38 வருஷத்திற்கு பிறகு! இப்படி நடக்கும்னு கருணாநிதியும் விஜய் அப்பாவும் நினைத்திருக்க மாட்டார்கள்!
சென்னை: நீதிக்குத் தண்டனை படத்திற்கு சிறைச் சாலையில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதி கொடுத்திருந்தார். அவர் எழுதிய வேறு படத்தின் வசனத்தை நடிகர் விஜய் பேசியிருந்தார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: அது 1983. 'சாட்சி' படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை கலைஞர் கூப்பிடுகிறார். அப்போ கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். எஸ்.ஏ.சியும் சந்திக்கச் செல்கிறார். சாட்சி நன்றாக இருக்கிறது என கலைஞர் பாராட்டுகிறார். அப்போது எஸ்.ஏ.சி தன் படம் ஒன்றுக்கு வசனம் எழுதக் கேட்கிறார்.

"கதை எதுவும் இருக்கா?" எனக்கேட்க "கதை இப்போ எழுதிடலாம்.." எனச் சொல்லி விட்டு ஒரு கதையை தயார் செய்கிறார். கலைஞரை சந்தித்து கதையை சொன்னதும் அவருக்கும் பிடித்து விடுகிறது. கலைஞர் வசனம் எழுத தயாராகிறார்.
கலைஞர் வசனங்களை சீன் பை சீனாக எழுத வேண்டும். இந்த நிலையில் அரசியல் அமைப்பு சட்டத்தின் நகலை எரித்ததற்காக (என்று நினைக்கிறேன்) கலைஞர் கைது செய்யப்படுகிறார். உடனே எஸ்.ஏ.சி அடுத்த நாள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறார்.
அதில் கலைஞர் கருணாநிதியின் படத்தை போட்டு சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போல் போட்டோ போட்டு,
"நீதிக்கு தண்டனை" என்கிற தலைப்பையும் கொடுக்கிறார். ராதிகா நடிக்கத் தயாரான அப்படத்தின் வசனங்களை கலைஞர் சிறையிலிருந்தே எழுதுவார்.
தினமும் கலைஞரின் வக்கீலுடன் போய் எஸ்.ஏ.சி, வசனப் பேப்பர்களை வாங்கி வருவார். அங்கேயே அமர்ந்து திருத்தங்கள் இருந்தால் சரி செய்து கொண்டு வந்து அடுத்த நாள் படப்பிடிப்பு நடக்கும். இப்படி முப்பது நாட்கள் எடுக்கப்பட்ட அப்படம் ராதிகாவின் நடிப்பில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
படம் வெற்றி பெற்றவுடன் எஸ்.ஏ.சி தன் மனைவி, மகனுடன் சுற்றுலாவுக்காக சென்றதெல்லாம் எஸ்.ஏ.சியின் வெற்றி வரலாறு. இதன் பின் கலைஞரே ஒரு படத்தை எஸ்.ஏ.சி இயக்க தயாரிக்கிறார். முரசொலி செல்வம் தந்த அலுவலகத்தில் ஒரே மூச்சாக எழுதிய கதைக்கு கலைஞர் வசனம் எழுதுகிறார்.
அது தான் RRR. அதாவது ரவி, ராம்கி, ராஜா நடித்த 'இது எங்க நீதி". இந்தப் படத்தில் கலைஞரின் வசனங்களை சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற ஜாம்பவான்களுக்கு வசனமெழுதிய கலைஞர் வசனங்களை ஒரு சிறுவன் பேசி நடித்தார். அவர் வேறு யாருமல்ல. எஸ்.ஏ.சியின் மகன் விஜய் தான் அது.
இப்படி திமுக குடும்பத்துடன் நெருங்கிய எஸ்.ஏ.சிக்கு அதற்குப்பின் ஏற்றம் தான். ஆனால் 38 வருடங்களுக்குப் பிறகு அதே எஸ்.ஏ.சியின் மகன் நடிகர் விஜய், திமுகவுக்கு எதிராக நிற்பார்... அதுவும் வருங்கால தலைவர் உதயநிதிக்கே டஃப் கொடுப்பார்(சொல்லப்படுகிறது) என்றெல்லாம் அன்று கலைஞர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். காலம் செய்யும் கோலங்கள் தாம் எத்தனை அற்புதங்கள். வியப்பாக இருக்கிறது... இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications