நிலாவை யாருக்குத்தான் பிடிக்காது.. ஆனா பவுர்ணமி பாப்பாவை அப்பாவுக்கே பிடிக்காதாம்!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் எங்கோ ஒரு மூலையில ஏதோ ஒரு கஷ்டத்துல மீளாத் துயரில் தவிக்கும் குழந்தையின் மன வேதனைகளை பிரதி பலிக்கறதா இருக்கு.
சக்ரவர்த்தி பேருக்கு ஏத்த மாதிரி கோடீஸ்வர கணவன் ... மனைவி குழந்தை பவுர்ணமியைப் பெத்த கையோட உயிரை விட்டுடறா. ஆசையா பார்த்துகிட்ட மனைவி இறப்புக்கு பவுர்ணமி பிறந்த கெட்ட ராசிதான் காரணம்னு குழந்தையைத் தொட்டு கூட பார்க்கலை கோடீஸ்வர அப்பா.
பவுர்ணமி பாட்டி அரவணைப்புல வளர, சொத்துக்களும் கை நழுவி போகிறது அப்பாவுக்கு. இதனாலயும் பவுர்ணமியை பிடிக்கலை... சனியனேன்னு திட்றார். எல்லாம் ஒழியுது, இது ஒழிய மாட்டேங்குதுன்னு வாய் கூசாம வசை பாடறார்.
அரவணைப்பு
குழந்தையை வெறுக்கும் பணக்காரர் ரெண்டாவதா ஒரு கல்யாணம் செய்துக்கறார். அந்த மனைவியிடமும் பவுர்ணமியை கிட்டத்தில் சேர்க்க கூடாதுன்னு கட்டளை போடறார். இருந்தாலும் கணவன் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு நல்ல அம்மாவாக சித்தி இருக்க பாட்டியின் அரவணைப்பும் குழந்தை பவுர்ணமிக்கு கிடைக்கிறது.
அப்பா பாசம்?
பெண் குழந்தையாச்சே, அப்பா பாசத்துக்கு ஏங்குவது இயற்கைதானே... இன்னிக்கு ஏம்மா நிலா பெரிசா இருக்குன்னு அம்மாகிட்ட கேள்வி கேட்குது.. இன்னிக்கு பவுர்ணமி...அதான் நிலா பெரிசா இருக்கு. இப்படி இருந்தா நிலாவை எல்லாருக்கும் புடிக்கும்னு அம்மாவான சித்தி சொல்ல, எல்லாருக்கும் பவுர்ணமியைப் புடிக்குது, அப்பாவுக்கு மட்டும் ஏன்மா பிடிக்க மாட்டேங்குது கேள்வி கேட்கிறாள் பவுர்ணமி.
தூங்கினா கொஞ்சுவாரும்மா..
பவுர்ணமியை அப்பாவுக்குப் பிடிக்காதுன்னு யார் சொன்னது? தினமும் நீ தூங்கினப்புறம் அப்பா உன்னை தூக்கி கொஞ்சுவாருன்னு சொல்ல, அப்படியா, அப்போ நான் சீக்கிரம் தூங்க போறேன் பாட்டி என்று கூறி சிறுமி குதூகலத்துடன் ஓடுகிறாள். சிறுமி தூங்குவது போல நடிச்சும் அப்பா வராமல் போகவே மனம் வெதும்பி அப்பாவின் அறைக்குள் செல்ல, அவரோ அயர்ந்த தூக்கத்தில். பவுர்ணமிக்கு ஏமாற்றம் பிளஸ் ஏக்கம்..
மகள் என்றதும்..
தெருவில் காரில் அப்பா சென்று கொண்டு இருக்க, தனியாக சென்று கொண்டிருந்த குழந்தை பவுர்ணமிக்கு அடிப்பட்டு, மட்டையில் கட்டு. கூட்டம் கூடினர்.. ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகலை.பதறிய அப்பா தனது குழந்தை என்று தெரியாமல் தூக்கிச் சென்று காரில் படுக்க வைக்க மகிழ்ந்து போன சிறுமி எழுந்து உட்கார்ந்துக்கறா.
தனது மகளை..
பவுர்ணமியை பாட்டியான பணக்காரரின் அம்மா தேடிவர, நம்ம பவுர்ணமியத்தாண்டா நீ காரில் உட்கார வச்சு இருக்கேன்னு சொல்ல, ஐயோ.. இனி இந்த காரே வேணாம்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிக்கிறான். அப்போ குழந்தை பவுர்ணமி சொல்றா, அப்பா ஏன்ப்பா விட்டுட்டு போறீங்க. இந்த காரில் கொட்டிக் கிடக்கறது உங்க ரத்தம் தான்ப்பா.. என்கிறாள் பரிதாபமாக.
பிபி எகிறுது..
கோபமாகும் அப்பா, காரையே கொளுத்தி விடுகிறார். இதை கண்டு ஊமை கண்ட கனவு போல குழந்தை மனசு எதையோ சொல்ல துடிக்குது. உண்மையில் இது போல காட்சிகள் நமக்கு பாடமாகவும் இருக்கு. அதே சமயம் ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சு பிபி எகிறுது. பெண் குழந்தைகளுக்கு அப்பா பாசமும், ஆண் பிள்ளைகளுக்கு அம்மா பாசமும் கிடைக்கலேன்னா பூமியில் பிறப்பது வேதனையை அனுபவிக்கத்தானோ.