சென்னை பீச் ரோட்டில் காரை மடக்கிய நடிகர் ரகுவரன்! நடுரோட்டில் நாசர் செய்த காரியத்தால் பரபரப்பு
சென்னை: சினிமாவில் அசாத்திய நடிப்புத் திறமையால் மாஸ் வில்லனாக முத்திரை பதித்த மறைந்த நடிகர் ரகுவரனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்தவை. அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ரகுவரன் பற்றி பல்வேறு தகவல்களை நெகிழ்ச்சியாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்ட, ரகுவரனின் நடத்திய அதிரடி கார் சேஸிங் சம்பவம் ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Retro Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பொதுவாக மாதவன், அஜித், அரவிந்தசாமி போன்ற சாக்லேட் பாய் ஹீரோக்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள்; ஆனால், ஒரு வில்லனாக இருந்தாலும் ரகுவரன் மாதிரி ஒரு கணவன் அமைய வேண்டும் என்று பல பெண்கள் ஆசைப்படும் அளவுக்கு அவர் நிஜத்தில் ஒரு ஹீரோவாகத் திகழ்ந்தார்.

நடிகர் ரகுவரன் - நாசர்
ஒருமுறை ரகுவரன், அவரது தம்பி மற்றும் நண்பர்களுடன் ஒரு காரிலும், நடிகர் நாசர் தனது நண்பர்களுடன் இன்னொரு காரிலும் திருவல்லிக்கேணி பீச் நோக்கிச் சென்றுள்ளனர். ஜாம்பசார் மார்க்கெட் அருகே சென்றபோது, மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் ரகுவரனின் காரை உரசுவது போல் வேகமாக ஓவர்டேக் செய்து, வம்பிழுத்துக் கத்திக் கொண்டே சென்றுள்ளனர்.
இதனால் ரொம்பவே கோபமடைந்த ரகுவரன், அந்த இளைஞர்களைச் சும்மா விடக்கூடாது என்று தனது காரை ஸ்பீடாக ஓட்டி, அவர்களை துரத்தத் தொடங்கியுள்ளார். பீச் சாலையை நெருங்குவதற்குள் அந்த இளைஞர்களின் காரை விடாமல் துரத்திச் சென்று, மின்னல் வேகத்தில் அவர்களது காருக்கு முன்னால் குறுக்கே நிறுத்தி வண்டியை மடக்கினார்.
சென்னை பீச் ரோடு சம்பவம்
பிறகு காரின் டோரத் திறந்து கொண்டு இறங்கி, நேராக தன் காரின் போனட் (Bonnet) மீது ஏறி, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்துள்ளார். அந்த இளைஞர்களைப் பார்த்து, "இப்ப என்னடா? வாங்கடா!" என்று மிரட்டலாகக் சவால் விட்டுள்ளார். இதைப் பார்த்து அவருடன் காரில் இருந்த அவரது சொந்த தம்பியே மிரண்டு போயுள்ளார்.
ரகுவரனின் காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நடிகர் நாசர், நடுரோட்டில் ரகுவரன் காரின் போனட் மீது உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே தன் காரை நிறுத்திவிட்டு, பதற்றத்துடன் ரகுவரனை நோக்கி ஓடி வந்துள்ளார்.
நடுரோட்டில் ரகுவரன் மாஸாக உட்கார்ந்திருப்பதையும், நாசர் ஓடி வருவதையும் பார்த்த பொதுமக்களுக்கு அது ஏதோ ஷூட்டிங் நடக்கிறது என்று நினைத்து விட்டார்களாம்.. "ஏய், ரகுவரன்டா... நாசர்டா... ஏதோ சூட்டிங் நடக்குது!" என்று பேசத் தொடங்கி, அந்த இடமே பயங்கர பரபரப்பாக மாறியுள்ளது.
வாங்கடா என்று கத்திய ரகுவரன்
வம்புக்கு இழுத்த அந்த 5 இளைஞர்களும் ரகுவரன் இறங்கி வந்த ஸ்டைல், போனட் மீது அமர்ந்து சிகரெட் பிடித்த விதம் மற்றும் அவரது மிரட்டலான "வாங்கடா" என்ற சத்தத்தைக் கேட்டு, பயத்தில் அப்படியே நடுங்கிப்போய் ஷாக்காகி நின்றுவிட்டார்கள்.. பிறகு ஓடிவந்த நடிகர் நாசர், "யோவ், நடுரோட்டுல பப்ளிக் முன்னாடி என்னயா பண்ணிட்டு இருக்க? வாயா கார்ல ஏறு" என்று ரகுவரனை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் ரகுவரனோ கோபத்தில், "நான் வரமாட்டேன்" என்று அடம் பிடித்துள்ளார்.
பிறகு நாசர், ரகுவரனின் தம்பி மற்றும் பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து ரகுவரனை வலுக்கட்டாயமாகச் சமாதானப்படுத்தி, காரில் ஏற்றி சீட்டில் உட்கார வைத்து அங்கிருந்து கிளப்பி அழைத்துச் சென்றுள்ளனர்.
அன்னைக்கு மட்டும் எல்லார் கையிலயும் செல்போனோ, ரோட்டுல சிசிடிவி கேமராவோ இருந்திருந்தா, இந்த நிஜக் காட்சி அப்படியே ஷூட்டிங் மாதிரி இணையத்தில் பதிவாகி, இன்னைக்கு எல்லா யூடியூப் சேனல்களையும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனா அன்னைக்கு அது இல்லாததால் அந்தச் சம்பவம் அப்படியே போயிருச்சு" என்று ஆதங்கப்பட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications