எப்படி இருந்த சென்னை இப்படி ஆயிருச்சே...மனோபாலா!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகரும் இயக்குனருமான மனோ பாலா எப்படி இருந்த சென்னை இப்படி ஆயிருச்சே என்று சொன்னார்.
கொரோனா காலம்.. .லாக்டவுன் என்று பல சிக்கல்கள் இருந்தாலும், வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகள் மக்களை குஷிப்படுத்த அவ்வப்போது ஷூட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகித்தான் வருகின்றன.
அப்படி இன்று காலை ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் மனோபாலா கலந்துக்கொண்டு பல சுவையான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
எப்படி இருந்த நான்
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சொல்லும்படி இப்போது சென்னை இருக்கிறது. எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிப்போச்சேன்னு மனோபாலாவை வைத்து கிரியேட்டர்ஸ் மீம்ஸ் போடுகிறார்கள். கடற்கரை வெறிச்சோடி கிடக்கிறது. சென்னையின் எந்த பகுதிக்கும் 15 நிமிடத்தில் சென்று விடலாம்...எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிப்போச்சே என்று மனோபாலாவும் சொன்னார்.
வேற வழியில்லை
லாக்டவுன் நேரத்தில் மக்களுக்கு வேற வழியில்லை... காமெடி சானல்களை பார்த்து, சிரித்து மகிழ்ந்தால்தான் மனம் லேசாகும். எதிர்ப்பு சக்தி கூடும் என்று சொன்னார். லாக்டவுன் நேரத்தில் மனதிலும், மூளையிலும் எதையும் ஏத்திக்க வேணாம்...மனம். மூளை இரண்டையும் லேசாக வைத்திருங்கள் என்றும் சொன்னார்.
23ம் புலிகேசி
23ம் புலிகேசி படத்தில் கொல்லராக நடித்து இருப்பார் மனோபாலா. அப்போது மன்னர் வடிவேலுவுக்கு உறையுடன் கத்தி செய்து வந்து கொடுப்பார். உறையும் கத்தியும் தனித் தனியாக பிரிந்து ஒட்டாமல் மன்னர் வடிவேலுவை கடுப்பேத்தி விடும். இந்த காட்சி முடிந்து அடுத்து வரும் ஒரு காட்சி ரொம்ப காமெடியாக இருக்கும்.
வெப்ப நீரில் வடிவேலு
வெப்ப நீர் குளத்தில் மன்னர் வடிவேலு மாட்டிக்கொள்வார். அப்போது வந்து எட்டிப்பார்க்கும் கொல்லர் மனோபாலாவைப் பார்த்து சந்தோசம் அடைந்த வடிவேலு...கொல்லா நீயா.. என்னை காப்பாற்று என்று கேட்க,.என்ன செய்வது மன்னா இந்த வேலையையும் நான்தான் செய்தேன் என்று மனோபாலா சொலவார். நீயா செய்தாய் என்று கேட்கும் வடிவேலு அப்போதுதான் கட்டி இருந்த சங்கிலியில் நம்பிக்கை இல்லாமல் அதை அறுத்தெறிப்பார்.
காட்சியை தர மாட்டேன்
படம் வெளியான போது இந்த நகைச்சுவை காட்சியை மீடியாக்களுக்கு தர மாட்டேன் என்று தயாரிப்பாளர் சங்கர் சொன்னாராம். சார்.. இதுதான் செம காமெடி சீன.. இதைத் தந்தால்தான் என் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு புகழ் கிடைக்கும் என்று மனோ பாலா சொல்ல. இதில் முக்கிய கதையும் இருக்கிறது. படம் வெளியாகி ஒன்றரை மாதம் போகட்டும். அப்போது மீடியாக்களுக்கு கொடுக்கலாம் என்று சொன்னாராம்.இதை வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மனோபாலா கூறினார்.