SA Chandrasekhar: மக்கள் இனி அரசியலில் மாற்றத்தை எதிர்பாக்குறாங்க! சரத்குமார், பிரேமலதா முன்பு SAC பேச்சு
சென்னை: நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமாக இருந்த விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனரும் நடிகர் விஜய்யின் அப்பாவும் ஆன எஸ் ஏ சந்திரசேகர் கலந்து கொண்டார். அவர் பேசிய பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் புதிய ஒரு கதைக்களத்துடன் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். விஜயகாந்த் பல புதுமுக நடிகர்களுக்கு சப்போர்ட்டாக நடித்து பிரபலப்படுத்தியது போல இப்போது விஜயகாந்தின் மகனுக்கு சரத்குமார் சப்போர்ட் கொடுத்து இருக்கிறார்.

தனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது விஜயகாந்துதான் என்று பல இடங்களில் பேசி இருக்கும் சரத்குமார் இப்போது விஜயகாந்த் இடத்தில் சண்முக பாண்டியனுக்கு தோள் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த பல பிரபலங்கள் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு நிகழ்ச்சியில் பேசத் தொடங்கி இருந்தனர். அப்போது எஸ்.ஏ சந்திரசேகரும் வந்திருந்தார்.
விஜயகாந்தை வைத்து அவர் கிட்டத்தட்ட 18 படங்களை இயக்கியிருக்கிறார். சந்திரசேகர் கேட்டுக்கொண்ட ஒரே வார்த்தைக்காகவே விஜய் உடன் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அதற்கு கைமாறாக இப்போது கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சந்திரசேகர் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் பற்றி பெருமையாக பேசி இருந்தார்.
அதில் அவர் பேசும்போது, இந்த படத்தில் நடித்த ஹீரோவும் ஒரு இளைஞர். அவருடன் நடித்த சரத்குமாரும் ஒரு இளைஞர். படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவும் ஒரு இளைஞனாக இருக்கிறார். இதனால் புதிய வேகத்துடன் இந்த படத்தில் எல்லோரும் வந்திருக்கிறார்கள் இது ஒரு சரித்திரமாக இருக்கிறது. அது உலகத்திற்கே உண்டான சரித்திரம். பொதுவாக மாற்றம் மட்டும் மாறாதது என்று எல்லோரும் சொல்வார்கள் அது எல்லாத் துறையிலும் உண்டானது.
சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி, திரையுலகிலும் சரி இந்த மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது. திரை உலகத்தை எடுத்துக் கொண்டால் எம்கே பாகவதர் அதற்குப் பிறகு எம்ஜிஆர்- சிவாஜி இவர்களை அடுத்து ரஜினி- கமல் இவர்களை இடுத்து இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என்று மாறிக்கொண்டே வந்தது. அது காலத்தின் கட்டாயம் தான்.
இப்படி மாறிக்கொண்டிருந்தால்தான் மக்களும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆக இந்த மாற்றத்திற்கு உரிய இளைஞர்கள் வெற்றிபெற வேண்டும் ஏனென்றால் இந்த இளைஞர்களும் சரி, மக்களும் சரி ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் ஏற்பட வேண்டும் என வேண்டுகிறேன் என எஸ் ஏ சந்திரசேகர் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சரத்குமார் மற்றும் பிரேமலதா முன்பு என்னுடைய மகனின் அரசியலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எஸ் ஏ சந்திரசேகர் சொல்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications