் கராத்தே மணியின் தலைக்கு மேலே காலை உயர்த்தி நிற்கும் கராத்தே சண்டையின் ஸ்டில் அன்னைக்கு அஞ்சாத நெஞ்சங்கள் படத்தின் புகழ் வாய்ந்த ஸ்டில்.
இளமைக்கோலம் படத்தில் 'வச்ச பார்வை தீராதடி. மச்சான் குறி மாறாதடி' பாட்டு அன்னைக்குலாம் ஆல் இந்தியா ரேடியோ ஹிட் பாடல். தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோவாக நூறு நாட்கள் படங்கள் ஓடிக்கொண்டிருந்த போது தான் சுமன் நீலப்படம் எடுத்ததாக கேஸில் மாட்ட வைக்கப்படுகிறார். உடனே கைது செய்யப்பட்டு குண்டாஸ் ஆக்டில் அவரை சிறையில் தள்ளுகிறது அன்றைய எம்.ஜி.ஆர் அரசு.
சிறையில் குண்டாஸ் ஆக்ட் சிறை அறைகளின் வரிசையில் சுமனின் அறையிலிருந்து நான்காவது அறைக்கு ஒரு பெரும் தலைவரை கைது செய்து அடைக்கிறார்கள். ஆம்...கலைஞர் கருணாநிதி தான் அவர். ஏதோ அரசியல் வழக்குக்காக அடைக்கப்பட்ட கலைஞர் தன் அறைக்கு அடுத்து சுமன் அடைக்கப்பட்டிருப்பது கேள்விப்பட்டதும் தகராறு செய்கிறார்.
"குண்டர் சட்ட கைதிகள் அடைக்கும் அறையின் அருகில் நீங்கள் எப்படி என்னை அடைக்கலாம்"னு பெரிய பிரச்சினையை கலைஞர் கிளப்பியதும் சிறை நிர்வாகம் சுமனை அவசரமாக அப்புறப்படுத்தி வேறு அறைக்கு கொண்டு போகிறது. அப்படிப்பட்ட கலைஞரே பின்னாளில் தன் இளைஞன் படத்துக்கு சுமனை நடிக்க வையுங்கள்னு சொல்லி வசனம் சொல்லிக் கொடுக்க வைத்த நிகழ்வும் நடந்தது.
ராம்ஜெத்மலானி போன்ற பெரிய வக்கீல்கள்கள் வாதாடி ஜாமீனே பெற முடியாத குண்டாஸ் ஆக்டில் நான்கே மாதங்களில் ஜாமீனில் வெளி வந்தார் சுமன். இரண்டு மாதம் ஏவிஎம்மிலேயே இருந்து எல்லா படங்களையும் முடிக்கிறார். அப்போ கூட அவரோட 'இத்தரு கிலாடிலு' படம் நூறு நாட்கள் ஆந்திராவில் ஓடியது. அந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என தீர்ப்பாகி சுமன் விடுதலை ஆகிறார்.
பின் தான் அவர் நிறையப் படங்களில் நடிக்கிறார். அப்படி ஒரு ராபின்ஹுட் படத்தில் தான் ரஜினி சுமனுக்காக கெஸ்ட் ரோல் நடித்துக் கொடுத்தார். 'நியாயம் மீரே செப்பாலி' என்கிற அப்படத்தில் ராபின்ஹூட் என்கிற பெயரில் இரவில் கொலைகள்செய்வார் சுமன். அதை ரஜினி போலீஸ் அதிகாரியாக வந்து கண்டு பிடிப்பார். மிகப்பெரும் வெற்றி பெற்ற அப்படம் தமிழில் சுமன் ரோலில் ரஜினி நடிக்க, ரஜினி ரோலில் பாக்யராஜ் நடிக்க 'நான் சிகப்பு மனிதன்' என வந்தது. பின்னாளில் பல வருடங்கழித்து பெங்காலியிலும் பாக்யதேவதான்னு வந்தது. மிதுன் ஹீரோ. அதே போலீஸ் ரஜினி தான்.
அன்று சுமனுக்கு ரஜினி நடித்துக் கொடுத்தது சுமன் மேல் இருந்த அன்பு தான். சுமன் கைதானதும் ஒரு இதழில் சுஹாசினி, சுமலதா போன்ற நடிகைகள் 'சுமன் அப்படிப்பட்ட ஆளே கிடையாது. மிக மரியாதையானவர் சுமன்' என மறுத்துக் கொடுத்த பேட்டி சுமன் மீதான கெட்ட அபிப்ராயங்களை போக்கியது. டார்லிங் டார்லிங் படத்தில் கூட அப்படி ஒரு வில்லன் ரோலை சுமன் செய்தார்.
பின்னாளில் சுமன் திருப்பதி வெங்கடாஜலபதியாக 'அன்னமய்யா' படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் நிற்காமல் வந்தன. தெலுங்கு மட்டுமே கவனத்தில் இருந்ததால் சுமன் தமிழில் வரவேயில்லை. ஆர்.கே.செல்வமணி தான் அதிரடிப்படையில் 84க்குப்பிறகு 94ல் அதிரடிப்படையில் கொண்டு வந்தார.
பின் 2007ல் சிவாஜியில் ஆதிசேஷன். இடையில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான். சிவாஜியின் வில்லன் முகத்துக்காக சங்கர் அவரை ஒரு டென்ட்டிஸ்ட்டிடம் அழைத்துப் போய் ஒரு பல் செட்டை வடிவமைத்தார். அந்த பல் செட்டை வைத்ததும் சுமன் என்கிற நாயகன் ஆதிசேஷனாக மாறினார். தன்னை விட அதிகமாக பேசப்பட வேண்டும் என ரஜினி சொன்னதால் சுமன் என்பதை விட ஆதிசேஷன் தான் அப்படத்தில் பெரிதாக தெரிந்தார்
பஞ்சு சுப்புவின் பின்னணிக் குரலும் செமயாக பொருந்தியது. ரஜினி சொன்னது மாதிரியே சுமன் சிவாஜி பட வெற்றிக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வந்தார். விஜய், அஜித், தனுஷ், மம்முட்டி, மோகன்லால் எல்லோர் கூடயும் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
எல்லாம் ஆதி மாயம்... தோற்றம் மட்டுமல்லாத அழகான மனமுடையவர் சுமன். ஒரு மகளைப் பெற்றிருந்த சுமன் ஹைதராபாதில் பல கோடி மதிப்புடைய தன் காலி இடத்தை ராணுவத்துக்காக எழுதிக்கொடுத்து விட்டவர். வாழ்க்கை அவருக்கு அந்தப் பாடத்தை கற்றுத் தந்திருந்தது..... இவ்வாறு அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications