விஜய்க்காக அந்த படத்தில் நடித்தேன்! இந்த நடிகர்கள் இப்படி பண்ணுவது வருத்தமா இருக்கு! கிச்சா சுதீப் ஆதங்கம்
சென்னை: கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடித்துள்ள 'மார்க்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டி, தற்போது திரையுலகில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கன்னட நடிகர்கள் பிற மொழி படங்களில் கெஸ்ட் ஆகவும், வில்லனாகவும் நடிப்பது குறித்து அவர் வெளிப்படுத்திய ஆதங்கம் கவனம் ஈர்த்துள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், "கன்னட நடிகர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களில் கெஸ்ட் ஆக நடித்து வருகிறோம். ஆனால் அதே அளவுக்கு பிற மொழி நடிகர்கள் கன்னடப் படங்களில் நடிப்பதை நாம் பார்க்கவில்லை. இது ஏன் இப்படியிருக்கிறது என்பதுதான் எனது கேள்வி" என்று கூறினார்.
சுதீப்பின் ஆதங்கம்
இந்த விஷயம் குறித்து மேலும் பேசிய அவர், "சில நடிகர்களிடம் தனிப்பட்ட முறையில்கூட நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை. கெஸ்ட் ஆக நடிப்பது என்பது இரு தரப்பிலிருந்தும் இயல்பாக நடக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த பரஸ்பர மரியாதை குறைந்து வருகிறதோ என்ற எண்ணம் எனக்கு வருகிறது" என தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்.
சிவராஜ்குமார் 'ஜெயிலர்' படத்தில் நடித்தது, உபேந்திரா, துனியா விஜய் போன்ற கன்னட நடிகர்கள் பிற மாநிலங்களில் சென்று நடித்தது போன்ற உதாரணங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். "நாம் பிற மொழிகளுக்கு செல்கிறோம். ஆனால் அங்கிருந்து யார் இங்கே வருகிறார்கள்?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
விஜய் குறித்து கிச்சா சுதீப்
இந்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கிச்சா சுதீப் பேசிய விஷயங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. "தளபதி விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் அவர் யாரையும் பற்றி தவறாக பேசமாட்டார். அந்த பண்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் 'புலி' படத்தில் நான் நடித்தேன்" என்று அவர் கூறினார்.
மேலும், "நான் பிற மொழிப் படங்களில் நடித்தது பணத்திற்காக அல்ல. நட்புக்காகத்தான். சல்மான் கான் தனிப்பட்ட முறையில் கேட்டதால், 'தபாங் 3' படத்தில் எந்த சம்பளமும் வாங்காமல் நடித்தேன். அதேபோல் விஜயுடன் நடித்தது மரியாதைக்கும், நட்புக்கும் கொடுத்த முக்கியத்துவம்" என்றும் சுதீப் தெரிவித்தார்.
நான் ஈ முதல் புலி வரை
தொடர்ந்து பேசிய கிச்சா சுதீப், "'நான் ஈ' படத்தின் கதை என்னை ஆழமாக பாதித்தது. அதனால்தான் அந்தப் படத்தில் நடித்தேன். மொழி முக்கியம் அல்ல, கதை முக்கியம் என்பதே என் நம்பிக்கை" என்றார்.
அதுபோல இந்திய சினிமாவின் மூத்த நடிகர்கள் குறித்தும் கிச்சா சுதீப் கருத்து தெரிவித்தார். "ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போன்றவர்களுக்கு வயது ஒரு தடையல்ல. இந்த வயதிலும் அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், படங்கள் வெற்றி பெறுகின்றன. சினிமாவில் நீடித்து நிற்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சிலரால் மட்டுமே ரசிகர்களின் அன்பை தொடர்ந்து பெற முடிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications