மனோஜ்க்கு அழுத்தம்.. இந்த நிலைமைக்கு காரணம் அந்த வார்த்தை தான்.. கண் கலங்கிய நடிகர் தம்பி ராமையா
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருடைய உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அப்போது மனோஜின் இந்த நிலைமைக்கு காரணம் இதுதான் என்று தம்பி ராமையா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
திரைத்துறை ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்திதான் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஹூசைனி மரணம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நேற்று மாலையில் இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு இதய நோய்க்கான சிகிச்சை எடுக்கப்பட்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார். ஆனால் திடீரென்று அவரின் இந்த நிலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

வெளியே சொல்ல முடியாத கவலை
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தம்பி ராமையா இதுகுறித்து பேசும்போது, அப்பா பெயரை நீ காப்பாத்தலையா? அப்பா இடத்துக்கு நீ வர வேண்டாமா? என்ற ஒரு அழுத்தம் இந்த சமுதாயம் அவருக்கு கொடுத்திருக்கிறது. வெளியே அவர் சராசரியான மனிதனாக இருந்தாலும் வீட்டிற்குள் கதவை சாத்திக்கொண்டு அவருடைய மனதிற்குள் எல்லா வேதனைகளையும் வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
மன அழுத்தம்
அதனால் தான் 48 வயதில் மாரடைப்பால் அவருடைய உயிர் இந்த பூமியை விட்டு போயிருக்கிறது என்று ஒரு கிராமத்தில் இருந்து வந்த சராசரி மனிதனாக நான் இதை உணர்கிறேன். அப்பாவோட இடத்தை பிடிக்கணும், அப்பாவுடைய பெயரை காப்பாத்தணும் அப்பாவோட பிள்ளையா நான் ஏதாவது வெற்றி பெறனும் என்று அழுத்தம் தான் இந்த தம்பியின் இந்த நிலைமைக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
சினிமாவில் சாதித்த பாரதிராஜா
1970 களில் சினிமா என்றால் கிராமத்தில் கற்பனையோடு இருந்த இளைஞர்களுக்கு ஒரு கனவாக இருந்தது. உங்கள் கனவெல்லாம் நிஜமாகும் என்று ஒரு மனிதன் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு ரிஸ்க் எடுத்து இங்க வந்து காலூன்றி ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். அடுத்த தலைமுறையினருக்கு தைரியம் கொடுக்கும் வகையில் பாரதிராஜா முன்மாதிரியாக இருக்கிறார்.
கனவுக்கு உயிர் கொடுத்தவர்
நிறைய இளைஞர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுத்த பிதாமகன் பாரதிராஜா சார் இன்று 80 வயதை தாண்டி இருக்கும் நிலையில் நிம்மதி இழந்து இருப்பது மிகப்பெரிய கொடுஞ்செயல். இறைவன் மீது இந்த மாதிரி சூழ்நிலையில் தான் கோபம் வருது. பாரதிராஜா சாருடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை. அவர் எவ்வளவு பெரிய கலை வித்தகர். அவர் பேசவில்லை என்றாலும் இன்னும் பல நூறு வருஷங்கள் அவருடைய பெயரை எல்லோரும் சொல்லுவார்கள்.
முரளி சொன்ன வார்த்தை
இந்த மாபெரும் கலைஞருக்கு மகனாக பிறந்தது தான் மனோஜின் மன அழுத்தத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன். முரளி சாரும் மனோஜும் கடல் பூக்கள் படத்தில் நடிக்கும் போது முரளி சார் மனோஜ் பற்றி சொல்லி இருக்காரு. மனோஜ்க்குள் அவ்வளவு கனவுகள் திறமைகள் இருக்கிறது அதை எப்படி வெளியே கொண்டுட்டு வருவது என்று தெரியாமல் இருக்கிறார் என்று சொல்லுவாரு.
கடல் பூக்கள் உதிர்ந்தது
முரளியும் 45 வயசுல இறந்துட்டாரு இப்போ இந்த தம்பியும் 48 வயசுல இறந்துட்டாரு. கடல் பூக்கள் ரெண்டும் உதிர்ந்திட்டு. இந்த வயதில் எவ்வளவு கனவு இருந்திருக்கும்? அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பாரு? இதையெல்லாம் நினைக்கும் போது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது என்று எமோஷனலாக தம்பி ராமையா பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications