பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ரஞ்சித் பற்றி சொன்னது 100 சதவீதம் உண்மைதான்! பிரியா ராமன் ஓபன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொடங்கிய முதல் நாள் மேடையில் விஜய் சேதுபதி ரஞ்சித் பற்றி பேசியது குறித்து ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிகமான போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள்தான். இது விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரீட்சையமான நபர்களை இறக்குவதற்காக விஜய் டிவி ஸ்மார்ட் ஆக வேலை செய்திருந்தனர். ஆனால் அதுவே இப்போது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நடிகர் ரஞ்சித்தும் கலந்து கொண்டிருக்கிறார். ரஞ்சித் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். சிந்து நதி பூவே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஞ்சித் சமீபத்தில் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்திற்கு பிறகு தான் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைதளத்தில் தான் இவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள் என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் விஜய் சேதுபதி நான் உங்களுடைய தீவிரமான ரசிகர். ஆனால் சிந்துநதி பூவே திரைப்படத்தில் பார்த்த ரஞ்சித் கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு சர்ச்சைகளில் பேசியவர் கிடையாது. இதில் எது உங்களுடைய உண்மையான முகம் என்று கேள்வி கேட்டிருந்தார். இது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஞ்சித்தின் மனைவியான பிரியா ராமன் இதுபற்றி தன்னுடைய கருத்தை தனியார் youtube சேனல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் விஜய் சேதுபதி மீது எனக்கு துளி கூட கோபம் கிடையாது. எனது விஜய் சேதுபதியை அவ்வளவு பிடிக்கும். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் ரஞ்சித் பற்றி சொன்ன வார்த்தைகள் எல்லாமே உண்மைதான். ரஞ்சித்திடம் பழகி பார்த்தவர்களுக்கு அவருடைய உண்மையான கேரக்டர் தெரியும்.
அப்படித்தான் விஜய் சேதுபதியும் ரஞ்சித்தோடு பழகி இருக்கிறார். சினிமாவில் ரஞ்சித் ஆரம்பத்திலேயே வந்து இருக்கிறார். அவரிடம் விஜய் சேதுபதி இப்படி எல்லாம் பேசலாமா என்று கூட சிலர் பேசி வருகிறார்கள் அதெல்லாம் தவறு. அந்த இடத்தில் விஜய் சேதுபதியும் ரஞ்சித்தும் பேசிக்கொண்டது ஏற்கனவே இருவரும் நன்றாக தெரியும் என்ற ஒரு உரிமையில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய் சேதுபதியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொண்டு இருக்கிறார்.
நாம் பேசுவது எப்படி போகும்? எப்படி செய்ய வேண்டும் என்றும் அவருக்கும் பெரிய அளவில் அனுபவம் இருக்காது. அவர் இயல்பாக இந்த நிகழ்ச்சியை கொண்டு போக வேண்டும் என்றுதான் தனக்குரிய சந்தேகத்தை ரஞ்சித்திடம் கேட்டிருந்தார். அதற்கு ரஞ்சித்தும் தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருந்தார். அதாவது பீஷ்மர் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த திரைப்படத்தில் நீங்கள் காட்டிய முகம் வேறு. ஆனால் தற்போது கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு சர்ச்சைகளில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் விதம் வேறாக இருக்கிறது என்று விஜய் சேதுபதி கேட்டார்.
அவர் கேட்டதில் தப்பு எதுவும் கிடையாது. கவுண்டம்பாளையம் திரைப்படத்தை ரஞ்சித் இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் பேசிய விதம் வெளியே சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அப்படி பேசுவதற்கு காரணம் அந்த படத்தை நம்பி பலர் இருக்கிறார்கள் அவர்களுக்காகத்தான் அவர் அப்படி பேசினார்.... அது தவறு என்று ரஞ்சித் புரிந்து கொண்டார். அதனால் தான் மேடையில் கூட ரஞ்சித் நான் செய்தது தவறு என்று நான் புரிந்து என்று மன்னிப்பு கேட்டு இருந்தார்.
வயது வித்தியாசம் இல்லாமல் அவர் மன்னிப்பு கேட்டாரே இந்த குணம் தான் கடவுளுக்கு சமமானது. ரஞ்சித் உண்மையில் ஒரு குழந்தை போல தான். தன்னுடைய மனதில் பட்டதை சொல்லிவிடுவார். அதே நேரத்தில் கூட இருப்பவர்களின் நலனுக்காக அவர் பேசுவது அவருக்கு பிரச்சனையாகவும் ஆகி இருக்கிறது என்று பிரியா ராமன் அந்த பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications