செய்தியாளர்கள் முன்பு ஆவேசமாக கோபப்பட்ட கங்கை அமரன்– அவரை “கோமாளி” என்று சாடிய தயாரிப்பாளர்
சென்னை: தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் கங்கை அமரன். இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த பொது இடத்து அநாகரீக செயல் குறித்துப் பத்திரிக்கையாளர் ஜீவா மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஆகியோர் காரசாரமாக விவாதித்துள்ளனர்.

கங்கை அமரனின் சமீபத்திய சர்ச்சை
சமீபத்தில், கவிஞர் வாலிக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் கங்கை அமரனுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. விழா முடிந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தபோது, கங்கை அமரன் திடீரென கோபமடைந்து, மிகவும் கடுமையாக நடந்துகொண்ட வீடியோ வைரலானது. அப்போது அவர், "பின்னாடி முறைத்துக் கொண்டிருந்தார்" என்று அங்கிருந்த ஒருவரைக் குறிப்பிட்டு சண்டைக்கு இழுத்ததாக தெரிகிறது.
பாலாஜி பிரபு கேள்வி
இது குறித்துப் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பின்னாடி முறைத்து கொண்டிருந்தார் என கங்கை அமரன் சொன்னது எப்படி சாத்தியமாகும்? முன்னாடி இருந்து அந்த நபர் செய்திருந்தால் கங்கை அமரனுக்குத் தெரியவரும். பின்னாடி அந்த நபர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது எப்படி அவருக்குத் தெரியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "வெளியில் அட்டென்ஷன் பெற வேண்டும் என்பதற்காகவே கங்கை அமரன் இப்படிச் செய்கிறார்" எனப் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
கங்கை அமரன் பற்றி சர்ச்சை
கங்கை அமரனின் திரைப் பங்களிப்பு மற்றும் அவரதுப் பொதுவானப் பேச்சு வழக்கைக் குறித்துப் பாலாஜி பிரபு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "கங்கை அமரனை இன்னும் சில மாதங்களில் மறந்துவிடக் கூடிய நிலைமை கூட வந்துவிடும். அப்படி என்ன சாதனை செய்துவிட்டார். 'கரகாட்டக்காரன்' ஏதோ 400 நாட்கள் கடந்து ஓடிவிட்டது. அதுவும் 'தில்லானா மோகனாம்பாள்' கதையை அப்படியே அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி எடுத்தார். அவ்வளவுதான். மற்றபடி இளையராஜா மாதிரிலாம் பெருசா ஒன்னும் சாதனை செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.
குடும்ப பெருமை
"இப்போ கூட இளையராஜா தம்பி, வெங்கட் பிரபுவின் அப்பா, யுவன் சங்கர் ராஜாவின் சித்தப்பா என்று சொன்னால்தான் தெரியும்" என்றும் பாலாஜி பிரபு குறிப்பிட்டுள்ளார். "இவர் எப்பொழுதுமே இப்படித்தான். ஒரு ஆளுமையான நபர் போல என்றைக்காவது நடந்திருக்கிறாரா? இவருடையப் பேச்சில் ஒரு கோமாளித்தனம் தான் இருக்கும். கோமாளிதான். இவரை விடப் புகழ் வாய்ந்த எத்தனையோ இசைக் கலைஞர்களைப் பார்த்திருக்கிறோம். இவர் மாதிரி யாரும் பேசியது இல்லை" என்றுப் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
பொது மேடையில் அநாகரீகம்
கங்கை அமரன் பொது மேடைகளில் அநாகரீகமாக நடந்துகொண்டது இது முதல் முறையல்ல என்றும், எப்போதும் இப்படிப் பேசியே வைரலாக வேண்டும் என நினைக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேவையில்லாத கேள்விகள்
ஒரு சமயம் இசையமைப்பாளர் சங்கர் கணேஷை பேட்டி எடுத்தபோது, அவரதுத் தனிப்பட்டத் திருமண வாழ்க்கை குறித்து, "'உங்கள் மனைவியை எங்கு பார்த்தீர்கள்? எப்படிப் பார்த்தீர்கள்? அப்புறம் என்ன நடந்துச்சு?' என மேடைக்குத் தேவையில்லாதக் கேள்விகளை எல்லாம் கேட்டார்" என பாலாஜி பிரபு நினைவுகூர்ந்துள்ளார்.
வைரமுத்து சண்டை
மேலும், இளையராஜா - வைரமுத்து சண்டையில், "உன்னை அறிமுகம் செய்ததே இளையராஜாதான். உன் பூஜை அறையில் இளையராஜா புகைப்படத்தை வைத்து வணங்கு" எனக் கூறியவரும் கங்கை அமரன்தான். "இப்படி மேடை கிடைக்கும்போதெல்லாம் பேசியே வைரலாக வேண்டும் என நினைக்கிறார்" என்று பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒருவேளை மனநலம் பாதிச்சிருக்குமோ எனப் பத்திரிக்கையாளர் ஜீவா கேட்க, "அவருக்கு பாதிக்கல, நமக்குப் பாதிக்க வைத்துவிடுவார்" என பாலாஜி பிரபு பதிலளித்தார்.
பொது மேடையில் இதுபோன்றச் செயல்களில் ஈடுபடுவது, கங்கை அமரனுக்கு பொருத்தமற்றது என்றும், பின்னாடி இருந்த நபர் ஒரு அப்பாவி போலத்தான் இருந்தார் என்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications