ஐந்தே நாளில்.. தயாரிப்பு செலவைவிட 2 மடங்கு லாபம் தந்த மதகஜராஜா! பாக்ஸ் ஆபீஸ் சக்சசுக்கு காரணம் என்ன?
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த மதகஜராஜா திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. 2012ல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, 2013ல் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டாலும், 12 ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் (madhagajaraja collection) புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வசூலை குவித்து வருகிறது. 5 நாட்களில் மொத்தமாக ரூ. 28 கோடி வசூலை கடந்து, திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது (madha gaja raja box office collection day 5).

பல வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகியும் மதகதராஜா திரைப்படம் அடைந்த வெற்றி பல விஷயங்களை தமிழ் திரையுலகிற்கு பாடமாக எடுத்துக் காட்டுகிறது. இதை டேக்-அவேயாக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் எடுத்துக்கொண்டால் தமிழில் மக்களை ஈர்க்கும் படங்கள் வரத் தொடங்கும். சரி, அப்படி என்னதான் இந்த சக்சசுக்கு காரணம்.
சுந்தர் சி இயக்கும் படங்கள் என்றாலே காமெடி, பொழுதுபோக்கு என மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஹாரர் பிளஸ் கிளாமர், அல்லது காமெடி பிளஸ் கிளாமர் என்பது சுந்தர் சி பாணி. இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, அவரது இயக்கத்தின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. ஹாரரும் இல்லாத, கிளாமரும் இல்லாத அரண்மனை 4 கூட, சுந்தர் சி என்ற பெயருக்காக ஓடியது. அப்படியிருக்கும்போது அவர் பீக்கில் இருந்தபோது எடுத்த இந்த படம் ஓடாமல் போய்விடுமா என்ன.
விஷால் மற்றும் சந்தானம்
விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த காம்பினேஷனுக்கு ரசிகர்கள் வரவேற்பை அளித்துள்ளார்கள். இந்த படமும் அந்த கூட்டணியின் வலுவை நிரூபித்துள்ளது. சந்தானம் காமெடியனாக இருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்போது நடிக்கும் சந்தானம் படங்கள் போல செயற்கையாக அல்லாமல், மதகதராஜாவில் காமெடி இயல்பாக உள்ளது.
நோஸ்டால்ஜி மார்க்கெட்டிங்
பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வதன் மூலம், அந்த காலகட்டத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, ரசிகர்களின் நோஸ்டால்ஜியாவை தூண்டிவிட முடியும் என்பதை படத்தின் சக்சஸ் காட்டுகிறது.
தமிழ் சினிமாவில் காமெடியின் முக்கியத்துவம்
மதகதராஜா போன்ற காமெடி படங்கள், மக்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கை அளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழில் பெரும் காமெடி பஞ்சம் நிலவுகிறது. தலைகீழாகத்தான் குதிப்பேன் என்பதை போல சந்தானம், நடித்தால் ஹீரோதான் என்று உறுதியாக உள்ளார். அது உங்களுக்கு செட் ஆகவில்லை என்று மக்கள் பாக்ஸ்ஆபீஸ் ரிசல்ட் மூலம் திரும்ப திரும்ப சொன்னாலும் ஏனோ அடம் பிடிக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் போல ஹீரோவுக்கு இணையான அந்தஸ்துள்ள படத்திலாவது நடிக்கலாம். ஆனால் சந்தானம் தனது நிலைப்பாட்டை மாற்றாதது காமெடி டிராக்கிற்கு பெரும் இழப்பாக மாறியுள்ளது.
வடிவேலு ஃபீல்டு அவுட், விவேக் மறைந்துவிட்டார், சூரியின் சிங்கம் 3 காமெடி டிராக்கை பார்த்த பிறகு, அவர் ஹீரோவாக நடிப்பதே உத்தமம் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். யோகி பாபுவிடம் சரக்கு தீர்ந்துவிட்டது. இப்படியான காமெடி பஞ்சம் மிக்க காலகட்டத்தில் மக்கள் நல்ல காமெடி படங்களை ரசிக்க ரெடியாக இருப்பதை மதகஜராஜா சக்சஸ் காட்டுகிறது. மதகஜராஜா படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் ஜனரஞ்சக படங்கள் எப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மக்கள் வருவது படம் பார்க்க, பாடம் கேட்க அல்ல என்பதை சுந்தர் சி நன்கு புரிந்து வைத்துள்ளார். உள்ளத்தை அள்ளித்தா காலத்தில் இருந்தே, மனுஷன் இதில் கெட்டிதான்.












Click it and Unblock the Notifications