“தம்பி இந்த 3 நாளா.. உங்களை ரொம்ப தேடுறான் பா..” ரோபோ சங்கர் மகள் இந்திரஜா உருக்கமான பதிவு
சென்னை: கடந்த 3 நாட்களுக்கு முன் நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்த நிலையில், தனது தந்தையின் மறைவு குறித்து அவரது மகள் இந்திராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். "தம்பி இந்த 3 நாள் உங்களை ரொம்ப தேடுறான் பா.." என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் இந்திரஜா.
நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். மேடை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நடிகர் என ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய ரோபோ சங்கரின் திடீர் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமா மட்டும் இன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரிடமும் மிகுந்த அன்போடு பழகக்கூடிய ரோபோ சங்கரின் மறைவுக்கு பலரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ரோபோ சங்கர் மறைவு
ரோபோ சங்கர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், உடல் எடை குறைந்து மெலிந்து போய் காணப்பட்டார். ரோபோ சங்கர், உடல் நிலை சற்று தேறியிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர், உடல் பாகங்கள் செயலிழந்ததால் 18 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்திரஜா உருக்கமான பதிவு
இந்நிலையில், ரோபோ சங்கர் குறித்து அவரது மகள் இந்திரஜா வெளியிட்டுள்ள பதிவில், "அப்பா... நீங்கள் இல்லாமல் 3 நாட்கள் கடந்துவிட்டது. எங்களை நிறைய சிரிக்க வைத்ததும் நீங்க தான். இப்போ நிறைய அழ வைக்கிறதும் நீங்க தான். இந்த 3 நாள் எனக்கு உலகமே தெரியல. நீங்க இல்லாம நம்ம குடும்பத்த எப்படி கொண்டு போக போறோம்னு தெரியல. ஆனா நீங்க எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன் பா.
தம்பி இந்த 3 நாள் உங்களை ரொம்ப தேடுறான் பா. கண்டிப்பா நீங்க உங்க நண்பர்கள் மற்றும் அண்ணன்களோட மேல சந்தோஷமா தான் இருப்பீங்க. நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன் பா. கண்டிப்பா உங்களோட பொண்ணுங்குற பேர காப்பாத்துவேன். உங்களை பெருமைப்பட வைப்பேன். லவ் யூ.. மிஸ் யூ அப்பா..
உங்களை மாதிரியே
உங்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச போட்டோ இது. எல்லோருமே இந்த போட்டோ பாத்துட்டு அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கன்னு சொல்லுவாங்க. நான் எப்போதும் உங்கள மாதிரியே இருப்பேன் அப்பா.." என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்திரஜாவிற்கு பலரும் கமெண்ட்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா. அவருக்கும் அவரது மாமா கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா - கார்த்திக் தம்பதிக்கு மகன் பிறந்தார். இவருக்கு நட்சத்திரன் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் பேரனும் இந்திரஜாவின் மகனுமான நட்சத்திரனின் காது குத்து விழா செப். 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் அதற்குள் ரோபோ சங்கரின் மறைவால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications