"போதும் கமல் சார்...": சர்ச்சைப் பேச்சுகளால் சிக்கலில் கமல்ஹாசன் - ஏன் இந்த நிலை?
சென்னை: கமல் ஹாசனின் ஆளுமை, அவரது அரசியல் பயணத்தில் சர்ச்சைகள் எழும் காரணங்கள், மற்றும் அவரது பேச்சுக்களின் சமூக, அரசியல் தாக்கங்கள் ஆகியவற்றை பார்க்கலாம். அவரது வெளிப்படையான அணுகுமுறை ஒரு 'குழந்தைத்தனமான' இயல்பா அல்லது நுட்பமான அரசியல் வியூகமா என்பதையும் நாம் ஆராய்வோம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் ஒரு தேர்ந்த படிப்பாளி, பல விஷயங்களைத் தேடி அறியும் ஆர்வம் கொண்டவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. அவரது பேச்சுகளில் இந்தத் தேடலின் வெளிப்பாடுகள் கட்டாயம் இடம்பெறும். அதேசமயம், மனதில் பட்டதை எந்தவித சமரசமுமின்றி துறந்தடிக்கும் குணம் அவரிடம் உண்டு. இது சில சமயங்களில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகிறது.

கடந்த கால சர்ச்சைகளும் நிதானமின்மையும்
தொடக்கக் காலத்தில், அதாவது 1977-78 காலகட்டத்தில் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, நடிகர் பிரேம் நஸீரின் நடிப்பைப் பற்றி ஒரு பேட்டியில் விமர்சித்தபோது, அன்றைய தினம் மலையாளிகள் அனைவரும் கமலுக்கு எதிராகக் கொந்தளித்தனர்.
அரசியலுக்கு வந்தபோது, ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், "தமிழ் சினிமாவுக்கு என்னால் என்ன செய்ய முடிந்தது?" என்று கேள்வி கேட்கப்பட்டபோது, "முத்தக் காட்சிகளைக் கொண்டு வந்தது" என்று பதிலளித்தார். தான் சொல்வதன் அர்த்தம் எதிராளி எப்படிப் புரிந்துகொள்வார் என்ற நிதானம் அவரிடம் இருக்காது என்பதற்கு இது ஒரு சான்று.
சுதந்திர இந்தியா
'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான்' என்று கூறியதும் அவரேதான். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்குத் தெரியும். ஆனால், அதன் உட்பொருள் என்ன அல்லது அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரியாமல் சொல்லிவிடக்கூடிய இயல்பு அவரிடம் இருக்கிறது.
தி.மு.க. கூட்டணி குறித்த குழப்பமான விளக்கம்
"தி.மு.க.வை ஊழல் கட்சி என்று சொல்லிவிட்டு, இப்போது அதனோடு கூட்டணி வைக்கிறீர்களே?" என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல், "நாட்டிற்குத் தேவைப்பட்டது" என்று கூறி நழுவினார். அதாவது, தி.மு.க. ஊழல் செய்வதும், அதனோடு தான் இணைவதும் நாட்டிற்குத் தேவை என்று சொல்கிறாரா என்பது தெளிவில்லாமல் போனது. இது அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியது.
மொழி சார்ந்த சர்ச்சைகளும் கர்நாடகப் பதற்றமும்
கன்னட மொழி விவகாரத்தில் அவர் மீது முழுமையாகத் தவறு இல்லை. கேரளா சென்றிருந்தபோது, "பக்கத்து மாநிலமான தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார். பொதுவாக, அல்லு அர்ஜுன், யாஷ், ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி போன்ற பிற மாநில நடிகர்கள் சென்னை அல்லது தமிழர்களின் பெருமையைப் பேசி நல்ல பெயர் எடுத்துச் செல்கிறார்கள். கமல்ஹாசனும் அப்படித்தான் கொச்சியில் பேசினார்; பழைய மலையாளப் பாடலைக் கூடப் பாடினார். ஆனால், 'தமிழை கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொன்னது அங்கு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது.
கன்னடம் தமிழ்
இப்படிப் போகிற போக்கில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்த மொழி" என்று கூறிவிட்டார். இது இத்தனை பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். 'தக்லைஃப்' படம் வெளியாவதோ ஆகாததோ பெங்களூரு தமிழர்களுக்குக் கவலை இல்லை. ஆனால், மொழிப் பிரச்சினை மீண்டும் ஒரு கலவரமாக மாறிவிடக் கூடாது என்கிற கவலை அவர்களுக்கு உண்டு. ஏற்கனவே, வங்கியில் ஒரு பெண் அதிகாரி ஹிந்தியில் பேசச் சொன்னது, ஆட்டோ ஓட்டுநரிடம் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று ஒருவர் சொன்னது என மொழிப் பிரச்சினையை அங்கிருக்கும் கன்னடர்கள் பெரிதாக எடுத்துக்கொள்கிறார்கள். இத்தகைய சூழலில், கமல்ஹாசன் விஷயம் மேலும் தூபம் போடக்கூடாது. எனவே, கமலே முன்வந்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
நடிகர்கள்
நாகேஷ், சிவாஜி, கிரேஸி மோகன், சண்முகம் அண்ணாச்சி, ராஜா, மணிரத்னம், இன்னும் சில பல... போன்ற ஜாம்பவான்களுடன் நட்பு பாராட்டி, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்தது.
குழந்தைத்தன பேச்சு
"போதும் கமல் சார்... போதும்... உங்கள் குழந்தைத்தனம் வெளிப்படுகிறது," என்று அவரது பேச்சுகளில் வெளிப்படும் நிதானமற்ற தன்மையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன. அரசியல் களத்தில் ஒரு தலைவருக்குத் தேவையான முதிர்ச்சியும், வார்த்தைகளில் நிதானமும் அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications