Pandian Stores 2: கதிர் பற்றி தெரிந்ததும் அப்பத்தா கேட்ட கேள்வி! பாண்டியனின் ரியாக்ஷன்! அதிர்ச்சியில் சக்திவேல்
சென்னை, ஆகஸ்ட் 1, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோடு, பல நாட்களாக மறைக்கப்பட்டிருந்த ஒரு ரகசியத்தை வெளிக்கொண்டு வந்து, குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நகைப் பிரச்சனை காரணமாக எழுந்த சர்ச்சையில், ராஜி தனது திருமணத்தின் பின்னணியில் நடந்த உண்மைகளை மனம் திறந்து பேசியது, கதிரின் தியாகத்தை வெளிப்படுத்தியதுடன், குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜியின் கண்ணீர்க் கதை
சக்திவேல் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில், ராஜி தனது திருமணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை சொல்லத் தொடங்குகிறார். "நான் காதலித்த பையன் கதிர் இல்லை, இன்னொருவன். அவனை நம்பிதான் நான் வீட்டை விட்டு ஓடிப்போனேன்," என்று அவர் கூற, அங்கிருந்த அனைவரும் உறைந்து போய் நிற்கின்றனர். ராஜியின் கல்யாணக் கதையைக் கேட்கத் தயங்கிய கோமதி, பயத்தில் மீனாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்கிறார்.
ராஜி தனது துயரமான கதையைத் தொடர்கிறார். "நான் அந்தப் பையனுடன் திருச்செந்தூருக்கு போய்விட்டேன். ஆனால், அந்தப் பையன் என்னை ஏமாற்றி நகையை எடுத்து வந்தது எனக்குத் தெரியாது. அவனிடம் அது குறித்துக் கேட்டபோது, என்னை அடித்து கீழே தள்ளிவிட்டு அவன் தப்பித்து ஓடிவிட்டான். அங்குதான் மீனா மற்றும் கோமதியுடன் வந்த கதிரைச் சந்தித்தேன். அவர் என்ன விஷயம் என்று என்னிடம் கேட்டபோது, நடந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். அவர் என்னை அவர் வீட்டிற்கே அழைத்தபோது, எந்த உரிமையில் நான் வர முடியும் என யோசித்தேன். வீட்டிற்கு வந்தால் உங்களிடம் அடி வாங்கணும், அசிங்கப்படணும் என நினைத்து, கதிரிடம் என்னைக் கட்டிக்கச் சொல்லி நான் தான் கேட்டேன்," என்று கண்ணீருடன் கூறினார்.
கதிரின் தியாகம்
ராஜி தொடர்ந்து, "தனக்காகவும், நம் குடும்பத்தின் மானத்தைக் காக்கவும் கதிர் என்னை கல்யாணம் செய்து அழைத்து வந்ததாகக் கூற, இதைக்கேட்டு கோமதி மற்றும் மீனா ஆசுவாசமடைகின்றனர். இதைக்கேட்ட குடும்பத்தினர், "இது உண்மையா?" எனக் கேட்க, அப்பத்தா, "என் மேல் சத்தியம் பண்ணு," என்று கேட்கிறார். ராஜி தனது மொத்த குடும்பத்தின் மீதும், சாமி மீதும் சத்தியம் செய்கிறார்.
"நகை எடுத்துட்டு ஓடினவன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தோம். அவனிடமிருந்து பாதி நகையை மீட்டுக் கொண்டு வந்தார்கள். கதிர் சித்தப்பாவிடம் கொடுத்து உங்களிடம் கொடுக்க தான் சொன்னான். எனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நகையை விற்க நானே முடிவு செய்தேன்," என்று ராஜி கூறுகிறார். இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அங்கிருந்து சென்று விடுகின்றனர்.
குடும்பத்தில் குழப்பம்
ராஜியை கதிர் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். எல்லோரும் அமைதியாக இருக்க, மயில், மீனாவிடம், "இதனால்தான் நீயும் அத்தையும் அடிக்கடி குசுகுசுன்னு பேசிக்கிட்டீங்களா? உங்களுக்கு இந்தக் கல்யாண விஷயம் முன்னவே தெரியுமா?" எனக் கேட்க, மீனா, "எனக்குமே இது புதுசுதான்," என மாற்றிப் பேசி விடுகிறார். "கோமதியிடம், "நீங்க இப்படியே அமைதியாக இருந்தீங்கன்னா எல்லோரும் நம்ம மேல சந்தேகப்படுவாங்க," எனக் கூறி அவரைப் பேசச் சொல்கிறார்.
கோமதி, "கல்யாண விஷயம் கூட விடு, நகை விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை?" எனக் கேட்க, குடும்பத்தினர் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்து விடுகின்றனர். ராஜி பாண்டியனிடம் மன்னிப்பு கேட்க, அவர் சமாதானமாகி உள்ளே சென்று விடுகிறார். குடும்பத்தினர் அவரது அமைதியை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் அமைதியாக இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications