இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா
சென்னை: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நாளை ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. வழக்கமாக விவாதங்களுக்குப் பெயர் பெற்ற இந்த நிகழ்ச்சி, இந்த தடவை ஒரு பாடலாசிரியரின் வாழ்க்கைப் பயணத்தையே மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. அந்த நபர் தான் கார்த்திக் நேதா.

நீயா நானா ப்ரோமோ
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானதும், அதில் இருந்த ஒரு காட்சி எல்லாரையும் நெகிழச் செய்திருக்கிறது. கார்த்திக் நேத்தாவின் அம்மா பேசும் அந்த சில நொடிகள் தான் இதற்கு காரணம். "என் மகன் சில வருடங்களுக்கு முன்பு எவ்வளவு கஷ்டப்பட்டான் எனக்குத்தான் தெரியும்... ஆனா அவன் எழுதுன பாடலில் 'இதுவும் கடந்து போகும்'ன்னு சொல்வது மாதிரி அவன் வாழ்க்கையிலேயே எல்லாம் கடந்து போயிடுச்சு... இன்று அவன் இவ்வளவு உயரம் வந்திருக்கான், அதுதான் எனக்கு சந்தோஷம்..." என்று கண்களில் நீருடன் அவர் சொல்வது, பார்க்கிறவர்களை அமைதியாக்கும் அளவுக்கு இருந்தது.
கவிஞர் கார்த்திக் நேத்தா
நம்ம எல்லாருக்கும் தெரியும், சில பாடல்கள் வந்து மனசுக்கு நேராகத் தொட்டுவிடும். அப்படி பலருக்கும் ஒரு மருந்து மாதிரி இருந்த பாடல் தான் "இதுவும் கடந்து போகும்". அந்த ஒரு வரி மட்டும் கூட எத்தனை பேருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த வரிகளை எழுதியவர் தான் இந்த கார்த்திக் நேத்தா.
கார்த்திக் நேத்தா பாடல்கள்
96 படத்தில் வந்த "காதலே காதலே" போன்ற பாடல்கள் இன்னும் காதலர்களின் ப்ளேலிஸ்டில் இருக்கிறது. அதேபோல அமரன் படத்தில் "ஹே மின்னலே" என்ற பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நெற்றிக்கண் படத்தில் வந்த "இதுவும் கடந்து போகும்" பாடல், மனசு உடைந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் மாதிரி இருந்தது. அது ஒரு பாடல் இல்ல, ஒரு உண்மை அனுபவம் மாதிரி பலருக்கு பட்டது.
அதுக்கு அப்புறமும் வாகை சூட வா படத்தில் "போறானே போறானே", மான்ஸ்டர் படத்தில் "அந்திமாலை நேரம்", நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் "ஓ கிரேசி மின்னல்" - இப்படி அவர் எழுதிய பல பாடல்கள் ஒவ்வொன்றாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. "துருவம் கடந்த போதும்", "விண்வெளி நாயகா", "அஞ்சு வண்ண பூவே" போன்ற பாடல்களும் அவருடைய வார்த்தை வித்தைகளை வியக்க வைக்கும்.
நா முத்துக்குமாரின் உதவியாளர்
ஆனா இந்த அளவுக்கு வந்தவர் ஆரம்பத்திலேயே இப்படித்தான் இருந்தாரா என்றால் இல்லை. அவர் தனது பயணத்தை நா முத்துக்குமாரனிடம் உதவியாளராக இருந்து தான் தொடங்கினார். அங்கிருந்து கற்றுக்கொண்டு, மெதுவாக தன்னுடைய வழியை உருவாக்கிக் கொண்டவர்.
96 படத்துக்காக ஆனந்த விகடன் விருதும் வாங்கியிருக்கிறார். அது அவருடைய முயற்சிக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம். இப்போது நீயா நானா நிகழ்ச்சியில் அவரை மையமாக வைத்து இந்த சிறப்பு அத்தியாயம் வருவது, அவர் எழுதிய பாடல்களை மட்டும் அல்ல, அந்த வரிகளுக்குப் பின்னாலிருக்கும் வாழ்க்கையையும் காட்டப் போகிறது.
இதுவும் கடந்து போகும்
மற்றவர்களுக்கு "இதுவும் கடந்து போகும்" என்று சொல்லியவர், அதையே தன் வாழ்க்கையிலும் அனுபவித்து கடந்து வந்திருக்கிறார் என்பதுதான் இங்க முக்கியம்.
ஒரு சாதாரண இடத்திலிருந்து ஆரம்பித்து, இன்று ஆயிரக்கணக்கான மக்களின் மனசை தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அதனால் தான் இப்போது அவர் ஒரு பாடலாசிரியர் மட்டும் இல்ல... பலருக்கு ஒரு நம்பிக்கை மாதிரி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications