எத்தனை டீச்சராக இருந்தாலும் ஜெனிஃபர்தான் பெஸ்ட்! கடலோர கவிதைகளில் ஒரு பிரபோஸலை பார்த்தீங்களா?
சென்னை: வாழை, ரெக்க உள்ளிட்ட படங்களில் எத்தனையோ டீச்சர்களை காட்டினாலும் ஜெனிஃபர் டீச்சருக்கு நிகர் அவரேதான். அந்த படத்தில் நடிகை ரேகா அத்தனை நேர்த்தியாக நடித்திருந்தார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: எல்லோர் பள்ளி வாழ்க்கையிலும் பிடித்தமான, காதோரம் சுருள் முடியோடு கூடிய, ஸ்லிம் டீச்சர் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

'கடலோரக் கவிதைகள்' என்கிற வில்லன் நடிகர் சத்யராஜ் + இயக்குனர் இமயம் பாரதிராஜா தரப்போகும் அசத்தலான திரை விருந்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போன போது அங்கே சர்ப்ரைஸ் ஸ்வீட்.... ஜெனிஃபர் டீச்சர்.
தன் குடும்பக் கஷ்டங்களை மறந்து தன் மாணவர்களை கருணையோடு அணுகும், அது மார்பில் முடி வளர்ந்த சத்யராஜ் ஆனாலும் அன்போடு பாடம் சொல்லிக் கொடுக்கும் அந்த ஜெனிஃபர் டீச்சரை நமக்கு கண் முன்னே நிறுத்தியவர் புதுமுகம் ரேகா.
ஜோசஃபின் சுமதியாய் தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவின் வழிகாட்டுதலில் ரேகாவாகி அவர் செய்த அந்த டீச்சர் பாத்திரம் இன்றும் காதலுக்கு தனி மரியாதை.
ஜெனிஃபர் டீச்சர் தன் காதலை வெளிப்படுத்தும் அந்த பாங்கே அழகு. "ஏன் தாஸ்... இதே மாதிரி ஆடு திசை மாறிப் போய் உன் கையில வந்தா என்ன செய்வே?" "பிரியாணி தான்...பட்டை, கிராம்பெல்லாம் போட்டு வெளாசிட மாட்டேன்..."
"அதுவே...ஜென்னியாயிருந்தா..." இப்படி ஒரு ப்ரபோஸல் புதிது.. க்ளைமேக்ஸில் ரேகா தேடி வந்து சின்னப்பதாஸை பார்த்துவிட்டு செல்லும் போது சத்யராஜ் ஆஸ்பத்திரி படுக்கையிலிருந்து எழ முடியாமல் வரும் போது திரும்பிப் பார்க்காமல் நடக்கும் ரேகா மீது கோபம் வரும். இருவரும் சேர்வதாக காட்டியதும்.... அப்பாடா...
ரேகாவின் கண்களில் தெரியும் காதல்+கருணையை 'ஏய் ஆட்டோ' படத்தில் பார்க்கலாம்...
ஏய் ஆட்டோ சென்னையில் ரிலீஸ் போஸ்டர் ஒட்டியதும் ஆட்டோக்காரர்கள் பிரச்சினை வருமோ என பயந்து 'ஏய் ஆட்டோ'வில் ஏய் மேல் X அடித்து ஒட்டினார்கள். அதில் 'சுதி' என்கிற ஆட்டோ ஓட்டுனர் மோகன்லாலோடு வீம்பு பிடித்து காதலிக்கும் அந்த 'மீனுக் குட்டி' என்கிற அன்புக்கு ஏங்கும் பெண் மீனாட்சியாக ரேகாவின் நடிப்பை மலையாளிகள் கொண்டாடினார்கள். எனக்குத்தெரிந்து மோகன்லால் நடித்த காதலை மையப்படுத்தி அடக்கி வாசித்த நடிப்பில் இது முதலில் வரும்.
கடலோரக் கவிதைகள் சர்ப்ரைஸ் போலவே 'புன்னகை மன்னன்' சர்ப்ரைஸ். ரேகா என்கிற நடிகையை போஸ்டரில் பார்க்காததால் முதல் பாடல் காட்சியிலேயே சர்ப்ரைஸ். ஏய் ஆட்டோ போல் இதிலும் காதலுக்கு வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்பில் ரேகாவின் அழகான நடிப்பு ஸ்பெஷல். அடுத்த காதல் ஸ்பெஷல் 'நம்ம ஊரு நல்ல ஊரு'. இம்முறை டீச்சர் மாணவியாகி.....'சிங்காரக்காத்தே...' பாடல் அவ்வப்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
பலவித எதிர்பார்ப்புகளோடு பாட்டுக்காரனின் மனைவியாகி காலடி எடுத்து வைத்து வரும் காவேரி தன் கணவன் இறந்த காதலியை நினைத்து வாடுவதைக் கண்டு அதே 'ஷெண்பகமே...' பாட்டுக்கு ஹம்மிங் செய்யும் போது ரேகாவின் முகத்தில் அந்த சோகம்... பண்பட்ட நடிப்பை ரேகாவிடம் பெற்றிருந்தார் கங்கை அமரன். எங்க ஊரு பாட்டுக்காரன் ரேகாவுக்கு ஒரு மைல் கல்.

இப்படி காதல் நாயகியாக வந்த ரேகா அதிர்ச்சியை கொடுத்தது லாலேட்டனின் 'தசரதம்' படத்தில் தான். சாவை எதிர்நோக்கி இருக்கும் கணவனின் உயிரை காப்பாற்ற பணமில்லாமல் வாடகைத் தாயாக ஆக சம்மதித்து வயிற்றில் குழந்தையை சுமந்து பணம் வாங்கும் 'ஆன்னி' என்கிற பேதை மனைவி. க்ளைமேக்ஸில் குழந்தை கையில் கிடைத்ததும் தரமாட்டேன் என அவள் தாய்மையில் தவிப்பதை அழகாக செய்திருந்தார் ரேகா.
"ஈ லோகம் முழுவனும் எதிர்த்தாலும் இவனை ஞான் ஆர்க்கும் விட்டு தரில்லா..." என குழந்தையோடு கதவை மூடும் அந்த நடிப்பு.. குழந்தையை எடுத்து மோகன்லாலிடம் கொடுத்து விட்டு கணவர் முரளி "நான் வேண்டுமென்றால் குழந்தையை விட்டு வரவேண்டும்..." என்று சொன்னதும் இருதலைக் கொள்ளியாக ரேகா உட்கார்ந்து அழும் போது மோகன்லாலோடு போட்டி போட்ட நடிப்பு.
குருவி தலையில் பனங்காய் போல் பெரிய ரோல். நம்பி வைத்த இயக்குனர் சிபி மலையிலையும், மோகன்லாலையும் ஏமாற்றவில்லை ரேகா. அதே தாய்ப் பாசத்தில் பைத்தியமாகவே மாறிப்போன 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' ரேகா தமிழில் மற்றொரு பரிமாண நடிப்பு... குழந்தைத்தனமான முகத்தை வைத்துக்கொண்டு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் வில்லி போன்று அசத்தி இருப்பார் 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்' படத்தில்.
குணா படத்தில் குணாவை புரிந்து கொண்ட நல்ல உள்ளம் ரோஸியாக, அண்ணாமலையில் சடை முடியால் அண்ணாமலைக்கு கிச்சு கிச்சு மூட்டும் சாந்தியாக, வரவு நல்ல உறவு, மாப்பிள்ளை சார், காவலன் அவன் கோவலன், வேடிக்கை அது வாடிக்கை என தொடர்ந்து விசுவின் ஆஸ்தான நாயகியாக, புரியாத புதிர் படத்தில் கொடூர சைக்கோ கணவன் ரகுவரனிடம் அடி வாங்கும் கீதா என ரேகாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பாத்திரங்கள் அமைந்தன.
ரேகா திறமையான நடிகையாக இருந்தும் ஏனோ இன்னும் நடிப்புத் திறமையுள்ள பாத்திரங்கள் கிடைக்கவேயில்லை அப்போது. ராமராஜன் என்கிற நாயகனுக்கு தொடர் வெற்றிகளுக்கு ரேகாவின் ராசியும் காரணம்.. சரியான சமயத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட ரேகாவின் நடிப்பை பார்த்த அவரின் வளர்ந்து விட்ட மகள் ஆசைப்படி திரும்பவும் நடிக்க வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
தான் உண்டு, தன் வேலை உண்டு என நல்லப்பெயரை சம்பாதித்த ரேகா இப்போது நல்ல குடும்பத்தலைவி. வாழை, ரெக்க போன்ற படங்களில் டீச்சர்களை காட்டினாலும் ஜெனிஃபர் டீச்சருக்கு நிகர் ரசிகனின் மனதில் கிடையாது.. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications