அன்பே நந்தனா! உன்னை தொட முடியாது! பார்க்க முடியாது! ஆனால்! மகளின் நினைவுநாளில் பாடகி சித்ரா உருக்கம்
சென்னை: அன்பே நந்தனா! என்னால் உன்னை தொட முடியாது, நீ சொல்வதை கேட்க முடியாது, ஆனால் நீ எப்போதும் என்னுடன் இருப்பதை உணர முடிகிறது என தனது மகளின் இறப்பு தினமான இன்று பின்னணி பாடகி சித்ரா பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சித்ரா. இவர் 1988ஆம் ஆண்டு சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நந்தனா என பெயரிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சித்ரா தனது மகளுடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அந்த 9 வயதில் நந்தன நீச்சல் குளத்தில் விழுந்து மூழ்கியதில் இறந்தார். நீண்ட காலம் கழித்து , கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தையின் இறப்பை சித்ராவால் தாங்கிக் கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனார்.
இதையடுத்து அவரை அவரது திரையுலக நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி வருகிறார்கள். ஆனாலும் இழப்பு இழப்புதானே! ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் பிறந்தநாளின் போது இறந்த நாளின் போது உருக்கமாக பதிவை போடுவார்.
அந்த வகையில் இன்றைய தினம் நந்தனாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருடைய நினைவால் வாடும் சித்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னால் உன்னை தொட முடியாது. நீ சொல்வதை கேட்க முடியாது. என்னால் உன்னை பார்க்க முடியாது.
ஆனால் நீ எப்போதும் என்னுடன் இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஏனென்றால் நீ என் இதயத்தில் இருக்கிறாய்! என் அன்பே! ஒரு நாள் மீண்டும் நாம் சந்திப்போம். உன்னை இழந்ததன் வலியை சொல்லவே முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப் பெரிய நட்சத்திரம் நீயாகத்தான் இருப்பாய் என்பது எனக்கு தெரியும். நீ விண்ணுலகில் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன். இவ்வாறு சித்ரா பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த சிலர் சித்ராவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அடுத்த ஜென்மத்தில் நந்தனா உங்களுக்கு மகளாக பிறப்பார். கவலை கொள்ளாதீர் சகோதரி என ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.
சின்னக்குயில், இசைக்குயில் என ரசிகர்களால் அழைக்கப்படுவர் சித்ரா. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பின்னணி பாடி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இவர் 6 முறை தேசிய விருதுகளையும் 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார். தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார். அனைத்து குழந்தைகளுக்கும் அம்மாவாக திகழ்ந்து குழந்தைகளோடு குழந்தையாக மாறி அவர்களை வழி நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications