இயக்குநர் திருச்செல்வத்தின் மனைவி யார் தெரியுமா? "கோலங்கள்" அபி கேரக்டருக்கு இவர்தான் காரணமா?
சென்னை: இயக்குநர் திருச்செல்வத்தின் மனைவி பாரதியை பார்த்துள்ளீர்களா, இவருக்கும் திருச்செல்வம் தயாரிக்கும் சீரியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கோலங்கள் தொடங்கி எதிர்நீச்சல் 2 வரை திருச்செல்வத்தின் குடும்பப் பாங்கான சீரியல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். இரவு ஒளிபரப்பப்படுவது மட்டுமல்லாமல் பகலில் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்படுவதால் ஏராளமானோர் சீரியலை பார்க்கிறார்கள்.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஆதி குணசேகரனாக நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கேரக்டர் எல்லாம் மறக்கவே முடியாது. இந்த சீரியலுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் படை வந்தனர். அவர் இறந்ததும் அந்த கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்ற யோசனை எழுந்தது.
பின்னர் வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்திலும் அவரே நடிக்கிறார். முதல் பாகத்தில் வீட்டோட அடக்கப்பட்டிருந்த பெண்கள், தற்போது இந்த பாகத்தில் திமிறி வெளியே வருகிறார்கள். அவர்களிடம் ஆதி குணசேகரன் சிக்கி பாடாய்படுவதுதான் இந்த சீரியலின் கருப்பொருளாக இருக்கும்.
பெண்களுக்கும் மனம் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இது முடியும் என தெரிகிறது. எதிர்நீச்சல் சீரியலை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அதில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் இணை இயக்குநராக பணிபுரிந்தார். இதையடுத்து தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் இயக்குநராக சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் சீரியலே மிகப் பெரிய வெற்றியை இவருக்கு தேடி தந்தது.
இந்த சீரியலிலும் இவர் தொல்காப்பியன் எனும் கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி உள்ளிட்ட சீரியல்களையும் இயக்கியிருந்தார். இயக்குநர் திருச்செல்வம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவருடைய மனைவி பாரதி. இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். சிவில் என்ஜினியர். கோலங்கள் சீரியலில் தேவயானியும் தீபா வெங்கட்டும் கட்டுமான நிறுவனத்தை தொடங்கியிருப்பார்கள். அது போல் சில சீரியல்களில் கட்டுமான பணிகள் காட்டப்படுவது எல்லாமே தனது மனைவி முன்னுதாரணமாக இருந்ததுதானாம்.
திருச்செல்வம் காவேரி, மெட்டி ஒலியில் இயக்குநர் திருமுருகனிடம் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியிருந்தார். அதன் பிறகு இவர் எடுத்த கோலங்கள் சீரியல் 1533 எபிசோடுகளை கடந்து 6 ஆண்டுகள் ஓடியது.
விகடன் யூடியூப் சேனலுக்கு வல்லமை தாராயோ என்ற நாடகத்திற்கு கதை எழுதியிருந்தார். இதுதான் இந்தியாவின் முதல் டிஜிட்டல் நாடகமாகும். கோலங்கள் சீரியலுக்காக இவருக்கு தமிழக அரசின் விருதுகள் கிடைத்தன. பாரதிக்கும் திருச்செல்வத்திற்கும் பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு சீரியல் நடிகர், நடிகைகள் எல்லாம் வந்து வாழ்த்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications