Neeya Naana: இஎம்ஐ இல்லன்னா கார், பைக், வீடு இல்லை! வீடு தீப்பிடித்த போது கைகொடுத்த EMI! பெண் கண்ணீர்
சென்னை: இஎம்ஐ எனப்படும் மாத தவணை இல்லாமல் வீடு, கார் எல்லாம் வாங்க முடியுமா, முடியாதா என்பது குறித்து இந்த வாரம் விஜய் டிவியில் நீயா நானாவில் பேசப்படுகிறது. இது தொடர்பாக 4 ப்ரோமோக்கள் வெளியாகின.
1970, 80களில் நாற்காலி, டிவி, ரேடியோ உள்ளிட்டவைகளை வாங்க வேண்டுமானால் தினந்தோறும் பர்னிச்சர் கடைக்காரர் வந்து பணம் வசூலித்துச் செல்வார். சிலர் மாத தவணைக்கு கூட வாங்குவர்.

அது போல் பள்ளி, கல்லூரி படிப்பு, திருமணம், குழந்தை பிறப்பு, மருத்துவ செலவு என எதுவாக இருந்தாலும் தனக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ அல்லது வட்டிக்கு கடன் கொடுப்போரிடமோ கடன் வாங்கி செலவுகளை செய்து வந்தோம்.
மனம் வேதனை
அந்த காலத்தில் நமது தந்தையோ தாயோ, உடன் பிறந்தவரோ ஒருவரிடம் போய் கடன் என வாங்கும் போது அவர்களின் மனம் எப்படி பாடுபட்டிருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. அதிலும் அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால்! அவ்வளவுதான்!
எளிய முறை தவணை
இப்படி இருந்த சூழலில்தான் அண்மைக்காலமாக எளிய தவணை வசதி என சொல்லப்படும் இஎம்ஐ (Easy Monthly Instalment) என்பது அறிமுகமானது. இதை தமிழகத்தின் மிக பெரிய வீட்டு உபயோக பொருள் விற்பனையகம் ஒன்று தொடங்கியது.
பாதி பணம்
பாதி பணத்தை கட்டிவிட்டு டிவியை எடுத்துச் சென்றுவிட்டு மீதி பணத்தை தவணையில் செலுத்துவது என்பது தொடங்கி தற்போது ரூ 1 செலுத்திவிட்டு ஏசியை வீட்டிற்கு கொண்டு செல்லும் அளவுக்கு இஎம்ஐ மக்களுடன் ஒன்றாகிவிட்டது.
கார் வீடு
இதன் மூலம் செல்போன், கார், வீடு, பைக், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை வாங்குகிறோம். கடன் வாங்கி அதாவது இஎம்ஐ மூலம் திருமணம் கூட சிலர் செய்து கொள்கிறார்கள். எல்லா வசதிகளும் கொண்ட பெரிய திருமண மண்டபம், சுவையான உணவு, டெகரேஷன் உள்ளிட்டவைகளுக்கு கடன் வாங்குகிறார்கள். எல்லாவற்றுக்கு மேல் சுற்றுலா செல்வதற்கும் ஹனிமூன் செல்வதற்கும் கூட சிலர் இஎம்ஐ மூலம் பணம் பெறுவதை இது போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் சொல்ல கேட்டிருக்கிறோம். இது நல்லதா கெட்டதா என்பது குறித்துதான் இந்த வாரம் நீயா நானாவில் பேசப்படுகிறது.
நாளை மதியம் நிகழ்ச்சி
ஒரு பக்கம் இஎம்ஐ வசதிக்கு ஆதரவாகவும் மறுபுறம் அப்படி கடன் வாங்கி வசதியா இருக்கணுமா என எதிர்ப்போரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 12.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் பேசுகையில் இஎம்ஐ இல்லாத ஒரு வாழ்க்கை நடுத்தர மக்களுக்கு சாத்தியம் கிடையாது. வீடு, கார், போன் இவற்றை இஎம்ஐ மூலம் வாங்குகிறோம். பள்ளி கட்டணம் கூட தவணை முறையில் கட்டுகிறோம். நாமாக பணத்தை சேர்த்து வைத்து வாங்குவதற்கு பதிலாக இஎம்ஐயில் வாங்கினால் சரியாக கட்டி விட வேண்டும் என்ற பொறுப்பு வரும் என்றனர்.

வீடே இல்லை!
அப்போது ஒரு பெண் பேசுகையில், எங்கள் வீட்டில் தீவிபத்து நடந்தது. அப்போது எங்களுக்கு ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லை. ஒரு கடையில் படுத்திருந்தோம். அங்கு இரண்டு பேர் கூட படுக்க முடியாது. அப்போது எங்களுக்கு இஎம்ஐதான் கை கொடுத்தது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இஎம்ஐ நல்லதுதான்
இன்னொருவர் கூறுகையில் இஎம்ஐ ஏன் நல்லது என்றால் மற்றவர்களிடம் கடன் கேட்க கூச்சமாக இருக்கும் போது இஎம்ஐ நமக்கு உதவியாக இருக்கிறது. எந்த பொருளையும் நமது சக்திக்கு மீறி காசை கொடுத்து வாங்க முடியாது. அந்த இஎம்ஐ என்ற ஒரு ஆப்ஷன் இருப்பதால்தான் நாம் வசதியாக வாழ்கிறோம் என்றனர். அப்போது எதிர்தரப்பினர், இஎம்ஐ என்பது கமிட்மென்ட் கிடையாது. அது ஒரு பிரஷர். இன்று இஎம்ஐ வாங்க ஆரம்பித்தால் அது அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கும். நாம் சம்பாதித்து காசு சேர்த்து வைத்துதான் வாங்க வேண்டும் என்ற பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்.

60 ஆயிரத்தில் வீடா
ஒரு நிலம் வாங்க வேண்டும் என்றால் இஎம்ஐ இல்லாமல் வாங்க வேண்டும். "உங்களால் எவ்வளவு சேமிக்க முடியுமோ அதில் நிலத்தை வாங்க வேண்டும்" என்றனர். அதற்கு இஎம்ஐயை ஆதரிக்கும் நபர் ஒருவர், என்னால் மாதம் ரூ 50 ஆயிரம் சேமிக்க முடியும் என்றால் ஆண்டுக்கு 6 லட்சம், 10 ஆண்டுகளுக்கு ரூ 60 லட்சம் சேமிக்கலாம்.
ஆனால் 10 ஆண்டுகள் கழித்து அந்த நிலத்தின் விலை ரூ 1.80 கோடியாக இருக்கும். அந்த பணத்திற்கு நான் என்ன செய்ய முடியும். என்னிடம் 60 லட்சம்தானே இருக்கும். இதே எளிய தவணை மூலம் வாங்கினால் இப்போதைய விலைக்கே வாங்கிவிடலாம் என அந்த நபர் தெரிவித்தார். இன்று எல்லாவற்றிலும் எளிய முறை தவணை வசதி என்பது கலந்துவிட்டது. கிரெடிட் கார்டு மூலம் துணி, நகைகளை வாங்கிவிட்டு அந்த கடனை அடைக்க அதை அப்படியே இஎம்ஐயாக மாற்றி வாங்கி விடுகிறார்கள். இதனால் எளிமையான முறையில் பணம் செலுத்தி வருகிறோம்.
20 ஆண்டுகள் கழித்து
அதே வேளையில் இஎம்ஐயில் மறைமுகமாக வட்டி என்ற பெயரில் இரட்டிப்பு பணம் நம்மிடம் இருந்து பெறப்படும் என்பதையும் மறுப்பதற்கில்லை. 40 லட்சம் மதிப்பிலான ஒரு வீட்டை இஎம்ஐ மூலம் வாங்கினால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இஎம்ஐ போட்டால் அந்த 20 ஆண்டுகள் முடிந்து நாம் கட்டியிருக்கும் தொகை 60 லட்சமாக இருக்கும். அதாவது வாங்கியது 40 லட்சம், ஆனால் கட்டுவது ரூ 60 லட்சம். 20 ஆண்டுகள் கழித்து நாம் வாங்கிய வீடு ரூ 60 லட்சத்திற்கு விற்பனையாகுமா என்பது சந்தேகமே என்பதால் பலர் வீடு வாங்கும் போது தங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை திரட்டி விட்டு 30 முதல் 40 சதவீதம் பணம் மட்டுமே வங்கிக் கடனில் வாங்கி அதை இஎம்ஐயாக செலுத்த விரும்புகிறார்கள்.

20 சதவீத சேமிப்பு
எளிய முறை தவணையால்தான் மிடில் கிளாஸ் மக்களாலும் காரில் செல்ல முடிகிறது. விலையுயர்ந்த பைக்கை வாங்க முடிகிறது, சம்பாதிப்பதே செலவு செய்யத்தானே, என்ற வாதங்கள் எல்லாம் தனி! ஆனால் சம்பாதிக்கும் பணத்தில் 20 சதவீதமாவது சேமிக்க வேண்டும் என்பதுதான் வருங்காலத்திற்கு நல்லது என்பதை மறந்துவிடக் கூடாது! அதே நேரம் இஎம்ஐ சரியாக கட்டாவிட்டால் வீடாக இருந்தால் ஜப்தி செய்யப்பட்டுவிடும். கார், பைக், வீட்டு உபயோக பொருட்கள் என்றால் அவற்றை வங்கி ஊழியர்கள் கைப்பற்றி சென்றுவிடுவர் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஈஎம்ஐ குறித்து நீங்கள் நினைப்பது என்ன என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications