அமைதிப்படை படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? யாருக்கும் வரக்கூடாத நிலைமை! பரிதாபம்
சென்னை: தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டியை சிரிப்புடனும் சாட்டையடிப்புடனும் சொல்லிய படங்களில் முதல் வரிசையில் இடம்பிடித்தது அமைதிப்படை. 1994-ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படம், இன்று வரை ரசிகர்களால் பேசப்படும் கல்ட் திரைப்படமாகவே இருந்து வருகிறது. இந்த படம் பேச பல வருடங்களுக்கு பிறகு இப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை பற்றிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமைதிப்படை பட நடிகை
அரசியலின் பின்னணி விளையாட்டுகளை நகைச்சுவை கலந்த காட்சிகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த படத்தில் சத்யராஜ் நடித்த "அமாவாசை" கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. இந்த படத்தில் மணிவண்ணனின் காதலியாக சிறிய வேடத்தில் நடித்திருந்த நடிகை தான் ஜெயா வாஹினி. தமிழில் "வாஹினி" என்ற பெயரில் நடித்த அவர், அந்த ஒரு காட்சியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
வாஹினியின் ஆரம்ப காலம்
வாஹினி ஆந்திராவைச் சேர்ந்த இவர், தமிழை விட தெலுங்கு திரையுலகில்தான் அதிகமாக செயல்பட்டார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்தாலும், தனது இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி பல திரைப்படங்களில் இடம்பிடித்தார்.

சீரியலில் நடிப்பு
வாஹினிக்கு திரைப்படங்களை விட டெலிவிஷன் சீரியல்கள்தான் அவருக்கு அதிகமான புகழை கொண்டு வந்தது. குறிப்பாக தெலுங்கு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தனி அடையாளம் பெற்றார். பல ஆண்டுகள் தொடர்ந்து சீரியல்களில் நடித்த அவர், ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக மாறினார். 2019-ஆம் ஆண்டு வெளியான "ரகுபதி வெங்கையா நாயுடு" போன்ற படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார்.
புற்றுநோய் பாதிப்பு
ஆனால், இவரது வாழ்க்கை திடீரென மாற்றம் கண்டது. மார்பகப் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட அவர், நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நோய் தீவிரமடைந்ததால் உடல் மிகவும் பலவீனமடைந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மருத்துவ செலவுகளுக்கே சுமார் 35 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில், அதை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பே வாஹினி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி உடனடியாக வெளிவரவில்லை. அவரது தோழி மற்றும் நடிகையான கராத்தே கல்யாணி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிறகே ரசிகர்களுக்கு இந்த சோகமான தகவல் தெரியவந்தது. அவரை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பலனளிக்கவில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்தில் "அமைதிப்படை" படம் மீண்டும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நேரத்தில், அதே படத்தில் நடித்த வாஹினியின் மறைவு செய்தி வெளிவந்தது திரையுலகை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் திரை மற்றும் சின்னத்திரையில் தன்னுடைய இடத்தை பிடித்திருந்த நடிகை, வாழ்க்கையின் இறுதியில் இப்படிப் பட்ட சிரமங்களை சந்தித்து அமைதியாக மறைந்துவிட்டது பலரையும் உருக்குகிறது.
சின்ன வேடமாக இருந்தாலும் மனதில் பதிந்த முகம்... அதுதான் வாஹினி. இன்று அவரை நினைவு கூரும் ரசிகர்கள், "அமைதிப்படை" போன்ற படங்கள் அவரை எப்போதும் மறக்காமல் வைத்திருக்கும் என்று கூறி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications