நீயா நானா: கணவருக்கு ஏன் கணக்கு சொல்லணும்..கொந்தளித்த பெண்ணை கிடுக்கிபிடி கேள்வி கேட்ட கோபிநாத்
சென்னை: கணவர் கணக்கு கேக்கறது சரியா, தவறா என்பது குறித்து நீயா நானாவில் சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி பெரும்பாலான இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் இரு தரப்பு நியாயத்தையும் கோபிநாத் பேசுவது நிகழ்ச்சிக்கு மெருக்கேற்றி வருகிறது. எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு கண்டித்து எங்கு உருக வேண்டுமோ அங்கு உருகி தனியொருவனாக அனைவர் மனதிலும் கோபிநாத் நிற்கிறார்.
இவர் கோட் அணிந்திருப்பது பிரபலமானதாகும். இதை பலர் நகைச்சுவையாக பேசுவதுண்டு. அந்த வகையில் இந்த வாரம் அலசப்பட்ட டாபிக் கணவரின் பணம் என் பணம் வெர்சஸ் பெண்களுக்கென தனிப்பட்ட பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது கணவரின் பணம் தங்களின் பணம் என்பதை எப்போது உணர்ந்தீர்கள் என கோபிநாத் கேட்டார்.
அதற்கு பெண் ஒருவர் குழந்தை பிறப்பு சமயத்தில் மகப்பேறு விடுமுறையின் போது நான் சம்பாதித்த போது எப்படி ஆடம்பரமாக இருந்தேனோ அப்படியே நான் என் கணவர் பணத்தில் செலவு செய்ய வழிவகை கிடைத்த போது அவரின் பணம் என் பணம் என்பதை உணர்ந்தேன். கணவர் காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்று நள்ளிரவை தாண்டியும் வேலை செய்கிறார்.

அதற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு மனைவி இருக்கிறார், குழந்தைகளை அவர் பார்த்துக் கொள்வார், அம்மா, அப்பாவை அவர் மருத்துவ செக்கப்பிற்கு அழைத்து செல்வார் என்ற நிம்மதி அவருக்கு இருப்பதால்தான் ஓவர் டைம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது போல் 4 மாதங்கள் வெளிநாட்டுக்கு டெபுடேஷனில் சென்றால் பதவியுயர்வுடன் வருவார்.
இப்படி கணவர் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் மனைவியின் உழைப்பு மறை பொருளாக இருக்கிறது. எனவே கணவரின் பணத்தை தன் பணம் என சொல்லிக் கொள்ளலாம் என்றார். மறு தரப்பில் ஒரு பெண் பேசும் போது 100 ரூபாய் கொடுத்துவிட்டு சும்மா கணக்கு கேட்டால் என்ன அர்த்தம். அப்போது அது அவருடைய பணம் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறதுதானே என்றார்.
அதற்கு மற்றொரு பெண், கணக்கு சொல்வதில் என்ன தயக்கம். நீங்கள் நியாயமாக செலவு செய்தால் நான் இதற்கெல்லாம் செலவு செய்தேன் என எழுதி வைப்பதில் என்ன பிரச்சினை என கேட்டார். அதற்கு கோபிநாத் மறு தரப்பில் பேசிய பெண்ணிடம் ஏம்மா நீங்கள் வேலைக்கு போகிறீர்களா என கேட்டார். அதற்கு அவர் ஆம் என்றார். கணக்கு வழக்கு எல்லாம் எழுதி வைப்பீர்களா என கேட்ட போது ஆம் என்கிறார்.

அதற்கு கோபிநாத் ஏன் என கேட்டதற்கு அந்த பெண் சும்மா என்றார். அப்போது கோபிநாத் நீங்கள் சம்பாதிப்பதில் சும்மா அந்த கணக்கு எழுதும் போது கணவர் பணத்தில் என்ன செலவழித்தீர்கள் என கணக்கு எழுதுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என கேட்டார். மற்றொரு பெண் பேசுகையில் என் கணவருக்கு மாதம் 1ஆம் தேதி சம்பளம்வந்துவிடும். மாத தவணை செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை என் அக்கவுண்டிற்கு போடுவார்.
அவர் கைச் செலவுக்கு என்னிடம் கேட்டு வாங்கிக் கொள்வார் என்றார். இன்னொரு பெண் எனக்கு அப்பா இறந்துவிட்டார். நான் வீட்டுக்கு ஒரே பெண் , அவர் வாங்கிய கடனையும் என் கணவர் அடைத்தார். என்னிடம் அதுகுறித்து சொல்லிக் காட்டியதே இல்லை. அந்த தருணத்தில் அவர் சம்பாதிக்கும் பணம் என் பணம் என தோன்றியது என்றார். இப்படியாக இந்த விவாதம் தொடர்ந்தது.












Click it and Unblock the Notifications