ரோபோ சங்கர் இறப்புக்கு பிறகு, தந்தையின் ஆசையை நிறைவேற்றிய இந்திரஜா.. எளிமையாக நடந்த பங்க்ஷன்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஒரு தனி ஸ்டைலில் வந்து, பின்னர் வெள்ளித்திரையிலும் சிரிப்பால் ரசிகர்களை வசீகரித்தவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு மேடையில் அவர் முதலில் தோன்றிய காலத்திலேயே, "இவர் வேற மாதிரி" என்று மக்கள் கவனித்தார்கள்.
ரோபோ போல உடல் அசைவுகள், வேகமான டயலாக் டெலிவரி, முகபாவனைகள் - இவை எல்லாம் சேர்ந்து அவரை மிகவும் விரைவில் பிரபலமாக்கியது. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகள், பின்னர் சினிமா என அவர் எடுத்த ஒவ்வொரு படியும் ரசிகர்களின் ஆதரவோடு தான் சென்றது.
திரைப்படங்களில் சிறிய வேடமாக வந்தாலும் நினைவில் நிற்கும் விதத்தில் நடித்தவர் தான் ரோபோ சங்கர். காமெடி மட்டும் இல்லாமல், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நல்ல பெயர் வாங்கினார். மேடையில் எப்போதும் சிரிப்பை கொடுத்தாலும், வீட்டில் குடும்பத்தை சுற்றி வாழ்ந்த ஒரு மனிதர் என்பதையே அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

ரோபோ சங்கர் இறப்பு
யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல் நிலை அளவு குறைபாடு காரணமாக காலமானார். அவருடைய மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜா குறித்து பேசும்போது அவருடைய குரலில் வரும் மகிழ்ச்சி வேற லெவலில் இருக்கும். "என்ன சம்பாதிச்சாலும் இது தான் என் உலகம்" என்று குடும்பத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லி இருப்பார். குறிப்பாக இந்திரஜாவை அவர் ரொம்ப பாசமாக வளர்த்தார்.
இந்திரஜாவின் திருமணம் நடந்தபோது அவர் எடுத்த முயற்சி எல்லாம் இன்னும் பலருக்கும் நினைவில் இருக்கிறது. விழா மிகப் பெரிய அளவில் நடந்தது. சினிமா பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை பலரும் கல்யாணத்தில் கலந்து கொண்டனர். அலங்காரம் முதல் வரவேற்பு வரை ஒவ்வொன்றிலும் அவர் வைத்திருந்த அக்கறை ஒரு அப்பாவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மகளின் வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்த ஒவ்வொரு விஷயமும் அப்போது பேசப்பட்டது.
இந்திரஜாவின் திருமணம்
திருமணத்திற்குப் பிறகு பேரன் பிறந்ததும் அவர் கொண்ட சந்தோஷம் சொல்ல முடியாதது. பேட்டிகளில் கூட பேரனைப் பற்றி பேசும்போது குழந்தை மாதிரி மகிழ்ச்சியாகிப் போய்விடுவார். "நான் கதை சொன்னா கவனமா கேக்கிறான்... இவன் பெரிய ஆளாக வருவான்" என்று பெருமையாகச் சொல்லியிருந்தார்.
அப்படி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில்தான் அவர் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அதுவும் பேரனுக்கான காது குத்தும் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்து கொண்டிருந்த நிலையில், விழா நடக்க இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் இல்லாமல் போனது குடும்பத்துக்கே அல்ல, அவரை நேசித்த எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சந்தோஷ விழாவாக இருக்க வேண்டிய வீடு துக்கத்தில் மூழ்கியது.

தமிழக அரசு விருது
காலம் சில மாதங்கள் சென்ற பிறகும் அவரை பற்றிய நினைவுகள் குறையவில்லை. அந்த நேரத்தில் தமிழக அரசு வழங்கிய விருது அவரது பெயருக்கு கிடைத்தது குடும்பத்துக்கு ஒரு பெருமை. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அவர் செய்த காமெடி இன்னும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அந்த வேடத்திற்காக கிடைத்த அங்கீகாரம் அவர் உழைத்த காலத்துக்கு கிடைத்த மரியாதை என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அந்த விருதை அவரது மனைவி பேரனைத் தூக்கிக்கொண்டு சென்று பெற்றுக்கொண்டார். அந்த தருணம் பலரையும் நெகிழ வைத்தது. மேடையில் அவர் இல்லாத வெற்றிடம் மிகவும் உணரப்பட்டது. இதைப் பற்றி இந்திரஜா பேசும்போது, "அப்பா இருந்திருந்தா இந்த நாளை நாங்க ரொம்ப சந்தோஷமா கொண்டாடியிருப்போம்... இப்போ அவர் இல்லாதது தான் மனசுக்குப் பெருசா இருக்கு. ஆனா அவருக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எங்களுக்கு பெருமை" என்று சொன்னது பலரையும் கண்கலங்க வைத்தது.
குழந்தைக்கு மொட்டை
இந்த நிலையில் தற்போது, இந்திரஜா முன்பே திட்டமிட்டபடி தனது மகனுக்கு மிகவும் எளிமையான முறையில் காது குத்தி மொட்டை அடித்திருக்கிறார். அந்த விழாவில் கூட அப்பாவின் நினைவு தான் அதிகமாக இருந்தது. அந்த வீடியோவை வெளியிட்டபோது ரசிகர்கள் எல்லாம் ரோபோ சங்கரை நினைத்து கமெண்ட் செய்தது, அவர் எவ்வளவு பேரின் மனதில் இருக்கிறார் என்பதைக் காட்டியது.












Click it and Unblock the Notifications