உதவி செஞ்ச என்கிட்டயே சசிகுமார் மறைச்சுட்டாரு.. சுப்பிரமணியபுரம் பட ரகசியத்தை உடைத்த ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் ஒரு பேட்டியில் சுப்பிரமணியபுரம் பட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் இயக்குனர் சசிகுமாருக்கு பல உதவிகள் செய்தாலும் படத்தின் கதையை என்னிடமே சொல்லாமல் மறைத்து விட்டார் என்றும் மேலும் சில தகவல்களையும் ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சன் டிவி, விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பாடல் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்த ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக பிரபலமடைந்தது சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "கண்கள் இரண்டால்" என்ற பாடல் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் இந்த பாடலும் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்.

அதுபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது தான். நட்பை மையமாகக் கொண்டு 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் கதையாக இந்த திரைப்படம் இருந்து வந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பலரும் புது முகங்களாக தான் இருந்தனர். ஆனாலும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கும் பாடலுக்கும் அதிகமான வரவேற்பு கிடைத்துவிட்டது. இது குறித்து இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், இயக்குனர் சசிகுமார் என்னிடம் நான் ஒரு படத்தை இயக்கப் போகிறேன் அதற்கு உங்களுடைய உதவி வேண்டும் என்று சொல்லி இருந்தார். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அப்போது என்னிடம் ஒரு கிராமத்தில் ஒரு திருவிழா நடக்கப்போகிறது அங்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து ஆடுவது போன்று ஒரு பாடல் வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
நானும் ஒரு பாடலை எழுதி அதற்கு டியூன் போட்டு வைத்திருந்தேன். பிறகு சில நாட்கள் கழித்து சசிகுமார் வந்து அந்த பாடலை கேட்க அவருக்கு அது பிடித்து விட்டது. அப்படி உருவான பாடல் தான் மதுர குலுங்க குலுங்க என்ற பாடல். இந்த பாடலுக்குப் பிறகு என்னிடம் இன்னொரு பாடலையும் ரெடி பண்ண வேண்டும் என்று சொல்லி இருந்தார். ஆனால் படத்திற்கான கதையை என்னிடம் கொஞ்சம் கூட சொல்லவில்லை. யாரு தயாரிப்பாளர் என்று தகவல்களை கேட்டால் அதை சொல்லவே மாட்டார்.
உண்மையில் சசிகுமார் பெரிய இயக்குனராக இருந்தாலும் அவருடைய மனதிற்குள் இருப்பதை யாராலும் யூகிக்க முடியாது. என்னிடம் பாடல் கேட்டாரே தவிர அதற்குள்ள படம் யார் நடிக்கப் போகிறார்கள் என்று எந்த தகவலையுமே சொல்லவில்லை. அவர் அப்படி எல்லா விஷயங்களையும் ரகசியமாக வைத்திருப்பதால் தான் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று எனக்கு பிறகு புரிந்தது.
இதுபோல அந்த திரைப்படத்தில் 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் காதல் போன்று ஒரு பாடல் வேண்டும் அதை இளையராஜாவிடம் தான் வாங்க வேண்டும் என்று முதலில் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை நீங்களே ஒரு பாட்டை உருவாக்குங்க என்று சொல்ல, நானும் ஆறு டியூன் போட்டு இருந்தேன். அதில் ஒரு டியூனை கண்டிப்பாக இவர் செலக்ட் செய்வார் என்று எனக்கு தெரியும்.
அந்த ட்யூனை முதலில் காட்டாமல் மீதமுள்ள ஐந்து டியூனை போட்டு காட்ட அதற்கு பிறகு வேறு ஏதாவது இருக்கிறதா? என்று சசிகுமார் கேட்டதும் கடைசியாக அந்த டியூனை கொடுத்தேன். அது அவருக்கு ரொம்பவே பிடித்து போச்சு அந்த பாடல் தான் கண்கள் இரண்டால் பாடல் என்று அந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications