SaReGaMaPa: 10 வருட காதல்! சின்ன தவறால் பறிபோன கணவர் உயிர்.. சரிகமப-க்கு பிறகு மாறிய வாழ்க்கை! கண்ணீருடன் பவித்ரா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா தன்னுடைய கணவருடைய இறப்பு எப்படி நடந்தது, அந்த இறப்பிற்கு பிறகு நடந்த சம்பவங்கள் என பல விஷயங்களை உருக்கமாக பேசியிருக்கிறார். அதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
சமீப காலமாகவே சீரியலுக்கு மாற்றாக பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்து வருகிறது. அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாடல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல போட்டியாளர்களுடைய பின்புலமும் தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போட்டியாளர்களுடைய சொந்த கதை மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் பட்ட துயரங்களை மேடைகளிலும் பேசி இருக்கின்றனர். அதேபோல சரிகமப நிகழ்ச்சியில் பிரபலமான பவித்ரா தன்னுடைய கணவர் இறப்பு குறித்து மேடையில் பலமுறை பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கிராண்ட் பினாலேவில் இவருக்கு இனிமையான குரலுக்கான விருதும் வழங்கப்பட்டது. டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பவித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
பவித்ரா அவருடைய கணவரின் இறப்பிற்கு பிறகு ஒரே மகளை ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்து வருகிறார். உறவினர்கள், குடும்பத்தினரின் உதவியால் தான் சரிகமப நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் கூட தன்னுடைய கணவர்தானாம். அவர் நீ எப்படியாவது ஒரு பாடகியாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம் அந்த ஆசையை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று பவித்ரா பகிர்ந்திருக்கிறார்.
மேலும் பவித்ரா பேசும்போது நானும் என்னுடைய கணவரும் 10 வருடங்களாக காதலித்தோம். ஆரம்பத்தில் எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் அவர் என்னை நீங்க வாங்க என்றுதான் சொல்லுவாரு. அதற்கு பிறகு எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு நீ வா போ என்று பேசினார். முதலில் எங்க கல்யாணத்திற்கு குடும்பத்தில் சம்மதிக்கவில்லை என்றதால் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் எங்களுக்கு கல்யாணம் ஆனது என்று பெருமையுடன் பவித்ரா பேசி இருக்கிறார்.
காதல் கல்யாணம்
கல்யாணத்திற்கு பிறகு பவித்ராவின் கணவர் பெயரை சொல்லி கூப்பிட்டதே கிடையாதாம். தெய்வம் என்று தான் கூப்பிடுவாராம். தெய்வம் வாங்க போங்க என்று சொல்லுவாரு என்று சிரித்தபடியே பவித்ரா பேசியிருக்கிறார். நான் கூட கிண்டல் பண்ணுவேன் ஆனால் அவர் நீங்க எப்போதுமே எனக்கு தெய்வம் என்று சொல்லி அவர் இப்போ தெய்வம் ஆகிட்டாரு என்று பேசும்போதே பவித்ரா கண்கலங்கி இருக்கிறார்.
அதோடு மேலும் அவர் குரலை சரி செய்துவிட்டு பேசியிருந்தார். அப்போது என்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு அவங்க நினைவுகளில் இருந்து மீண்டு வாங்க என்று எல்லோரும் சொல்லுறாங்க.. அது எப்படி மீண்டும் வர முடியும் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய கணவர் இறந்த அன்று முழுக்க நாங்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். வெளியே போயிட்டு சாப்பிட்டு சந்தோஷமாக வீட்டுக்கு வந்தோம்.
பரிதவிப்பு
பிறகு அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருடைய கம்பெனியில் இருந்து போன் வந்தது. நான் தான் அவரை எழுப்பி போனை கொடுத்தேன். அதுதான் இப்ப வரைக்கும் எனக்கு உறுத்தலாக இருக்கிறது. நான் அதற்கு முன்பு அவர் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பவே மாட்டேன். அவராக தான் எழுந்திருப்பாரு. அன்னைக்கு நான் ஏன் அவரை எழுப்பினேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
டாக்டர் சொன்ன வார்த்தை
அவருக்கு ஆக்சிடென்ட் ஆனதும் என்னுடைய தம்பி எனக்கு போன் செய்தான், பிறகு நாங்கள் ஹாஸ்பிடலுக்கு நடுக்கத்தோடு பயந்தபடி போனேன். அங்கு நான் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் போது, நான் தான் அவருடைய மனைவி என்று தெரியாமல் ஒரு நர்ஸ் வந்து பவித்ரா என்பது யாரு அவங்க அம்மாவா என்று கேட்டார்கள். அதற்கு அங்க இருந்தவங்க இல்ல அவங்க பொண்டாட்டி தான் என்று சொல்லவும் அவங்க இரத்தத்தை துடைக்க துடைக்க பவித்ரா என்கிற பெயரை வந்துட்டே இருக்கு என்று சொன்னாங்க. அவர் உடம்பில் 17 இடத்தில் பவித்ரா என்று என்னுடைய பெயரை பச்சை குத்தி வைத்திருந்தார்.
வருத்தம்
அப்போ ஒரு டாக்டர் வந்து முடிஞ்சிடுச்சின்னு சொன்னாரு. அதை என்னால் நம்ப முடியல. என்ன முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்களே என்று குழப்பத்தில் இருந்தேன். அவர் இல்லை என்பதை என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய உடம்ப கூட நான் தொட்டு பாக்கல, என்னால் அதற்கு தைரியம் இல்லை. அந்த வருத்தம் இப்போ எனக்கு அதிகமா இருக்கு என்று கண்ணீரோடு பவித்ரா பேசியிருந்தார். சரிகமப நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ராவிற்கு அதிகமான பிரபலம் கிடைத்திருக்கிறது. இவருக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications