சரிகமபவில் திவினேஷ் இடத்தை பிடித்த அபிஷா.. ஒரே நாளில் நடந்த சம்பவம்! விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 5 நிகழ்ச்சி இந்த சீசனிலும் குட்டி குழந்தைகளின் அபாரமான திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் மேடைக்கு வரும் போட்டியாளர்கள் தங்கள் குரலால் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்க, கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் அபிஷா பாடிய ஒரு பாடல் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டவுன் பஸ் ரவுண்டு
இந்த வாரம் நடைபெற்ற டவுன் பஸ் ரவுண்டில், பழைய கால பஸ்களில் ஒலித்த ரசிகர்களின் மனதில் பதிந்த பாடல்களை குழந்தைகள் பாடி இருந்தனர். அப்போது அபிஷா "வெட்டி வேரு வாசம்" பாடலை பாடினார். ஆரம்பித்த சில விநாடிகளிலேயே மேடையில் இருந்தவர்களும், நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மெய்மறந்து போனார்கள். அந்த குரலில் இருந்த தெளிவு, பாவனை.. ஒரு பெரிய பாடகி பாடுவது போலவே இருந்தது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பு விருந்தினர் விஜய் ஆண்டனி
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் ஆண்டனியும் அந்த பாடலை கேட்டு மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். "நான் ரொம்ப நாட்களாக பாடவே இல்லை... ஆனா இந்தக் குழந்தையுடன் சேர்ந்து இந்த பாடலை பாடணும் போல இருக்கு" என்று சொல்லி மேடைக்கு வந்தது அந்த தருணத்தை இன்னும் சிறப்பாக்கியது. பிறகு நடுவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபிஷாவுடன் சேர்ந்து விஜய் ஆண்டனி பாடிய காட்சி அரங்கையே கைதட்ட வைத்தது. அந்த நேரத்தில் அபிஷாவின் பெற்றோர் கண்கலங்கி பார்த்துக் கொண்டிருந்தது பலரையும் உருக்க வைத்தது.

கோல்டன் பெர்பார்மன்ஸ்
பாடல் முடிந்ததும் அபிஷாவுக்கு கோல்டன் பெர்பார்மன்ஸ் ஷவர் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில், "சரிகமபா சீசன் 4-ல் திவினேஷ் டைட்டில் வென்றது போல இந்த சீசனில் அபிஷாதான் வின்னர்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திவினேஷின் இடம்
சரிகமபா மேடை ஒவ்வொரு சீசனிலும் பல குழந்தைகளின் உண்மை திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. வயதுக்கு மீறிய குரல், பழைய கால பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் பாவனை - இவை தான் இந்த நிகழ்ச்சியின் பலம். கடந்த சீசனில் திவினேஷ் தன் தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதை வென்றது போல, இந்த சீசனில் அபிஷா அந்த இடத்தை பிடித்துவிட்டார் என்ற பேச்சு இப்போது அதிகமாக கேட்கிறது.
ஒரு பாடல், ஒரு தருணம் - ஒரு குழந்தையின் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. சரிகமபா சீசன் 5-ல் அபிஷாவின் இந்த நிகழ்ச்சி நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் தருணமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications