ஒன்னு இங்கே இருக்கு...இன்னொன்னு எங்கே?.. அடடே!
சென்னை: சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் நடிகர் செந்தில் குழந்தைகளுடன் போனில் பேசினார். அப்போது ஒரு குழந்தை ஒரு வாழைப் பழம் இங்கே இருக்கு.. இன்னொன்னு எங்கேன்னு கேட்டு காமெடி செய்தது.
கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலை வாழைப்பழம் வாங்கி வர சொல்வது, அதில் இன்னொன்னு இல்லாமல் போக ஒன்னு இங்கே இருக்கு.. இன்னொன்னு எங்கேன்னு கவுண்டமணி கேட்டு.. அதுதான் இதுன்னு செந்தில் சொல்வது செம காமெடி.
இன்றைக்கும் இந்த காமெடியை அடிச்சுக்க இன்னொரு காமெடி இல்லை. கரகாட்டக்காரன் படம் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடி புகழடைய இந்த காமெடியும் ஒரு காரணம்.
குட்டி சுட்டீஸ்
சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கோவை சரளா கிட்டத்தட்ட குழந்தையாக மாறி இந்த ஷோவை நடத்துகிறார். இவருக்கு ஏற்றபடி அழகான டீசன்ட்டான உடைகள் கோவை சரளாவுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்து பல புதுமைகளை நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்.
போனில் காமெடி நடிகர்கள்
கோவை சரளாவுடன் நடித்த காமெடி நடிகர்கள், சூரி, சதீஷ், யோகிபாபு போன்றவர்கள் போனில் அழைப்பு விடுத்ததும் லைனில் வந்து குழந்தைகளுடன் பேசுவது ரசிக்கும்படி இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் செந்தில் லைனில் வந்து குழந்தைகளுடன் பேசினார். குழந்தைகள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு மிக அழகாக போனில் பேசுகிறார்கள்.
என்ன பழம்
செந்திலிடம் ஒரு குழந்தை உங்களுக்கு என்ன பழம் பிடிக்கும் என்று கேட்க, வாழைப்பழம் என்று சொன்னார் செந்தில். ஒன்னு இங்கே இருக்கு இன்னொன்னு எங்கே என்று கேட்டது குழந்தை. அதற்கு இன்னொன்னை அவங்ககிட்டேயே கேளும்மா என்று சொன்னார் செந்தில். கவுண்டனமணி சார்கிட்ட அடி வாங்குவீங்களே...
நீங்க அடிப்பீங்களா
நீங்க அது மாதிரி யாரையாவது அடிப்பீங்களான்னு ஒரு குழந்தை கேட்டது... நான் யாரையும் அடிக்க மாட்டேன்பா என்று சொன்னார் செந்தில். எப்போதும் டிரவுசர் போட்டு இருப்பீங்களே இப்போ என்ன போட்டு இருக்கீங்கன்னு கூட ஒரு குழந்தை கேட்டது.. இப்போ லுங்கி கட்டி இருக்கேன் என்று சொல்லி சிரித்தார் செந்தில்.