Upendra : கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு சைபர் கிரைம் அதிர்ச்சி! அவரே வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ
சென்னை: கன்னட திரையுலகில் ஒரு முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் தனித்துவமான சிந்தனையாளராகவும் வலம் வரும் நடிகர் உபேந்திரா, தற்போது ஒரு சைபர் கிரைம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது, திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், தனது மற்றும் தனது மனைவியின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யார் இந்த உபேந்திரா
ரியல் ஸ்டார் என்று கன்னட ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் உபேந்திரா, ஒரு சிறந்த இயக்குநர் மற்றும் நடிகர். தனது தனித்துவமான இயக்க பாணியால் ஓம், ஏ மற்றும் சூப்பர் போன்ற திரைப்படங்களை இயக்கி, கன்னட சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கினார். இவரது படங்கள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளைத் தத்துவார்த்த ரீதியாக அணுகும். நடிகராகவும் கலஸ் பாலியா, சிவநாகா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். ரஜினிகாந்தின் திரைப்படமான கூலியிலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மனைவி நடிகை பிரியங்கா உபேந்திரா, இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
சைபர் கிரைம் வலையில் சிக்கிய உபேந்திரா
உபேந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். "முதலில் எனது மனைவிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஆர்டர் செய்த ஒரு பொருளை டெலிவரி செய்ய வேண்டுமென்றால், சில ஹேஷ்டேக்குகளையும், எண்களையும் குறிப்பிடுமாறு கேட்கப்பட்டிருந்தது. உடனே, அந்த நம்பருக்கு எனது மனைவியின் போனில் இருந்து கால் செய்தோம். பின்னர் எனது போனிலிருந்தும் அதே நம்பருக்கு கால் செய்தோம். இப்போது எங்கள் இருவரின் போனும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே, என்னுடைய நம்பர் அல்லது எனது மனைவியின் நம்பரில் இருந்து ஏதாவது பணம் கேட்டு மெசேஜ் வந்தால், தயவுசெய்து யாரும் பணம் அனுப்பிவிடாதீர்கள்" என்று அவர் ரசிகர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, உபேந்திரா தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களின் நிழல்
சமீபகாலமாக, பிரபலங்கள் சைபர் குற்றவாளிகளின் இலக்காக மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது, போன் நம்பர்கள் மற்றும் சிம் கார்டுகள் திருடப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, நடிகை கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட சில பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, போலியான விளம்பரங்கள் பதிவிடப்பட்டன. சைபர் குற்றவாளிகள், பிரபலங்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, பண மோசடிக்கு முயற்சிப்பதே இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம். எனவே, பிரபலங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இதுபோன்ற சைபர் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications