வாயடைச்சு போச்சு, வார்த்தை வரவில்லை.. ஒரு வாரம் தூங்காமல்! பிறந்த நாளில் உருக்கமாக பேசிய இளையராஜா
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா இன்று தன்னுடைய 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பலர் அவருக்காக காத்திருந்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இளையராஜா தன்னுடைய பிறந்தநாளில் நெகிழ்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிமுகமே தேவை இல்லை. இதுவரைக்கும் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா, 1500க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். சினிமாவை தாண்டி இப்போது ராக்ஷசபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இசையில் இந்தியாவை தாண்டி உலகெங்கும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பெயருக்கு தகுந்தது போலவே இந்த வயதிலும் இளமை துள்ளல் குறையாது பல படங்களுக்கு பாடல் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இளையராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்
இளையராஜாவின் பாடலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காதல் என்றாலும் சரி, சோகம் என்றாலும் சரி, கோபம் என்றாலும் சரி எல்லாவற்றிற்கும் இளையராஜா பாடல்கள் கேட்பவர்கள் தான் ஏராளமானோர் இருக்கிறார்கள். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கூட இளையராஜாவின் பாடல்களை கேட்டு விட்டு அப்படியே தூங்கிப் போனவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் லண்டனில் இளையராஜா தான் எழுதி முடித்த முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் மூலம் லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார்.
இளையராஜா பேட்டி
இளையராஜா சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இன்று அவர் தன்னுடைய 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை சென்னை கோடம்பாக்கத்தில் தன்னுடைய ஸ்டூடியோவில் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார். அவரை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். இளையராஜாவிற்கு வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "என்னை வாழ்த்திய ரசிக பெருமக்களுக்கு நன்றி. நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி.
இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக உங்கள் சிரமங்களை எல்லாம் பார்க்காது இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறீர்கள். இவர்கள் அல்லது தூர தேசத்திலிருந்தும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இவர்களெல்லாம் பார்க்கும்போது வாயடைச்சு போகுது, வார்த்தையே வரமாட்டேங்குது.. என்னை பார்ப்பது சாதாரண விஷயம். ஆனால் அதற்காக தூங்காமல் இருந்து வருகிறார்கள். இதில் ஒரு வாரம் தூங்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
கடவுள் கருணை
அதைக் கேட்கும் போதும், பார்க்கும்போதும் கடவுள் நம்மேல் எவ்வளவு கருணை வைத்துள்ளார் என்று எனக்கு தோன்றுகிறது. அவர்களுக்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று எனக்கு தெரியவில்லை" என்று சந்தோஷமாக பேசி இருந்தார். இளையராஜா தன்னுடைய பிறந்தநாளில் பேசிய வீடியோ தான் இப்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது.
50ஆவது ஆண்டு இசை பயணம்
இளையராஜாவின் 50ஆவது ஆண்டு காலத்திறை பயணத்தை முன்னிட்டு அரசு சார்பில் விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அது இன்று அவருடைய பிறந்தநாள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது தற்போது தள்ளிப் போய் இருக்கிறது. ஆனாலும் இளையராஜாவிற்கு சோசியல் மீடியாவில் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இளையராஜா பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? அதை அவருடைய பிறந்த நாளில் நினைவு படுத்துங்கள் நண்பர்களே!.












Click it and Unblock the Notifications