அடி முறை.. கர்லா.. சிலம்பம் சுத்தி இளம் பெண்களின் மனதை சுண்டி இழுத்த வீரர்கள்.. நீயா நானா சுவாரஸ்யம்
சென்னை: நீயா நானா என்றாலே பேச்சுதான் என்பதை மாற்றி வீர விளையாட்டுக்களையும் அதை விளையாடும் வீரர்களையும் உலகிற்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியாக மாற்றியது. இன்றைய இளைஞர்கள் என்றாலே மொபைல் போனும் கைகளுமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றி விட்டது இன்றைய நீயா நானா.
பொங்கல் பண்டிகை என்றாலே கொண்டாட்டம் மட்டுமல்லாது வீர விளையாட்டுகளும் நிறைந்திருக்கும். கிராமங்களில் பொங்கல் பண்டிகை 3 நாட்களுக்கு களை கட்டும். அதனை கொண்டாடவே நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களுக்கு செல்கின்றனர். இன்றைக்கு நகரங்களிலும் விளையாட்டு போட்டிகள் வீர விளையாட்டுகள் நடத்த ஆரம்பித்து விட்டனர்.

விஜய் டிவியில் உழவர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான நீனா நானா நிகழ்ச்சியில் வீர விளையாட்டுகளை விளையாடும் இளைஞர்கள் ஒரு பக்கமும் சின்னத்திரை நாயகிகள் மற்றொரு பக்கம் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அட எம்பூட்டு வெட்கம்: வீர விளையாட்டு என்றாலே அதன் சுவாரஸ்யம் நம்முடைய வீரத்தை ரசிக்க முறைப்பெண்கள் இருக்கிறார்கள் என்பதுதான். கிராமங்களில் அத்தை மகன், மாமன் மகனின் வீரத்தை கை தட்டி ரசித்து முதலில் அங்கீகரிப்பது அத்தை மகள், மாமன் மகள் என முறைப்பெண்கள்தான். இங்கே நீங்கதான் முறைப்பெண்கள் என்று சின்னத்திரை நட்சத்திரங்களை கோபி நாத் சொன்ன உடன் இளம்பெண்களின் முகங்களில் வெட்கப்பூ பூத்தது.
இதைக் கேட்ட இளைஞர்களுக்கு வெட்கமோ வெட்கம். அட அதுவும் அழகாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வீரத்தை காட்ட தயாரானார்கள். பூமராங்.. வளரி என இளைஞர்கள் வீசி உற்சாகப்படுத்த 'ஊது கொல்லி' என்ற ஆயுதத்தை கொண்டு வந்து ஊதி பலூனை குறி பார்த்து உடைத்து பிரமிப்பை ஏற்படுத்தினார் ஒருவர்.
அட சூப்பரு.. நாங்களும் ட்ரை பண்றோம் என்று சொல்லி கோபிநாத் ஊத பலூனும் டப் என்று உடைந்து போனது. இன்று முதல் நான் ஊதுகொல்லி கோபிநாத் என்று அழைக்கப்படுவேன் என்று சொல்லி விட்டு சிரித்தார் கோபிநாத்.
அடுத்தது ஐடி கம்பெனி ஊழியர் போல இருந்த ஒரு இளைஞரை நிறைய முறைப்பெண்கள் தேர்வு செய்தனர். அவருடைய வெட்கம்தான் அல்டிமேட். அதை விட அவர் சுற்றி காட்டிய கர்லா கட்டை பிரம்மாண்டமாக இருந்தது. சாதாரணமாக அசைக்க கூட முடியாத ஒரு கர்லா கட்டையை அசால்டாக தூக்கி நிறுத்தினார் அந்த இளைஞர். அவர் ஆடிக்காட்டிய அடிமுறைக்கு பலருமே அடிமையானார்கள்.
இதனையடுத்து களறி சண்டை போட்டு வீர விளையாட்டை உற்சாகமாக கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து விளையாட வந்தார் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர். சிலம்பம், சுருள் சுற்றி சுண்டி இழுத்தார்கள் இளைஞர்கள். கடைசியில் வைத்த போட்டியில் புதுக்கோட்டை இளைஞரே அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். புதுக்கோட்டை இளைஞருக்கு பரிசு கொடுத்தார் கோபிநாத்.
இன்றைய தலைமுறையினரும் பாரம்பரிய கலைகளை கற்றுக்கொண்டு அதை பின்பற்றி வருகின்றனர் என்பதை பார்க்கும் போது தமிழர்களின் பாரம்பரியத்தை யாராலும் அழிக்கவோ, மறைக்கவோ முடியாது என்று பைனல் டச் கொடுத்தார் கோபிநாத்.












Click it and Unblock the Notifications