உதவி செய்வதை வீடியோ வெளியிடுவதற்கு காரணமே இதுதான்! 20 லட்சம் சீட்.. KPY பாலா எமோஷனல்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த கேபிஒய் பாலா தன்னுடைய சொந்த பணத்திலிருந்து பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். உதவி செய்யும்போது அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த சிலர் எதற்காக பாலா உதவி செய்வது வீடியோ வெளியிட வேண்டும்? என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது அதற்கு பாலா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் போட்டியாளராக கலந்து கொண்ட கேபிஒய் பாலா பிறகு அதே சேனலில் தொகுப்பாளராக மாறி இருந்தார். அதிலும் சில வருடங்களுக்கு முன்பு பாலா இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளில் பாலா கலந்து கொண்டார். அதன் மூலமாக வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பலருக்கு உதவி செய்து வருகிறார்.

அதிலும் வாகன வசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாத கிராமங்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்காக மெயின்டனன்ஸ் செலவுகளையும் தொடர்ந்து பாலாவை கவனித்து வருகிறார். அதோடு நடிகர் மற்றும் சமூக சேவகராக இருக்கும் லாரன்ஸ் மாஸ்டருடன் சேவை என்ற அமைப்பிலும் பாலா இணைந்திருக்கும் நிலையில் அதன் மூலமாகவும் பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு அதற்கான உதவிகளும், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான பொருள்கள் பலவற்றையும் வாங்கிக் கொடுத்து வருகிறார்கள். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. பாலாவின் சேவையை பலர் பாராட்டினாலும் சிலர் பாலா இவ்வளவு செய்வது சரிதான் ஆனால் எதற்காக அதை விளம்பரப்படுத்த வேண்டும்? அவர் உண்மையாக யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அதை அடுத்தவர்களுக்கு சொல்லாமல் கொடுக்க வேண்டியதுதானே?
தான் செய்யும் உதவியை எதற்காக இவர் பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் பாலாவிற்கு தொடர்ந்து உதவி செய்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? பணத்தை எல்லாம் இப்படி உதவி செய்துவிட்டால் நாளைக்கு நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பாலா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் உதவி செய்வதை வீடியோவாக வெளியிடுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நான் எதற்காக அப்படி செய்கிறேன் என்றால் நான் ஒரு உதவி செய்வது, ஒரு கல் எடுத்து வைக்கிறேன் என்றால் அதை பலர் பின் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் தான். நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளை பார்த்து பலர் மனம் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் அதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு கல்லூரியில் 20 லட்சம் சீட்டை இலவசமாக ஒரு மாணவருக்கு கொடுத்திருக்கிறார்கள். அது என்னிடம் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அதுபோல ஒரு மாணவரின் மருத்துவ செலவு பற்றி நான் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதை பார்த்து பிரபலமான ஒரு மருத்துவமனையில் இருந்து அந்த மாணவருக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார்கள்.

இதை எல்லாம் நான் வெளியே சொல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய உதவிகள் எல்லாம் கஷ்டப்படுறவர்களுக்கு கிடைத்திருக்குமா? நான் இப்போது 5 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறேன். அந்த ஆம்புலன்ஸ் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதுபோல 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க மருத்துவமனைக்கு அந்த ஆம்புலன்ஸில் போயிருக்கின்றனர்.
இது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். நான் நாளைக்கு பீல்ட் அவுட் ஆகி வெளியே போனாலும் எனக்கு அது பற்றி கவலை கிடையாது. என்னால் சிலராவது வாழ்கிறார்களே அதுவே எனக்கு போதும் என்று அந்த பேட்டியில் கேபிஒய் பாலா பேசி இருக்கிறார். கேபிஒய் பாலாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications