மலேசியா வாசுதேவனின் வெண்ணெய் தேய்க்கும் குரல்! அதுதான் ரஜினியின் எவர்கிரீன் பாடல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பாடல்களிலேயே இந்த பாடலை அடிச்சுக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு ஒரு பாடல் இருக்கிறது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஜினி-வாசு... ரஜினியின் கேரியரை உச்சத்தில் கொண்டு போக இவரின் பாடல்கள் பிரதானமாக இருந்தது என்றால் மிகையில்லை. மலேசியா வாசுதேவன் என்கிற பிரட்டில் வெண்ணை தேய்க்கும் குரலோன் பாடிய பாடல்கள் ரஜினியை ரசிக்க செய்தன.

ரஜினிக்கு முதன் முதலில் குரல் கொடுத்தது எம்.எஸ்.வி. 'மூன்று முடிச்சு' படத்தின் 'மனவினைகள் யாருடனோ' கொடூர மனத்தை வெளிப்படுத்தும் ரஜினிக்கு ஏற்ற குரல். பின் எஸ்.பி.பி, டி.எம்.எஸ் ரஜினிக்கு பாடினர். புவனா ஒரு கேள்விக்குறியின் 'விழியிலே மலர்ந்தது', ஜஸ்டிஸ் கோபிநாத்தின் 'நமது காதல்', சதுரங்கம் படத்தின் 'மதனோற்சவம்' பாடல்களில் பாலு பாடியபோது, ப்ரியா படத்தில் யேசுதாஸ் எடுத்துக் கொண்டார்.
மலேசியா வாசுதேவனின் முதல் ரஜினி படம் என்றால் ஜஸ்டிஸ் கோபிநாத். அதில் அவர் பாடிய 'அடியே நீ பாடல்' தேங்காய் சீனிவாசனுக்காக.. முதலில் மலேசியா வாசுதேவன் பாடிய 'கொடி கட்டிப்பறக்குதடா' பாடல் ரஜினியின் ஸ்டைலுக்கும் வேகத்துக்கும் சிறப்பாக பொருந்தியது. பில்லா படத்தில் 'வெத்தலைய போட்டேன்டி..' பாடல் அன்று பட்டிதொட்டியிலெல்லாம் அலறியதோடு, ரேடியோவில் நேயர் விருப்பப்பாடல். 'அடி மாமாமக ரதியே' என்கிற டப்பாங்குத்தெல்லாம் வாசுவுக்கு செமயாக வந்தது.
பெண்களெல்லாம் விரும்பி நேயர் விருப்பத்தில் கேட்ட பாடலேன்றால் ரஜினிக்காக வாசு பாடிய 'அடி ஆடு பூங்கொடியே...'. காளி படத்தின் இந்த பாடல் கேட்க கேட்க ஆனந்தம். இதற்குப் போட்டியாக இறங்கியது 'ஆகாய கங்கை' மற்றும் 'ஒரு தங்க ரதத்தில்..' தங்கரதத்தில் பாட்டு வரும் போது இளையராஜா பாடிய 'ஒரு மஞ்சக்குருவி.என் நெஞ்சைத்தழுவி' பாடல் வந்தது.
சிறுவனாக கேட்கும் போது ரெண்டும் ஒரே டியூனாக தோன்றும். ராஜாவை விட வாசு தான் க்ளாசிக் இதில். அடுத்த இரவு ஹிட்..'சுகம் சுகமே...' என்ன ஒரு ராகம். படத்தின் சப்ஜெக்ட் கௌபாய் ஸ்டைல். பாடல் படத்தில் சிறப்பான ஒன்றாக அமைந்தது. வாசுவின் சுகம் சுகமே..ஆஆஆ' என்கிற அந்த கணம்...ஆஹா... இந்த சமயம் தான் புது ட்ரெண்ட் இறங்கியது.
அறிமுகப்பாடல். முரட்டுக் காளையின் 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடல் காளையனின் குணங்களை சொல்வதோடு அறிவுரைகளை அழகாக எம்.ஜிஆர் பாணியில் சொன்னது. கழுகு படத்தில் 'ஆனந்த ரசம் உண்டு...' என உச்சஸ்தாயில் வாசு பாடிய தேடும் தெய்வம் நேரில் வந்தது சுகமான போதைப்பாடல். தில்லு முல்லு படத்தின் 'தங்கங்களே தம்பிகளே' பாடல் வாசுவுக்கு பரிட்சாத்த முயற்சி. எம்.ஆர்.ராதா குரல் போல, சிவாஜி போல மிமிக் செய்து பாடி இருப்பார்.
கர்ஜனையின் 'ஒரு ஊரில் ஒரு மகராணி..' பாடலை மறக்கமுடியுமா? நெற்றிக்கண் பட 'மாப்பிளைக்கு மாமன் மனசு' செம ரிதம்...ஆனால் தீ பட 'சுப்பண்ணா சொன்னாரண்ணா' ஏனோ கவராதப்பாடலில் சேர்ந்தது. போக்கிரி ராஜாவின் 'போக்கிரிக்கு போக்கிரி ராஜா', புதுக்கவிதையின் 'வாவா வசந்தமே', எங்கேயோ கேட்டக்குரல் 'பட்டு வண்ணச் சேலைக்காரி', மூன்று முகம் 'எத்தனையோ பொட்டபுள்ள', பாயும் புலியின் 'ஆப்பக்கடை அன்னக்கிளி' எல்லாம் வேறு வேறு ஃப்ளேவர்கள். அதிலும் 'பட்டு வண்ணச்சேலைக்காரி' தேனில் நனைந்த குலாப்ஜாமூன்...
அப்போது இறங்கியது 'ஆசை நூறு வகை'. ரஜினி பாடல்களிலேயே இதை அடிக்கும் பாட்டு வேறு இல்லை. டிஸ்கோ சீசன் இறங்கிய போது வாசு பாடிய 'உன் மேல ஒரு கண்ணு' செமப்பாட்டு... தம்பிக்கெந்த ஊரு கர்நாடக வகை 'ஆசைக்கிளியே', கை கொடுக்கும் கை டப்பாங்குத்து 'ஆத்தா பெத்தாளே.'
ரஜினிக்கே பாடிக் கொண்டிருந்தாலும் வாசு ரஜினியோடு வேறு ஹீரோ இணையும் போது இரட்டையர் குரல்களில் வாசுவின் குரல் ரஜினிக்கு வராது. ஏன் என தெரியவில்லை. 'எங்க முதலாளி', 'பட்டுக் கோட்ட அம்மாளு', 'என்னம்மா கண்ணு...' பாடல்களில் வாசு குரல் ரஜினிக்கு இல்லை. படிக்காதவனில் சிவாஜி வரும்போது வாசு ஆட்டோமேடிக்காக சிவாஜிக்கு போய் விடுவார்.
என்தாயின் மீது ஆணை செம த்ரில்லிங் சாங். ரஜினி சொந்தமாக படம் எடுத்த போது 'மாவீரன்' படத்தில் ஆறு பாடல். ஆறு பாடல்களையும் வாசுவுக்கே ராஜா கொடுத்தார். காரணம் அவருக்கு தெரியும் வாசுவின் குரலே பொருந்துகிறதென்று. இளையராஜாவின் மனோ வரவு, ரஹ்மானின் வடக்கு பாடகர் வரவு போன்றவை ரஜினியிடமிருந்து வாசுவை பிரித்துவிட்டன.
ஒன்றிரண்டு பாடல்களை பின்னே பாடினாலும் அதிசயப்பிறவி பாடல்கள் ஆறும் வாசு பாடினாலும் அந்தப் படத்தின் தோல்வியும் வாசுவின் வாய்ப்பை தட்டிபறித்தது. குலுவாலிலே, சஹானா, வாடி என் தங்கச்செல, கிளிமாஞ்சரோ பாடலெல்லாம் காரச் சட்னியில் ஊற வைத்த ஜிலேபி போல் ரசிக்க முடியவில்லை...
ரஜினியின் மற்றவர் பாடலை விட வாசுவின் பாடல்களே இன்றும் வாசுவை மனதில் நிறுத்தச்செய்கின்றன. அது தான் (வா)சுவை... இவ்வாறு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications