ரூ.200 கோடி.. விளம்பரம் பண்ணும் கவர்ச்சி நடிகைகள்.. ஈமுகோழி சத்யராஜ் ஞாபகமிருக்கா? கிளம்பிய கோரிக்கை
சென்னை: எந்தவொரு பொருளையும் வாங்கு, வாங்காதே என்று சொல்ல நடிகர், நடிகைகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? பிரபலம் என்ற கவர்ச்சி அடையாளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, பொதுமக்களிடம் ஒரு பொருளை பற்றி விளம்பரம் செய்வது மோசடி.. இவர்களுக்கெல்லாம் யாரிந்த அதிகாரத்தை தந்தது? என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா. அத்துடன், இதுகுறித்த முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அசோகன் (70). இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அசோகன், பல்வேறு தவணைகளில் ரூ.98 லட்சத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில், சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிந்து, மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை கடந்த 26ம் தேதி கோவையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரபல நடிகைகளை அழைத்து வந்து, விளம்பரப்படுத்தி முதலீடுகளை ஈர்த்துள்ளனர்..
2 நடிகைகள் மீது புகார்
முதலீடு செய்த 100 பேருக்கு நடிகைகளை வைத்து கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். இதற்காக ஒரு நடிகைக்கு ரூ.25 லட்சமும், மற்றொரு நடிகைக்கு ரூ.18 லட்சமும் லட்சக்கணக்கில் பணம் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்று தமன்னா கூறியிருக்கிறார். "என் மீது சுமத்தப்படும் கிரிப்டோகரன்சி மோசடி குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்ற புரளிகளை சில ஊடகங்கள், பொதுமக்கள் பரப்ப வேண்டாம். இந்த செய்தி என் கவனத்திற்கு வந்தது, அதனை தொடர்ந்து இந்த பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என ஊடக நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன். என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்களை, புரளிகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுப்பேன்" என்றார்.
தமன்னா 100 கோடி மோசடி, ரூ.60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி, 2.4 கோடி மோசடி என ஒவ்வொரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கை, அமலாக்கத்துறைக்கு மாற்ற புதுச்சேரி மாநில போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கவர்ச்சி மட்டுமே நம்பிக்கை
இந்நிலையில், Realone யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ஒரு புராடக்ட்டை மார்க்கெட்டிங் செய்வதற்கு எதற்காக நடிகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்? என்பதைதான் முதலில் ஆராய வேண்டியிருக்கிறது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே, எளிய மக்கள் ஈஸியாக ஈர்க்கப்படக்கூடியவர்கள். இதையே தவறாக பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட புராடக்ட்டை மார்க்கெட் செய்ய சொல்வது தவறு.. இது மோசமான போக்கு.. இந்தியாவில்தான் இப்படியான கேவலங்கள் நடந்துட்டு இருக்கு.
நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், நடிப்பு சார்ந்த விஷயங்களை பற்றியும் பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால், வெறும் கவர்ச்சியை மட்டுமே நடிகைகள் வைத்துக் கொண்டு, சாதாரண மக்களிடம் சென்று, "உங்கள் பணத்தை இதில் முதலீடு செய்யுங்கள்" என்று கேன்வாஸ் செய்வதை சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
சத்யராஜ் சொன்ன ஈமு கோழி
இந்த பிரபலங்கள் யாராவது, அதில் நேரடியாக முதலீடு செய்திருக்கிறார்களா? நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இவர்களும் கையெழுத்து போட்டிருக்கிறார்களா? இவர்கள் முதலீடு செய்யாமல் பொதுமக்களை ஏன் முதலீடு செய்ய சொல்றீங்க? ஒரு நிறுவனத்தின் உணவை பிரபலங்கள் சாப்பிடாமல், மக்களை ஏன் சாப்பிட சொல்றீங்க?
சத்யராஜ் இப்படித்தான் ஈமு கோழியில் முதலீடு செய்ய சொன்னார்.. உடனே எத்தனையோ பேர் ஈமு கோழியில் பணத்தை கொட்டினார்கள்.. கடைசியில் அந்த கோழிகள் இறந்து, பலரும் பணத்தை இழந்து நடுரோட்டில் வந்து நின்றார்கள்.. ஈமுவின் கழிவுகளைகூட விற்கலாம் என்று மீண்டு பிசினஸ் செய்தார்கள்.. நியாயப்படி பார்த்தால், ஈமு கோழி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டுக்கே போயிருக்கணும்.
கவர்ச்சி அடையாளத்தில் விளம்பரம்
இவர்கள் யார் மக்களை வாங்கு, வாங்காதே என்று சொல்வதற்கு? மற்ற துறைகளில் உள்ளவர்கள் இப்படித்தான் செய்கிறார்களா? நடிகர், நடிகைகள் என்ற கவர்ச்சி அடையாளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, நகையை ஒரு கடையில் வாங்க சொல்றாங்க, இன்னொரு கடையில் அடமானம் வைக்க சொல்றாங்க? இவர்களுக்கெல்லாம் யாரிந்த அதிகாரத்தை தந்தது? உங்கள் வேலை என்ன?
எத்தனையோ பால் பாக்கெட்கள் இன்று வந்துவிட்டன. ஆனால், அரசு நடத்தும் ஆவின் பாலுக்கு இதுவரை பிரபலங்கள் விளம்பரம் செய்திருக்கிறார்களா? எத்தனையோ தனியார் நிறுவனங்கள், சினிமா நபர்களை நம்புவதே கிடையாது.
இதுக்கு ஒரு முடிவு கட்டணும்
15 வருடங்களுக்கு முன்பு, சரவணா ஸ்டோஸ் அண்ணாச்சி, நேரடியாகவே தன்னுடைய கடை விளம்பரத்தில் குதித்தார்.. அவரது துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பாராட்டணும். கூலிக்கு வேடதாரிகளை அழைத்து வந்து விளம்பரம் செய்வதெல்லாம் மோசடி.. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.
எனவே, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மற்றும் நீதிமன்றம் இதனை தானாகவே முன்வந்து விசாரிக்கணும். நடிகர்கள், நடிகைகள் விளம்பரப்படுத்தும் பொருட்களில் ஏதாவது சிக்கல் வந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட பிரபலங்களே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். அக்ரிமென்ட்டில் கையெழுத்து இல்லாமல், மார்க்கெட்டிங்கும் செய்யக்கூடாது என்ற உத்தரவை கோர்ட் பிறப்பிக்கணும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்












Click it and Unblock the Notifications