'டியூட்' இசை விழாவில் கல்லூரி முதல்வரை அவமதித்த பிரியங்கா? தமிழக அரசுக்கு எஸ்வி சேகர் வைத்த கோரிக்கை
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் 'டியூட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கல்லூரி முதல்வர் குறித்துத் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே பேசிய கருத்துகள் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. இந்த சர்ச்சையான வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து, இதுபோன்ற சினிமா நிகழ்ச்சிகளை கல்லூரிகளில் நடத்த அனுமதி கொடுத்ததற்குத் தமிழக அரசுக்குத் தடை விதிக்கக் கோரி வருகின்றனர்.

டியூட் விமர்சனம்
தமிழ் சினிமாவில் இரண்டே படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டியூட்'. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கீர்த்தீஸ்வரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படம், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்தாலும், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
நெகட்டிவ் கருத்துகள்
'டியூட்' படத்தில் சில காட்சிகள் அதிகப்படியான சினிமாத்தனமாகவும், கதைக்களத்தில் நம்பகத்தன்மை இல்லாமலும் இருப்பதாக சில விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் இளைஞர்களைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அதன் மையக்கருத்து சில இடங்களில் வலுவில்லாமல் இருந்ததாகவும் கருத்துகள் எழுகின்றன.
பிரியங்கா vs பாலு
'டியூட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அப்போதுதான் இந்தச் சர்ச்சை வெடித்தது:
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, விழாவுக்கு வந்த மாணவர்களைப் பார்த்து, "இந்தக் காலேஜின் டியூட் பையன் யாருப்பா?" என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து "பாலு, பாலு" என்று சத்தமாகக் கத்தினர். இதைக் கேட்ட பிரியங்கா, "பாலு, ஏய் பாலு, எங்கடா இருக்க பாலு, காலேஜில் பாலு யாருடா, பாலு டியூட்" என்று மீண்டும் மீண்டும் கத்தினார். அதன் பின்னர்தான் அவர், "சாய்ராம் நிறுவனர் பாலு சாரை தான் பாலு பாலுனு சொன்னீங்களா?" என்று கேட்டார்.
கொதித்தெழுந்த பிரபலங்கள்
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா, கல்லூரி முதல்வரை அவமதித்துவிட்டதாகக் கூறிப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற சினிமா நிகழ்ச்சிகளை கல்லூரிகளில் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது குறித்துத் தமிழக அரசையும் கல்லூரி நிர்வாகத்தையும் விமர்சித்தும் வருகின்றனர்.
ப்ளூசட்டை மாறன் விமர்சனம்
சினிமா விமர்சகர் புளுசட்டை மாறன் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "கல்லூரிகளில் சினிமா ப்ரமோஷன்களைத் தொடர்ந்து அனுமதித்து வந்தால்... அதன் முதலாளியும் இப்படி அவமானப்பட நேரும். சாய்ராம் கல்லூரி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த அடிக்கடி இடம் தருகிறது. அதற்கான அவப்பெயரையும் இப்போது பெற்றுவிட்டது. கல்வியை விழுங்கும் சினிமா வெறி" என்று பதிவிட்டுள்ளார்.
எஸ்.வி.சேகர் கோரிக்கை
நடிகர் எஸ்.வி.சேகர் இந்த விமர்சனத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், "அடுத்த தலைமுறை மாணவர்களைத் திசை திருப்பக்கூடிய தற்குறிகளாக மாற்றும் இப்படிப்பட்ட சினிமா நிகழ்ச்சிகளை கல்வித்துறை தடை செய்ய வேண்டும்" என்று முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களின் இந்தச் செயல்கள், கல்வி நிலையங்களின் மாண்புகளைக் குலைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், தமிழக அரசு இதுபோன்ற நிகழ்வுகள் குறித்துக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications