45 பவுன் நகையை திருப்பி கொடுத்த நேர்மை.. தூய்மை பணியாளர் சீருடை பாராட்டு எதற்கு? ஓபனாக பேசிய பத்மா
சென்னை: சில நாட்களுக்கு முன்பு, தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா குப்பையில் கிடைத்த 45 பவுன் தங்க நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் பாராட்டுகளை பெற்றது. தினமும் பலர் கவனிக்காமல் கடந்து போகும் இடங்களில் பணியாற்றும் ஒருவர், இவ்வளவு மதிப்புள்ள நகையை நேர்மையோடு ஒப்படைத்தது சமூகத்தில் மனிதநேயத்தை மீண்டும் நினைவுபடுத்திய ஒரு நிகழ்வாக மாறியது.
இந்த சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் பத்மாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்கச்செயின் வழங்குவதாக அறிவித்தது பலரையும் நெகிழ வைத்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் - இயக்குநர் பார்த்திபன் பத்மாவை நேரில் சென்று சந்தித்து பாராட்டியதோடு, ஒரு கல்லூரி விழாவிற்கும் அழைத்து சென்று மேடையில் கௌரவித்தார்.
எத்திராஜ் கல்லூரி உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பத்மா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதும் பெரிதாக பேசப்பட்டது.

யூனிஃபார்ம்லேயே வரச் சொல்றாங்க
பத்மாவுக்கு கிடைத்த இந்த பாராட்டுகளுக்கு நடுவில், சமூக வலைதளங்களில் ஒரு விவாதமும் எழுந்தது. இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட சிலர், "ஒரு தூய்மை பணியாளரை பாராட்டும் போது கூட அவர்களை அவர்களது வேலை யூனிஃபார்ம்லேயே தான் அழைக்கிறோம். ஏன் அவர்களை ஒரு சாதாரண மனிதராக, வேறு உடையில் அழைத்து கௌரவிக்கக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி, சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
பத்மாவின் நேரடி பதில்
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், பத்மா சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
"நான் எங்கே போனாலும், ஏன் இதே உடை போட்டு தான் கூப்பிட்டு பாராட்டுறாங்கன்னு நிறைய பேர் கேக்குறாங்க. ஆனா இந்த யூனிஃபார்ம் தான் என்னோட அடையாளம். எத்திராஜ் கல்லூரி விழாவுக்கு கூட போனேன். அதற்கு பார்த்திபன் சார் வீட்டுக்கே வந்து, 'புது புடவை எடுத்துக் கொடுத்து கட்டிட்டு வாங்க'ன்னு சொன்னார்.
ஆனா நான் 'இல்லை சார், நான் என் யூனிஃபார்ம்லேயே தான் வருவேன். இதுதான் என்னோட அடையாளம். இதைப் போட்டா தான் நான் யாருன்னு எல்லாருக்கும் தெரியும்'ன்னு சொன்னேன். அதனால தான் எங்க போனாலும் இந்த உடையோடத்தான் போறேன்."
பத்மாவின் இந்த பதில், சமூகத்தில் ஒரு புதிய பார்வையை உருவாக்கியது. "வேலை என்பது அவமானம் அல்ல, அடையாளம்" என்பதையே அவர் இந்த ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார் என பலர் பாராட்டினர்.
சாதாரண மனிதர்களும் ஹீரோக்கள்தான்
பத்மாவின் இந்த சம்பவம், சமூகத்தில் தினமும் கவனிக்கப்படாமல் உழைக்கும் பலர், உண்மையில் எவ்வளவு பெரிய மனம் கொண்டவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பணம், புகழ், அந்தஸ்து இல்லாத மனிதர்களிடமிருந்தும் மனிதநேயத்தின் மிகப்பெரிய பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு பத்மா ஒரு உயிருள்ள உதாரணமாக மாறியுள்ளார்.
நேர்மை தான் பெரிய சொத்து
45 பவுன் நகையை திருப்பி கொடுத்தது, அதன்பின் கிடைத்த புகழ், கௌரவங்கள் - இவை எல்லாவற்றுக்கும் மேலாக, "நான் யார் என்பதைக் காட்டும் என் வேலை உடையை விட்டுவிட விரும்பவில்லை" என்று பத்மா சொன்னது, அவருடைய தன்மையை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது.
பலரும் சமூக வலைதளங்களில், "பத்மா போன்ற மனிதர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்", "சினிமா ஹீரோக்கள் போல் மேடையில் கௌரவிக்கப்படும் ஒரு சாதாரண பெண்" என உணர்ச்சி பொங்க பதிவுகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications