'பாட்ஷா' மனோபாலா டைரக்ட் பண்ணிருக்க வேண்டிய படம் - ரஜினி சொன்னது என்ன? எப்படி மாறியது! பிளாஸ்பேக்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' நடிகர் மனோபாலா பண்ணியிருக்க வேண்டிய படம், ஆனால் என்ன காரணமோ அவரை மாற்றிவிட்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்குவார் என்று படதயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்பிறகு ரஜினி வீட்டுக்கு நேராக போன, மனோபாலா கேள்வி எழுப்பினார். அன்று நடந்த பிளாஸ்பேக்கை இப்போது பார்ப்போம்.
இயக்குனர் மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு திரையுரலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர் மனோபாலாவின் திரையுலக பயணத்தில் நடந்த மறக்க முடியாத ஒரு முக்கியமான விஷயத்தை இப்போது பார்ப்போம்.

இயக்குநரும் நடிகருமான மனோபாலா முன்பு பேட்டி ஒன்றில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தை தான் இயக்காமல் போனது ஏன், அந்த வாய்ப்பு தடலாடியாக சுரேஷ் கிருஷ்ணாவிற்கு மாறியது ஏன் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
மனோபாலா கடந்த சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: "இயக்குநர் பாரதிராஜா எனக்குக் கடவுள்.. 1980களில் தமிழ் திரையுலகை பொறுத்தவரை பாரதிராஜாவிடம் வரிசையாக வந்தவர்கள்தான் பெரிய இயக்குநர்களாக வலம் வந்திருக்கிறார்கள். அவரிடம் இருந்து பாக்யராஜ் வந்தார். நான் வந்தேன். மணிவண்ணன் வந்தார். கே.ரங்கராஜ் வந்தார். இப்படி எண்பதுகளில் நாங்கள் வந்து நாங்கள்தான் வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வந்தோம். அப்போது ஆர் சுந்தர்ராஜன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரும் தனித்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்தனர்.

1980களில் மோகன் பெரிய நடிகராக இருந்தார், அவரை வைத்து நான், மணிவண்ணன், கே.ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன் எல்லாரும் இருபது நாள் என கால்ஷீட்டுக்குள் ஆளுக்கொரு படம் பண்ணுவோம். அப்போது ரஜினி ஒருமுறை எங்களிடம், 'இங்கே நீங்கதான் எல்லாமேவா? வேற யாரும் இங்கே ஜெயிக்க முடியாதா? வரிசையா உங்க ஆளுங்களே ஜெயிச்சிட்டிருக்காங்களே. பொறாமையா இருக்கு' என்று கூறினார். ரஜினியே இப்படி சொல்லும் அளவுக்கு பாரதிராஜாவிடம் இருந்து வந்த இயக்குநர்கள், ஜெயித்துக்கொண்டே இருந்தோம்.
சத்யா மூவிஸ் தயாரிப்பில், ரஜினியை வைத்து, நான் 'ஊர்க்காவலன்' படத்தை இயக்கினேன். அதன் பிறகு, அதே சத்யா மூவிஸ் நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கச் சொல்லி என்னிடம் கேட்டார்கள். நானும் அவர்கள் சொன்ன கதையை தயார் செய்து வந்தேன். அது அமிதாப் நடித்த இந்திப்படம்.
ஆனால் திடீரென என்னவோ நடந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார் என அறிவித்தார்கள். நான் நேராக ரஜினியின் வீட்டுக்கே சென்று, 'ஏன் என்னாச்சு?' என்று கேட்டேன். 'ஒண்ணும் கேக்காதீங்க. இந்தப் படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கட்டும். பின்னாடி ஒரு படத்துல நாம திரும்பவும் ஒண்ணு சேருவோம். இது உறுதி' என்று சொன்னார். நான் இயக்குவதாக இருந்து தடாலடியாக சுரேஷ் கிருஷ்ணா என மாறிய படம்தான் 'பாட்ஷா'. ஆனால் அதன் பிறகு, ரஜினியை வைத்து நான் இயக்கவே இல்லை. 'ஊர்க்காவலன்' படத்துடன் சரி. அதையடுத்து நானும் ரஜினியிடம் இதுபற்றிக் கேட்டுக்கவே இல்லை" இவ்வாறு மனோபாலா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications