பிரபல டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் வீட்டில் சோகம்.. சென்னை சைதாப்பேட்டையில் குவிந்த நடிகர், நடிகைகள்
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். ருக்மணி அம்மாளின் மறைவுக்கு தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலான கமர்ஷியல் படங்களை கொடுத்ததால், "கமர்ஷியல் கிங்" என்று அழைக்கப்படுபவர் டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார். ஆரம்பத்தில் டைரக்டர் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், போன்ற பல்வேறு இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பிறகு, 1990ம் ஆண்டு, இயக்குநராக அறிமுகமானார் கே.எஸ்.ரவிக்குமார். இவரது டைரக்ஷனில் வந்த முதல் படம் 'புரியாத புதிர்'.

கே.எஸ்.ரவிக்குமார்: தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி பெற்று, தமிழக மக்களின் கவனத்தையும் திருப்பியவர் ரவிக்குமார். இதற்கு பிறகு, சேரன் பாண்டியன், புது புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, என ஏராளமான படங்களை இயக்கினார். அதிலும் கமலஹாசன், ரஜினிகாந்த் இரு மாபெரும் ஸ்டார்களின் ஆஸ்தான டைரக்டர் என்று பெயரை பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார்.
50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.. இப்போதும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தெனாலி, கூகுள் குட்டப்பா, ஹிட்லெஸ்ட் போன்ற படங்களை தயாரித்தவர் கேஎஸ் ரவிக்குமார்.. டிவியில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று, எப்போதுமே பிஸியான கலைஞராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ருக்மணி அம்மாள்: இந்நிலையில், கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார்.. நேற்று மாலை அவரின் உயிர் பிரிந்தது. இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். வயது மூப்பு காரணமாக நேற்று மாலை உயிரிழந்ததாக ரவிக்குமார் எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார்.
ருக்மணி அம்மாளுக்கு 88 ஆகிறது.. சமீபகாலமாக உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக ருக்மணி அம்மாள் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் அறிவித்திருந்தார்.
பிரபலங்கள் அஞ்சலி: முன்னதாக, லட்சுமி அம்மாளின் மரண செய்தி கேட்டதுமே தமிழ் திரையுலக கலைஞர்கள் பெருத்த சோகத்துக்கு ஆளானார்கள்.. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இல்லத்தில், ருக்மணி அம்மாளின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்..
சத்யராஜ், கவுண்மணி, மீனா, டைரக்டர் விக்ரமன், பேரரசு என திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், டைரக்டர்கள் உட்பட எண்ணற்ற கலைஞர்கள், பங்கேற்று, ருக்மணி அம்மாளுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications