Ilayaraja: ரூ 5 கோடி கேட்டு நோட்டீஸ்! இளையராஜா மீது மிகுந்த மரியாதை இருக்கு! GBU பட தயாரிப்பாளர்
சென்னை: இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்காக அவர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்ட நிலையில் ரவிசங்கர் விளக்கமளித்த போது மேற்கொண்ட தகவலை தெரிவித்தார்.

அஜித்குமார் நடிப்பில் நடிகர் பிரபுவின் மருமகனும் நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் இது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த படத்தில் ஒத்த ரூவா தாரேன், இளமை இதோ இதோ , என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த பாடல்களை நீக்குமாறு இசையமைப்பாளர் இளையராஜா, படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தனது பாடலை பயன்படுத்தியதற்காக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்க வேண்டும். 7 நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தான் இசையமைத்த பாடல்களை கெடுக்கும் விதமாக மறுஉருவாக்க பாடல்கள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் உரிமையாளர் ரவிசங்கர் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.
அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. அவர்களிடம் தடையில்லா சான்றையும் பெற்றுள்ளோம். எனவே நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக் குழு அதை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். இதே போல் ஆதிக் ரவிச்சந்திரனும், இந்த பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனத்திடம் உரிய அனுமதியை பெற்றாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த காப்பிரைட் விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதே சமயம், இளையராஜாவின் பாடலை பயன்படுத்திக் கொள்ளலாமா என கேட்டால் அவர் தாராளமாக ஓகே சொல்லிவிடுவார். ஆனால் அதற்கான காசை கூட வாங்க மாட்டார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications