ரோபோ சங்கர் மனைவி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. கண்ணீர் விட்ட மேக்கப் ஆர்டிஸ்ட்! இப்படியுமா பேசுவாங்க?
சென்னை: நகைச்சுவையால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர், இன்று இல்லாவிட்டாலும் அவரை பற்றிய நினைவுகள் இன்னும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இருக்கின்றன. அவரது திடீர் மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக, அவரது குடும்பம் அந்த இழப்பில் இருந்து மீண்டு வர போராடிய விதம் பலரையும் கலங்க வைத்தது.
இந்த நிலையில், மேக்கப் ஆர்டிஸ்ட் ஸ்ரீதேவி சமீபத்தில் பகிர்ந்த உருக்கமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நெகட்டிவ் கமெண்ட்ஸ்
அவர் கூறியதாவது, ரோபோ சங்கரின் மறைவுக்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சிக்காக பிரியங்கா சங்கர் கடவுள் வேடத்தில் கலந்து கொண்டாராம். அந்த லுக்கிற்கான மேக்கப்பை ஸ்ரீதேவிதான் செய்திருக்கிறார். வெறும் ஒரு மணி நேரத்தில் பிரியங்காவை முழுக்க கடவுள் ரூபத்தில் மாற்றிய அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானதாம்.
ஆனால் அந்த வைரலே பின்னர் வேதனையாக மாறியதாக ஸ்ரீதேவி கூறியுள்ளார். ரோபோ சங்கரின் மறைவுக்கு பிறகு, சிலர் சமூக வலைதளங்களில் "கடவுள் வேஷம் போட்டதால்தான் இப்படி நடந்தது" என்ற வகையில் அவதூறாக கமெண்ட்ஸ் போட்டார்களாம். சம்பவத்துக்கும் அந்த மேக்கப்புக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் கூட, பிரியங்காவை குறிவைத்து தேவையற்ற விமர்சனங்கள் வந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த பிரியங்கா சங்கர்?
பல வருடங்களாக ரோபோ சங்கருக்கு துணையாக நின்றவர் பிரியங்கா. சினிமா வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், உடல்நல பிரச்சனைகள், குடும்ப சவால்கள் என எல்லாவற்றிலும் அமைதியாக அவருக்கு பக்கபலமாக இருந்தவர். இப்போது அந்த இழப்பை தாங்கி மகள் இந்திரஜாவுக்காக தைரியமாக நிற்கிறார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அப்பாவின் நகைச்சுவை சாயலும், அம்மாவின் எளிமையும் சேர்ந்த முகமாக ரசிகர்கள் அவரைப் பார்க்கிறார்கள்.
உடைந்த பிரியங்கா
ரோபோ சங்கர் மறைந்த பிறகு, பிரியங்காவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றதாக ஸ்ரீதேவி கூறியுள்ளார். "அதுவரை நான் அவரை எப்போதும் மங்களகரமாகத்தான் பார்த்திருந்தேன். ஆனால் அந்த நாளில் அவர் இருந்த நிலையை பார்க்கவே முடியவில்லை. அந்த கோலம் என்னை உடைத்துவிட்டது" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார். அப்போது பிரியங்கா தன்னிடம் கேட்ட ஒரு கேள்விதான் அவரை முழுமையாக உடைத்துவிட்டதாம்.
பிரியங்கா சங்கர் கேட்ட கேள்வி
நான் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தபோது அவர் என்னுடைய கைகளை பிடித்துக் கொண்டு இனி நான் சாமி வேடம் போடவே முடியாதா மேடம் என்று கேட்டாங்க. இந்த ஒரு கேள்வியை கேட்டதும் தன்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அங்கேயே அழுதுவிட்டதாக ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர் குடும்பம் அனுபவித்த வேதனை
திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கரின் குடும்பம், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய வேதனையை சந்தித்திருப்பது பலரையும் கலங்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பலர், "ஒருவரின் துயரத்தில் இப்படிப்பட்ட கமெண்ட்ஸ் தேவையா?", "பிரியங்காக்கு மன வலிமை கிடைக்க வேண்டும்", "இந்திரஜாவுக்காகவாவது அவர் வலிமையாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு குடும்பம் தங்களுடைய அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் நேரத்தில், காரணமில்லாத குற்றச்சாட்டுகள் எவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டியுள்ளது.













Click it and Unblock the Notifications