குடியரசு தினத்தன்று! துவாதசியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு?
திருப்பதி: வைகுண்ட துவார தரிசனம் முடிவடைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனத்தில் தரிசிக்க 6 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 2 கூடங்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் முக்கியமானது மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியானது கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா திருப்பதியில் ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.
இந்த 10 நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அது போல் வரிசையில் நின்று செல்லும் இலவச தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. வைகுண்ட துவாரம் முடிவடைந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஜனவரி 27-ஆம் தேதியான நேற்று மொத்தம் 74,742 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 22,466 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.67 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 6 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 2 கூடங்கள் நிரம்பி வழிந்தன.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3-5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications